பட மூலாதாரம், ANI
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடிகர் அஜித் திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்.
இதனிடையே, தமிழ்நாட்டு மக்கள் சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்ய வேண்டும் என, பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ளார்.
அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை:
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 57,343,291 ஆகும்
ஆண்கள்: 2,80,30,658
பெண்கள்: 2,93,04,905
மூன்றாம் பாலினத்தவர்: 7,728