தமிழ் திரை உலகில் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக அதிரடியாக நடித்திருக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ எனும் திரைப்படம் – இன்றைய சமகாலத்து சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அழுத்தமாக பேசும் படைப்பு என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் பாபு விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிவி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாபு விஜய் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஏ .ஆர். முருகதாஸ்- சசி, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தொழிலதிபர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தின் நாயகன் நடிகர் ஜெய் பேசுகையில், ” இப்படத்தின் கதையை இயக்குநர் பாபு விஜய் சொன்னதும் எமக்கு பிடித்தது. இப்படத்தின் முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சாரின் ரசிகர்களுடைய அனுபவத் தருணங்கள் இருக்கும். அதாவது உடல் மொழி.. வசன உச்சரிப்பு ..இவற்றில் எல்லாம் அவரின் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு தளத்தில் பயணிக்கும். இந்தக் கதை அறிமுக இயக்குநருக்கு சவாலானது தான். கதைக்குத் தேவையான ஹீரோயிஸத்தையும் , கதையையும் சமநிலைப்படுத்தி இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையையும் இயக்குநர் விவரித்திருக்கிறார். இந்த படத்தை நீங்கள் படமாளிகையில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
The post சமகால பிரச்சனைகளை உரத்துப் பேசும் ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ appeared first on Vanakkam London.