6
சீனா, ரஷ்ய தலைவர்களான ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (20) நடைபெறுகிறது. சர்வதேச அரசியல் சூழ்நிலையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சந்திப்பு, உலக சக்தி சமநிலைகளில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு வெறும் இராஜதந்திர நிகழ்வாக மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால், “பழைய நண்பர்கள்” என்ற அடையாளத்துடன் தேநீர் அருந்தியபடி தனிப்பட்ட மற்றும் நெருக்கமான கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளனர் என சீனாவின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் மேற்கொண்ட சீன விஜயத்தைத் தொடர்ந்து ரஷ்ய தலைவர் புட்டின், சீனா செல்வது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த சந்திப்பு உலகளாவிய அரசியல் மற்றும் புவிசார் அரசியல் நோக்கில் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது.
அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார கொள்கைகள் உள்ளிட்ட பல துறைகளில் பரஸ்பரம் வேறுபட்ட நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் உலகின் முக்கிய சக்தி மையங்களின் தலைவர்கள் அடுத்தடுத்து பெய்ஜிங்கிற்கு விஜயம் மேற்கொண்டிருப்பது, தற்போதைய பிளவுபட்ட உலக ஒழுங்கில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச அரசியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பிராந்திய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் உலகளாவிய அதிகார சமநிலைகள் குறித்து முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.