பெருநகர சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாரான பி.எஸ். மாதவி பளிர் நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிய காரணத்திற்காகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பணியிட மாற்றத்திற்கு ஆளாகியுள்ள மாதவி தற்போது ஆவடியில் இருந்து மணலி மண்டலத்தில் அமைந்திருக்கும் அலுவலத்திற்கு கடந்த ஒரு மாதமாக பணிக்குச் சென்று வருகிறார். நாள் ஒன்றுக்கு மொத்தமாக 70 கி.மீ பயணம் செய்து வருவதாகவும், எதிர்த்துக் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக இவ்வாறு தண்டிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் மாதவி.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பணிக்கு தொடர்ச்சியாகத் தாமதமாக வந்தது, எச்சரித்தும் சரிசெய்து கொள்ளாததே பணியிட மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறியவர், மாதவியின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.
உதட்டுச்சாயம் பூசியதற்காக ஒருவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவது உண்மையா? சென்னை பெருநகர மாநகராட்சி தரப்பில் தரப்பட்டுள்ள விளக்கம் என்ன?
யார் இந்த மாதவி?
ஆவடியைப் பூர்வீகமாகக் கொண்ட மாதவி (50) கடந்த 15 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வருகிறார். சென்னையின் மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருக்கு பெண் தபேதார் தேவை என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பதவிக்கு மாதவி நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த மார்ச் 8ஆம் தேதியன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற பெண்கள் தின கொண்டாட்டத்தின்போது, “ஃபேஷன் ஷோ” நடத்தப்பட்டது. “அதன் பிறகே தான் உதட்டுச்சாயம் போட்டுக்கொள்வது ஒரு பிரச்னையாக மாறியதாக,” மாதவி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் தினத்தன்று ஃபேஷன் ஷோ நடத்தப்படும். கொண்டாட்டத்தின்போது பெண்கள் அங்கே ‘கேட் வாக்’ செய்வது வழக்கம். இந்த முறை அதை நான் செய்தபோது, சென்னை மேயர் ரா.பிரியா நிகழ்வின் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார். பிறகு, என்னைத் தனியாக அழைத்து ஏன் அவ்வாறு கேட் வாக் செய்தாய் என்ற கேள்வி கேட்டுவிட்டு, அதுகுறித்துப் பிறகு ஏதும் பேசவில்லை.
ஆனால் அவருக்கு நேரடி உதவியாளராக இருக்கும் சிவசங்கர், அடுத்த சில நாட்களில் உதட்டுச்சாயம் பூசும் பெண்கள் அனைவரையும் அழைத்து இதுபோன்று பளிர் நிறங்களில் உதட்டுக்குச் சாயம் பூசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்,” என்று விவரிக்கிறார் மாதவி.
“என்னுடைய உடல், என்னுடைய உரிமை. நான் என்னுடைய பணியை சரியாக செய்யவில்லை என்று ஏதேனும் துறைசார் நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கு நான் கட்டுப்படுவேன்” என்று கூறும் மாதவி,
ஒரு பெண் எதை அணிய வேண்டும்? எந்த நிறத்தில் உதட்டுச்சாயம் பூசிக்கொள்ள வேண்டும் என்று எல்லாம் உத்தரவு பிறப்பிக்க இவர்கள் யார்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
ஒரே நாளில் பணியிட மாற்றம்
இருப்பினும் தான் இதைப் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் தன்னுடைய பணியை மேற்கொண்டு வந்ததாகக் கூறுகிறார் மாதவி.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று காலை 10.30 மணிக்கு மேயர் அலுவலகம் வந்துள்ளார் மாதவி. அவர் வருகை தாமதத்திற்குக் காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு அவருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவரின் வருகை தாமதம் மட்டுமின்றி மேலும் சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதற்கு மாதவி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
இருப்பினும், சென்னை மாநகராட்சி ஒரே நாளில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி இரவு அவருக்குப் பணியிட மாற்ற உத்தரவை வழங்கியுள்ளது.
இதுகுறித்துப் பேசியபோது, “கடந்த ஆண்டு, மாநகராட்சி அலுவலகத்தில் உடை மாற்ற இடம் இல்லாத காரணத்தால் கழிப்பறையில் உடை மாற்றும்போது வழுக்கி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு வெகு தூரம் பயணிப்பது எனக்கு சவாலான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் தற்போது பணியிட மாற்றத்திற்குப் பிறகு தினமும் 70 கி.மீ. பயணம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்,” என்றார் மாதவி.
தற்போது மணலி அலுவலகத்தில் இருந்து 6 மணிக்குக் கிளம்பினால் வீடு வந்தசேர 9 மணிக்கு மேல் ஆவதாகக் கூறுகிறார் மாதவி. அவர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகே அமைந்துள்ள அண்ணாநகர், அம்பத்தூர், வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் பணிமாற்றம் தராமல் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் மணலிக்கு பணிமாற்றம் செய்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாணையில் கேட்கப்பட்டதும் மாதவியின் பதிலும்
ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று பணிக்குத் தாமதமாக வந்த மாதவிக்கு அளிக்கப்பட்ட குறிப்பாணையில் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவது, முறைப்பணி எனப்படும் சனிக்கிழமை பணிகளுக்கு வராமல் இருப்பது, உயர் அதிகாரிகளின் ஆணையை உதாசினப்படுத்துவது மற்றும் அலுவலக நடைமுறைகளை மீறுதல் ஆகியவை தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதற்குப் பதிலளித்த மாதவி, கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த காரணத்தால் முன்பு போல் வேகமாக நடக்க இயலவில்லை என்றும் தினமும் அலுவலகம் முடித்து வீடு திரும்பவே இரவு 10 மணிக்கு மேல் ஆவதால் காலையில் எழுந்து வேலைக்குத் தயாராக இயலவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
பிபிசி சரிபார்த்த குறிப்பாணை மற்றும் மாதவியின் பதில்களின்படி, முறைப்பணி பற்றி எழுப்பிய கேள்விக்கு, தனது பணிகளை எந்தக் குறையுமின்றிச் செய்திருப்பதாகவும், அப்படி முறைப்பணி செய்யாமல் இருந்த நாட்களை குறிப்பிட்டுக் காட்ட வேண்டுமெனவும் மாதவி பதில் அளித்துள்ளார்.
மேலும், அலுவலக நடைமுறைகளை மீறுதல் என்பது குறித்து குறிப்பாணையில் எழுப்பப்பட்டிருந்த கேள்விக்கு அளித்துள்ள பதிலில், “தாங்கள் என்னை உதட்டிற்குப் பூசுகின்ற சாயம் போடக்கூடாது என்று கூறினீர்கள். நான் உங்களை மீறிப் பூசினேன்” என்றும், “இது குற்றம் என்று எந்த அலுவலக ஆணையில்(G.O) உள்ளது எனத் தெரியப்படுத்துமாறும் (SIC),” மாதவி கூறியுள்ளார்.
“பிரியா பதவிக்கு வந்த நாட்களில் இருந்து நான் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மழை, வெள்ளம் போன்ற கால கட்டங்களில் அவருடனேயே தங்கி பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். இரவில் அவருடன் வெகுநேரம் பணியாற்றியுள்ளேன். ஏதேனும் தவறு செய்திருந்தால் சுட்டிக்காட்டலாம். தண்டனை வழங்கலாம். ஆனால் இப்படிப் பொய் புகார்களைக் கூறுவது ஏற்புடையது இல்லை,” என்கிறார் அவர்.
மேயர் பிரியா கூறுவது என்ன?
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, மாதவியின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.
“தபேதராக பணியாற்றும் ஒருவர் என்னுடன் நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் பயணிக்க வேண்டும். தேவையான ஆவணங்களைக் கொண்டு வந்து சமர்பிக்க வேண்டும். மேலும் அலுவலக நேரம் துவங்கும்போது அவர் அங்கே இருக்க வேண்டும். ஆனால் அவர் அடிக்கடி விடுப்பு எடுத்தார். பணிக்கு மிகவும் தாமதமாக வந்தார். இரண்டு முறை அவரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்தோம்,” என்று கூறினார் பிரியா.
இருப்பினும் மாதவி அதைப் பின்பற்றவில்லை எனவும் அதைத் தொடர்ந்தே ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று குறிப்பாணையை வெளியிட்டதாகவும் சென்னை மேயர் பிரியா கூறினார்.
மேற்கொண்டு பேசியவர், “நாங்கள் கேட்ட கேள்விக்கும் அவர் அளித்த பதில்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை. இங்கு நிர்வாகப் பணியாளர்களுக்கு சீருடை விதிகள் இருக்கின்றன. அனைவரையும் அதைப் பின்பற்ற வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தோமே தவிர, உதட்டுச்சாயம் குறித்து நாங்கள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை,” என்றும் தெரிவித்தார்.
மாதவி, 30 கி.மீ-க்கு அப்பால் உள்ள அலுவலகத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, “நான் பணியிடமாற்ற உத்தரவை மட்டுமே பிறப்பித்தேன். எந்த மண்டலம் என்றெல்லாம் நாங்கள் தேர்வு செய்யவில்லை. எங்கே பணியிடம் காலியாக இருந்ததோ அங்கே அவருக்கு மாற்றுதல் வழங்கப்பட்டது,” என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
மாநகராட்சி தரப்பில் கூறப்படுவது என்ன?
குறிப்பாணையை அனுப்பிய நேர்முக உதவியாளார் சிவசங்கர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “மாதவி தொடர்ச்சியாக அலுவலகத்திற்குத் தாமதமாக வருகை புரிந்த காரணத்திற்காகவே பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக,” கூறினார்.
பொதுவாக பெண்களின் உடை மற்றும் தோற்றம் குறித்து நாங்கள் எதுவும் பேசுவதில்லை என்றும் எந்தப் பெண் ஊழியரையும் அழைத்து அவர்கள் உதட்டிற்குச் சாயம் பூசி வரக்கூடாது என்று கூறவில்லை என்றும் சிவசங்கர் கூறினார்.
அவருக்குத் தேவையான கால அவகாசம் அளித்த பிறகே நாங்கள் அவரைப் பணியிட மாற்றம் செய்தோம் என்றும் இது தனிப்பட்ட ரீதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றும் விளக்கம் அளித்தார் சிவசங்கர்.
“நான் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாரிடம் முறையிடுவதும் என்றும் புரியவில்லை. வேறு வழியின்றி நான் மணலிக்கு வந்து கொண்டிருக்கிறேன்,” எனக் கூறிய மாதவி, தற்போது இந்த விவகாரம் தொடர்பாகப் பரும் பேசுவதால், இதன்மூலம் தனக்கு ஏதேனும் நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
அதிருப்தி தெரிவிக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள்
ஆதிக்கம், ஆணாதிக்கம் போன்ற மனப்பான்மைகள் மேயர் பிரியா கொடுத்த விளக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார் எழுத்தாளரும், பெண் உரிமை செயற்பாட்டாளருமான நிவேதிதா லூயிஸ்.
“நடத்தை விதிகளை அரசாங்கம் உருவாக்கும். அதைப் பின்பற்றவில்லை என்றால் அதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வது நியாயமானது. இந்த உடை அணிய வேண்டும், இந்த நிறத்தில் உதட்டுச்சாயம் பூச வேண்டும் என ஒழுக்க விதிகளை விதிப்பது யார்?” என்ற கேள்விகளை எழுப்புகிறார் நிவேதிதா.
“ஒருவரின் ஆடை குறித்தும் அவரின் தோற்றம் குறித்தும், பெண்களின் மாண்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் தேவையற்ற கருத்துகளைக் கூறுவது பணியிடத் துன்புறுத்தலாகக் (Workplace harassment) கருதப்பட வேண்டும். அவரின் பணியிட மாற்றத்திற்கு எதிராகவும் அவர் எதிர்கொண்ட இந்தத் துன்புறுத்தலுக்கு எதிராகவும் அவர் உள்புகார்கள் குழுவில் (Internal Committee) புகார் அளிக்க வேண்டும்,” என்றும் மேற்கோள் காட்டினார் நிவேதிதா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு