ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து அணியை நெருக்கடியில் தள்ளினர். நண்பகல் உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளையும், பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.
ஆட்டத்தின் போக்கைப் பார்த்தபோது, இந்திய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஆபத்பாந்தனாக வந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை பாதாளத்திலிருந்து மீட்டது.
தவறவிட்ட வங்கதேசம்
வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் ஹசன் முகமது சிறப்பாகப் பந்துவீசி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் ஒத்துழைத்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக திரும்பியிருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை வங்கதேச அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்கள் கூட்டுமுயற்சியுடன் பந்துவீசி இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்து 3 விக்கெட்டுகளை அள்ளினர்.
முழுநேர பேட்டர்களான ரோஹித், கோலி, கில் போன்றோர் களத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் அணியை மாபெரும் சரிவிலிருந்து மீட்டனர்.
சென்னை எப்போதுமே ஸ்பெஷல்தான்
இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, சதம் அடித்த அஸ்வின் பெவிலியன் வந்தபின் அளித்த பேட்டியில் “ சென்னையில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷலான தருணம். இதே மைதானத்தில்தான் கடந்தமுறை சதம் அடித்தேன். டி20 போட்டி விளையாடிவிட்டு அதிலிருந்து வந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகினேன். பழைய சென்னை விக்கெட்டில் பந்து பவுன்ஸ் ஆகும், எளிதாக விளையாடலாம், ஆனால், இந்த விக்கெட்டில் பேட் செய்வது கடினமாக இருந்தது.
ஜடேஜா எனக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து பேட் செய்து உதவினார். ஒரு கட்டத்தில் என்னால் ஓட முடியாத அசதி ஏற்பட்டபோது, ஜடேஜா ஸ்ட்ரைக்கை எடுத்து எனக்கு உதவினார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்டர்களில் ஒருவர் ஜடேஜா. நாங்கள் எந்த 2 ரன்களையும் 3 ரன்களாக மாற்றவில்லை, இருவருக்கும் ஓய்வு தேவைப்பட்டது. பிட்ச், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஒத்துழைக்கும். புதியபந்து நாளை சற்று அதன் வேலையை காண்பிக்கும், சமாளித்து ஆட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ரோஹித் ஏமாற்றம்
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். .
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளுக்கு பந்தை விரட்டி ரன் சேர்த்தார்.
ரோஹித் சர்மாவை தவறு செய்ய வைக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயன்றனர். பின்னர் ரோஹித் சர்மா 19 பந்துகளைச் சந்தித்தநிலையில் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்ற பெயருடன் ரோஹித் வெளியேறினார்.
2வது விக்கெட்டுக்கு வந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். பெரும்பாலும் 3வது பேட்டராக விராட் கோலிதான் கடந்த காலங்களில் களமிறங்கி செயல்பட்டிருந்தார். ஆனால் இந்த முறை சுப்மான் கில் களமிறங்கினார். 8 பந்துகளைச் சந்தித்த சுப்மான் கில், ஒரு பந்தில் கூட தனது வலிமையான ஷாட்களை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.
சுப்மான் கில் டக்அவுட்
ஹசன் மெஹ்மது லெக்திசையில் லேசாக விலக்கி வீசிய பந்தை கில் பவுண்டரிக்கு அடிக்க முயன்று தட்டிவிட்டார். ஆனால், அது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்சாகவே, கில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8-வது ஓவரில் 2 விக்கெட்டை இழந்தது.
9 நிமிடங்களில் வெளியேறிய கோலி
அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். 8 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பதால், பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சென்னையில் சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் கோலி ஈடுபட்டதால், அவரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.
ஆனால், களத்தில் 9 நிமிடங்கள் மட்டுமே இருந்த கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
ரிஷப்பந்த், ஜெய்ஸ்வால் நம்பிக்கை
4வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால்-ரிஷப் பந்த் கூட்டணி சேர்ந்தனர். 600 நாட்களுக்குப்பின் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து ஓரளவு ரன்களைச் சேர்த்ததால் ரன்ரேட் சற்று உயர்ந்தது.
இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சற்று மேலே கொண்டு வந்தனர். இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டு, பந்துவீச்சை மாற்றி, மாற்றி வீசினர்.
விக்கெட் சரிவு
உணவு இடைவேளைக்குப்பின் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்கும் விதத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடியாக வீசினர். குறிப்பாக உணவு இடைவேளைக்குப் பின் தஸ்கின், ராணா இருவரும் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர்.
ரிஷப் பந்த் 52 பந்துகளில் 39 ரன்கள்(8பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்துவந்த ஜெய்ஸ்வால் 95 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.
5வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ராணா வீசிய பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 56 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார்.
தொடக்கத்திலிருந்தே கே.எல்.ராகுல் சற்று தடுமாற்றத்துடனே பேட் செய்தார். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டவிதமும் தடுமாற்றமாக இருந்தது, ரன்களைச் சேர்க்கும் விதமும் விறுவிறுப்பாக இல்லை.
மெஹதி ஹசனின் சுழற்பந்துவீச்சில் ஷார்ட்லெக் திசையில் ஜாகிர் ஹூசேனிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு
7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். அஸ்வின் களமிறங்கியபோது, ரசிகர்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அஸ்வினும் ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் தொடக்கத்திலிருந்தே பேட் செய்து ரசிகர்களின் சபாஷ் பெற்றார்.
மாலை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 176 என்று வலுவான நிலையில் இருந்தது. அஸ்வின் 21, ஜடேஜா 15 ரன்கள் என இருவரும் நிதானமாக பேட் செய்தனர். 53வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.
அஸ்வின், ஜடேஜா அமர்க்களம்
முழுநேர பேட்டர்கள் சென்னை விக்கெட்டில் சொதப்பிய நிலையில் அஸ்வின் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொண்டு ஷாட்களை ஆடினார். அஸ்வினுக்கு துணையாக ஆடிய ஜடேஜாவும் தன்னை ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.
விரைவாக ரன்களைச் சேர்த்த அஸ்வின் 58 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடங்கியது. ஜடேஜா, அஸ்வின் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்க்கவே ஸ்கோர் உயரத் தொடங்கியது. 53ஓவர்களில் 200 ரன்களை தொட்ட இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்களை விரைவாக எட்டியது.
7-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறிவிட்டனர்.
அஸ்வினைத் தொடர்ந்து ஜடேஜா 73 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினர். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், மிராஸ் என மாறி மாறி பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.
அஸ்வின் சாதனை சதம்
அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் 108 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.
அஸ்வின் சதம் அடித்தவுடன் ஒரு கையில் ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் பேட்டையும் பிடித்து துள்ளிக் குதித்தார். அஸ்வினின் சதத்தை கண்டு ரசித்த சென்னை ரசிகர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும், தங்களின் பாராட்டுகளையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.
8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 5 சதங்களை டேனியல் வெட்டோரி மட்டுமே அடித்திருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் முறியடித்து 6-வது சர்வதேச டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார்.
அஸ்வின் களமிறங்கியபோது இந்திய 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜடேஜாவுடன் பார்டனர்ஷிப் அமைத்து, அணியை 400 ரன்களை நோக்கி அஸ்வின் நகர்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7-வது மற்றும் அதன்கீழான பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களாக அஸ்வின், ஜடேஜா சாதனை படைத்தனர். இதற்கு முன் 2009ல் ஹேமில்டனில் ஜெஸி ரைடர், வெட்டோரி கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது,அதை அஸ்வின், ஜடேஜா முறியடித்தனர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளை வரை சீராக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, கடைசி செஷனில் மட்டும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 163 ரன்களைச் சேர்த்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு