இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது.
2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அணிகளுக்கும் இந்தத் தொடரின் வெற்றி அவசியம் என்பதால் தீவிரமாக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.
பாகிஸ்தான் பயணம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.
இருப்பினும் சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்த இந்திய அணியில் இருப்பது போன்று வலுவான சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியிலும் உள்ளனர்.
ஆதலால் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எந்த அளவு நெருக்கடி அளிக்குமோ அதே அளவு அழுத்தத்தை வங்கதேசமும் அளிக்கும்.
கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணி விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியிலும் கூட அது வெற்றி பெறவில்லை, இந்திய அணி 11 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செய்கிறது.
கவனிக்கப்படும் வீரர்கள்
இந்திய அணியில் இரு வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார்கள். விராட் கோலி, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்த், கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரின் பேட்டிங் திறமையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஏனென்றால், கோலி இடத்துக்கு ஷூப்மன் கில், சர்ஃபிராஸ் கான், கே எல் ராகுலும்; ரிஷப் பந்த் இடத்துக்கு துருவ் ஜூரெல், கே எல் ராகுலும் போட்டியிடுகிறார்கள். ஆதலால் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளர் யாஷ் தயால் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்ன் மோர்கல் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
“இந்திய பந்துவீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையாகப் பந்துவீசுகிறார்கள். அவர்களின் திறமையை மெருகேற்றவே முடிந்தவரை உழைப்பேன் பெரிதாக மாற்றம் செய்யமாட்டேன்”, என மோர்கல் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
வங்கதேசத்துடன் இந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன், நியூசிலாந்து அணியுடன் அக்டோபர் மாதத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.
இந்தத் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த 10 போட்டிகளும் மிகுந்த முக்கியமானதாகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 74 புள்ளிகளுடன், 68.5% புள்ளிகள் சதவீதமும் (PCT) பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது, அப்போதுதான் புள்ளிகள் சதவீதத்தை 69.3 ஆக உயர்த்தி இறுதிப்போட்டிக்குள் செல்ல முடியும்.
சென்னையில் பயிற்சி
ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் விராத் கோலி, யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எஸ்.ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டி என்பதால் உள்ளூர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் என்பதால், கடந்த சில நாட்களாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, கில் ஆகியோர் பயிற்சி எடுத்தனர். இவர்களுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஜித் ராம், எம். சித்தார்த் ஆகியோர் வலைபயிற்சி பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர வருண் சக்ரவர்த்தி, அஸ்வினைப் போல பந்துவீசக்கூடிய மும்பை பந்துவீச்சாளர் ஹிமான்சு சிங்கும் பந்து வீசினர்.
சேப்பாக்கமும் – இந்திய அணியும்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை 36 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. அதிலும் கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது.
முந்தைய செயல்பாடுகளை பொறுத்தவரை, உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை குவித்துள்ளது. அதனால் வங்கதேச அணிக்கு இந்திய அணியை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கலாம்.
சேப்பாக்கத்தின் பிட்ச் எப்படி உள்ளது?
சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச். இந்த இரு ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மைதானத்தின் மையத்தில் புற்கள் கொண்ட ஒரு பிட்ச் இருக்கிறது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைந்தாலும், அதில் பெரும்பாலும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை
இரு அணிகளிலுமே சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருக்கும்.
ரோஹித் சாதிப்பாரா?
வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா நீண்டகாலமாக அவப்பெயரை சுமந்து வருகிறார்.
பல அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தாலும் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் அவர் இன்னும் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.
அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 33 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் அதிகபட்சம் 21 ரன்கள்தான். ஆதலால், வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்.
மைல்கல் எட்டுமா இந்திய அணி
வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் 178 வெற்றிகளை இந்திய அணி எட்டும். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளை பெற்ற அணி, என்ற வரிசையில் இடம்பெறும்.
24 ஆண்டுகள் தாகம் நிறைவேறுமா
வங்கதேச அணி 24 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றிகூட பெறாதநிலையில் வெற்றி தாகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக2-0 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனையுடன் இந்திய அணியை வங்கதேசம் எதிர்கொள்கிறது. இதனால், வங்கதேச அணியை எளிதாக எடைபோட முடியாது. இந்திய அணிக்கு இணையாக வலுவான சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது வங்கதேசம். நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சென்னை வந்துவிட்டனர். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடாத தொடக்க பேட்டர் மெகமதுல் ஹசன் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இவருக்குப் பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஜக்கர் அலி அனிக் எனும் இளம் வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக வங்கதேச அணிக்காக களமிறங்க உள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.