4
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின்போது சிசுக்களின் என்புத் தொகுதி மற்றும் சிறுவர்களின் என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள் உட்பட 8 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின்போது சிசுக்களின் என்புத் தொகுதி மற்றும் சிறுவர்களின் என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 6 – 7 வரையான என்புத் தொகுதிகள் உட்பட மொத்தமாக 8 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 80 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் எஸ்.லெனின்குமாரின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இன்று இடம்பெற்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் இன்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.
அதேவேளை, இன்றைய அகழ்வுப் பணிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம், தொல்லியற்துறை விரிவுரையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.