இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை.
இந்த முறை ஏற்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த 10 ஆண்டுகளில் (2014-2024) ஜம்மு-காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அங்கு உச்சகட்ட தீவிரவாதத்திலிருந்து, உச்சகட்டச் சுற்றுலாவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகள் அங்கு மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு வழி வகுத்துள்ளது,” என்று கூறினார்.
காஷ்மீரில் நிலைமை மேம்பட்டிருக்கிறதா?
2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஜம்மு-காஷ்மீருக்கு 6 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, அங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் சராசரியாக 15% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.
ஸ்ரீநகரில் வசிக்கும் ஷேக் ஷௌகத் ஹுசைன் ஒரு பிரபலமான அரசியல் நிபுணர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இயல்பு நிலை ஏற்பட்டிருக்கிறதா என்பதைச் சில விஷயங்கள் நமக்குச் சொல்லும். நிலைமை இயல்பாகிவிட்டால், காஷ்மீரி பண்டிட்டுகள் திரும்பி வருவார்கள் என்பது ஒரு விஷயம். எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். யாரும் வரவில்லை,” என்கிறார்.
மேலும் பேசிய ஹுசைன், “கும்பல் வன்முறை குறைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத உதம்பூர், கதுவா, மற்றும் தோடா போன்ற பகுதிகளில், இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்துள்ளன. நிலைமை மேம்பட்டுவிட்டது என்று கூறுபவர்கள், தங்கள் கூற்றைத் தாமே நம்பினால், அவர்களே இங்கிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை,” என்கிறார்.
பள்ளத்தாக்கில் சூழல் எப்படி இருக்கிறது?
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளுக்கு நாங்கள் சென்றோம்.
ஸ்ரீநகரின் சுற்றுலாப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் இருப்பைத் தவிர அனைத்தும் இயல்பானதாகத் தெரிகிறது. ஹோட்டல்கள், படகுகள், மற்றும் உணவகங்களை நடத்தும் மக்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மகிழ்ச்சியாகத் தோன்றினாலும், பழைய ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மக்களுடன் பேசுவது மிகவும் வித்தியாசமான சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.
டவுண்டவுன் என்ற பகுதியில் உள்ள வயதான காஷ்மீரி ஒருவர், “யாராவது உண்மையைப் பேசினால், மாலையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்க யாரும் இல்லை,” என்று கூறினார்.
அப்பகுதியில் வசிக்கும் சாஹில் அராபத் கூறுகையில், “இறந்தவர்களால்தான் கல்லறையின் நிலையை அறிய முடியும். மக்கள் பயப்படுகிறார்கள், ஏழைகள் பயப்படுகிறார்கள். அமைதி பற்றி பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் இங்கு அமைதி இல்லை,” என்கிறார்.
அனந்த்நாக் பகுதியில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் பாரி நாயக் கூறுகையில், “அமைதி என்பது இதயங்களின் அன்பினால்தான் வரும் என்று நான் எப்போதும் கூறுவேன். இங்குள்ள மக்களுக்கு அமைதியான சூழல் உருவாக்கப்பட வேண்டும். இங்கு இவ்வளவு படைகள் இருக்கக்கூடாது. அவை இல்லை என்றால் அமைதி இருக்கிறது என்று சொல்வோம்,” என்கிறார்.
பிஜ்பெஹாரா பகுதியில் வசிக்கும் முகமது அப்துல்லா ஷா, “அவர்கள் இதயங்களை வென்றிருந்தால், மக்கள் முன்னோக்கி வந்திருப்பார்கள், இதயங்களை வெல்லாதபோது, உள்ளே எரிமலை வெடிக்கிறது,” என்கிறார்.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டிருக்கக் கூடாது என உள்ளூர் மக்கள் பலர் கூறுகின்றனர்.
ஸ்ரீநகரில் வசிக்கும் ஹாஜி குலாம் நபி, “அது எங்கள் அடிப்படை உரிமை. அது எங்களிடம் இருந்து பலவந்தமாகப் பறிக்கப்பட்டது,” என்கிறார்.
பல மக்கள், கேமராவின் முன் பேசத் தயாராக இல்லை. இது, அங்குள்ள பதற்றத்தை உணர்த்துகிறது.
ஊடகங்களின் நிலை என்ன?
காஷ்மீரில், ஊடகங்களால் கூடச் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை என்று பலர் கூறுகின்றனர்.
ஃபஹத் ஷா ஒரு காஷ்மீரி பத்திரிகையாளர். அவர் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் 2022-இல் கைது செய்யப்பட்டார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், 2023-இல் ஜாமீனில் வெளிவந்தார்.
“பொது மக்களிடையே பயமும், மூச்சுத் திணறல் போன்ற ஒரு உணர்வும் ஏற்படும் போது, அது ஊடகங்களிடமும் ஓரளவு சென்றடைகிறது. ஏனென்றால் ஊடகங்களில் பணியாற்றுவதும் உள்ளூர் மக்கள்தான்,” என்கிறார்.
ஃபஹத் ஷா மேலும் கூறும்போது, “இங்கு ஊடகங்களுக்கும் பிரச்னைகள் உள்ளன. நான் இரண்டு வருடங்கள் சிறையில் இருந்தேன். என்னை சிறையில் அடைத்தது, பலருக்கான ஒரு செய்தியாகவும் இருந்தது. ஊடகங்கள் அதிக அழுத்தத்தில் உள்ளன,” என்கிறார்.
ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்து அச்சம் நிறைந்த சூழல் நிலவி வந்தது.
இன்று, இங்கு வரும் மக்களை மேற்கோள் காட்டி, 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, இங்கு அமைதி திரும்பியதாக மத்திய அரசு கூறுகிறது.
ஆனால் நாங்கள் கேமராவை வெளியே எடுத்தபோது, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரி ஒருவர் எங்களைத் தடுத்தார்.
அந்த அதிகாரி, முதலில் லால் சவுக்கின் சூழலைப் படமாக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினார். பொது இடத்தில் படம்பிடிக்க ஏன் அனுமதி வாங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோது, அவர் தனது மூத்த அதிகாரியை அழைத்தார்.
சிறிது நேரம் கழித்து, படப்பிடிப்பின் போது லால் சௌக்கில் சாமானியர்களுடன் பேச வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கான காரணத்தை நாங்கள் கேட்டபோது, அது ‘அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்’ என்றார்.
அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி முதல் முறையாகத் தேர்தலில் போட்டுகிறார். காஷ்மீர் நிலவரம் குறித்து அவரிடம் கேட்டோம்.
“தங்கள் உரிமைகள், நிலம், வேலைகள், வளங்கள் ஆகியவை ஆபத்தில் இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அந்நியப்பட்டுப்போன இந்த உணர்வு 2019-க்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் இங்குள்ள மக்களுடன் பேசிப்பாருங்கள். அவர்களிடம் பயம் அதிகரித்துள்ளது,” என்றார்.
மேலும் அவர், “இங்குள்ள பல பெண்களின் கணவர்கள் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளாக ஆக்ரா அல்லது லக்னோவில் உள்ள சிறைகளில் உள்ளனர். எந்த வித குற்றச்சாட்டும் இல்லாமல் மக்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவிடப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரைச் சிறையாக மாற்றிவிட்டீர்கள். இப்போது நீங்கள் தூரத்திலிருந்து நிலைமை சாதாரணமாக இருப்பதைப் பார்க்கிறீர்கள். நாங்கள் என்ன சொல்ல முடியும்?” என்கிறார்.
பா.ஜ.க என்ன சொல்கிறது?
ஆனால் இல்திஜா முப்தியின் கருத்துடன் அனைவரும் உடன்படவில்லை.
ஸ்ரீநகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கூறுகையில், லால் சௌக் ஒரு காலத்தில் ‘பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடக்கும்’ மயானமாக இருந்தது என்கிறார்.
”லால் சௌக் மீது தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தினர். இன்று லால் சௌக் மூவர்ணக் கொடியின் வர்ணங்களால் நிறைந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். இன்று மூவர்ணக் கொடி அங்கு பறக்கிறது. முன்னர் மயான பூமியாக இருந்த லால் சௌக், 2019-க்குப் பிறகு ‘செல்ஃபி பாயிண்ட்’ஆக மாறியிருக்கிறது,” என்கிறார் அல்தாஃப் தாக்கூர்.
காஷ்மீரில் யாரேனும் அழுத்தத்தை உணர்ந்தால், அது பிரிவினைவாத சித்தாந்தத்துடன் தொடர்புடைய நபர்கள் மட்டுமே என்று அல்தாப் தாக்கூர் கூறுகிறார்.
“இன்றைய ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிகளுக்கு இடமில்லை, வெடிகுண்டுகளுக்கு இடமில்லை, வேலைநிறுத்தத்துக்கு இடமில்லை, போராட்டத்துக்கு இடமில்லை, இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதற்கு அனுமதியில்லை,” என்கிறார்.
பிரிவினைவாதமும் தேர்தலும்
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் இன்ஜினியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷேக் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
ரஷீத், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இந்த வெற்றி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இன்ஜினியர் ரஷீத் சிறையில் இருந்த நிலையில், அவரது தேர்தல் பிரசாரத்தை அவரது மகன் அப்ரார் ரஷீத் கையாண்டார்.
இன்ஜினியர் ரஷீத்தின் ‘அவாமி இத்தேஹாத் கட்சி’ எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களமிறங்கியுள்ளது.
பிபிசியிடம் பேசிய அப்ரார், “கருத்துச் சுதந்திரம் இல்லை, பேசுவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள், யாராவது பேசினால், நாளை என்ன பிரச்னை வரும் என்று தெரியாது. களநிலவரம் மாறவில்லை. நிலைமை ஓரளவுக்கு சரியாகியுள்ளது, ஆனால் பயம் இருக்கிறது,” என்கிறார்.
இன்ஜினியர் ரஷீத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரிவினைவாதிகள் என்று கருதப்படும் பலர் தற்போது தேர்தலில் போட்டியிட முயற்சிப்பது மற்றொரு சுவாரஸ்யமான விஷயம்.
தலாத் மஜீத், புல்வாமாவில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆனால் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
“370-வது சட்டப்பிரிவை நீக்கிய பின், அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அவர்களது பிரச்னைகள் கவனிக்கப்படவில்லை. தற்போது 2024-இல் நடக்கவுள்ள தேர்தல் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 2024 மக்களவைத் தேர்தல் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை முற்றிலும் நிரூபித்துள்ளது,” என்கிறார்.
பிரிவினைவாதக் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள சர்ஜன் பர்காத்தி, கந்தர்பால் மற்றும் பீர்வா தொகுதிகளில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மகள் சுக்ரா பர்கதி, தனது தந்தை ஏன் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்று கூறினார்.
“தேர்தலில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் நம்மால் நல்லது செய்ய முடியும் என்று அப்பாவிடம் சொன்னேன். நான் அப்பாவைச் சந்திக்கச் செல்லும்போது, அவர் மட்டும் சிறையில் இல்லை, காஷ்மீரில் இருந்து பலரும் இருந்தனர். அங்கு இளைஞர்கள் சிறையில் உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் விடுதலை செய்யப்பட்டால், பல இளைஞர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்,” என்றேன்.
அப்படியானால், இப்போது ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத சித்தாந்தத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
லோக்சபா தேர்தலில் இன்ஜினியர் ரஷீத்தின் வெற்றியில் இருந்து இந்தக் கேள்விக்கான பதிலை மதிப்பிட முடியும் என்கிறார் ஷேக் ஷேகத் ஹுசைன்.
“இன்ஜினியர் ரஷீத் பிரிவினைவாதி என்று அழைக்கப்படுகிறார். அது உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதுதான் அவர் மீது உள்ள முத்திரை, இல்லையா? எனவே மக்கள் முன் ஒரு தேர்வு இருந்தபோது, அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர்,” என்கிறார்.
‘புதிய ஆட்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’
2019-ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் நிர்வாகம் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவால் நடத்தப்படுகிறது. ஆனால் விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை ஆகியவற்றுடன் போராடும் காஷ்மீரிகள், இந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கென ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாததை ஆழமாக உணர்ந்துள்ளனர்.
பத்திரிக்கையாளர் ஃபஹத் ஷா, ”மக்களிடையே ஆதரவற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. மக்களிடையே மூச்சுத் திணறல் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது. முழு அமைப்பும் அதிகாரத்துவம் மற்றும் அதிகாரிகளால் இயங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. எனவே மக்கள் அந்த நிர்வாகத்துடன் பேசுவதற்கு வழி இல்லை,” என்கிறார்.
ஸ்ரீநகரில் வசிக்கும் மன்சூர் ரஹ்மான், “அரசாங்கம் அமைந்தால் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். யாரிடமாவது சென்று இது எங்கள் பிரச்னை என்று கூறி தீர்வு காண்போம்,” என்கிறார்.
இதனால்தான் அடுத்த ஆட்சி அமைய மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஸ்ரீநகர் டவுண்டவுனில் மளிகைக் கடை நடத்தி வரும் மெஹபூப் ஜான், “தேர்தலில் நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. எங்கள் அரசாங்கம் வந்தால், எங்கள் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியும்,” என்கிறார்.
“தேர்தலில் பங்கேற்பது எங்கள் கடமை. மக்களவைத் தேர்தலிலும் வாக்களித்தோம். இன்றும் வாக்களிப்போம்,” என்று அனந்த்நாகில் வசிக்கும் முகமது அப்துல்லா ஷா கூறுகிறார்.
– இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு