பட மூலாதாரம், SANSAD TV
இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ள ஜெகதீப் தன்கர் அரசியல் விவாதத்தின் மையமாக மீண்டும் மாறியுள்ளார்.
அவரது ராஜினாமா குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது அரசியல் பயணத்தின் பழைய சர்ச்சைகளும் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.
ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசிலும், பின்னர் பாஜகவிலும் இணைந்த தன்கரின் அரசியல் பயணத்தில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஆனால், அவரது கருத்துகளும், முடிவுகளும் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது ராஜினாமா செய்ததற்கான காரணமாக தனது உடல்நலனை சுட்டிக்காட்டியுள்ளார் தன்கர். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 2027 இல் முடிவடைய இருந்தது.
ஜூலை 2019 இல் மேற்கு வங்க ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு, அவர் தொடர்ந்து அரசியல் விவாதங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளில், மம்தா அரசாங்கத்துடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜெகதீப் தன்கர், மாநிலங்களவைத் தலைவராகவும் இருந்தார். இந்த பதவி தொடர்பாக , எதிர்க்கட்சிகளுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’, தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது.
ஒரு வழக்கறிஞரும் சட்ட நிபுணருமான ஜெகதீப் தன்கர், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றத்தின் உரிமைகள் பற்றிய தனது கருத்துகளால் சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
“குடியரசு துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா அதிர்ச்சியளிக்கிறது. மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இன்று மாலை 5 மணி வரை நானும் அவருடன் இருந்தேன். இரவு 7:30 மணிக்கு தொலைபேசியிலும் பேசினேன். உடல்நலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால் அவர் எதிர்பாராமல் ராஜினாமா செய்ததற்குப் பின்னால் இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது, அது இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது ஊகிக்க வேண்டிய நேரம் அல்ல” என்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட பிறகு, காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
எதிர்க்கட்சிகளுடன் மோதல்
பட மூலாதாரம், SANSAD TV
“ஜெகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களால் தான் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்குப் பிறகும், நாடாளுமன்றத்தை நடத்துவது எளிதான வேலை அல்ல” என்று இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆனால், அவர் சனாதன தர்மம் மற்றும் அரசியலமைப்பு பற்றி வெளிப்படையாகப் பேசியதால், பலரிடையே பிளவை ஏற்படுத்தினார் என்பது உண்மைதான். குடியரசு துணைத் தலைவராக இருந்தபோது, எதிர்க்கட்சிகளுடன் அவருக்கு சிறப்பான உறவு இல்லை. நாடாளுமன்றத்தை நடத்திய விதம் குறித்து ஆளும் கட்சித் தலைமையுடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்,” என்கிறார்.
ஜெகதீப் தன்கர் ஆகஸ்ட் 11, 2022 அன்று குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார். முன்னதாக ஜூலை 2019 இல், அவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மாநிலங்களவைத் தலைவராக ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளுடன் அடிக்கடி விவாதங்களில் ஈடுபட்டது பேசுபொருளானது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், உச்ச நீதிமன்றம் தொடர்பான அவரது கடுமையான கருத்துகள் பெரும் விவாதமாக மாறின. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு உத்தரவு வழங்க முடியாது என்று கூறியிருந்தார் தன்கர்.
மசோதாக்களை அங்கீகரிக்க குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதைப் பற்றி குடியரசு துணைத் தலைவர் தன்கர், அரசியலமைப்பின் 142வது பிரிவு, நீதித்துறையிடம் எப்போதும் இருக்கும் ஒரு அணு ஏவுகணையை போன்று, ஜனநாயக சக்திகளுக்கு எதிராக உள்ளது என்று கூறினார்.
“இப்போது உலகம் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறது. இந்திய அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் ஒன்றாக வைத்திருக்க விரும்புகிறது. அப்படிப்பட்ட நேரத்தில், தன்கர் விஷயத்தில் ஏதாவது தவறு நடந்ததா? இப்போது சூழ்நிலைகள் மாறிவிட்டனவா?” என்று நீரஜா சவுத்ரி கேள்வி எழுப்புகிறார்.
பாஜகவின் அரசியல்
ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை ஒருதலைப்பட்சமாக நடத்துவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
இந்தக் காரணத்திற்காக, குளிர்காலக் கூட்டத்தொடரின் போது இந்தியா கூட்டணியால் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
திங்கட்கிழமை நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது எதிர்க்கட்சிகள் சத்தம் எழுப்பினர். அப்போது,”எதுவும் பதிவு செய்யப்படாது. நான் சொல்வது தான் பதிவு செய்யப்படும். இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ஜே.பி. நட்டா எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறினார்.
இதுபோன்ற விஷயங்களை பொதுவாக அவைத் தலைவர் அல்லது சபாநாயகர் கூறுவது இயல்பான ஒன்றுதான்.
மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் இதுகுறித்து பேசுகையில், “தன்கர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம், அவருடைய தனியுரிமையை மதிக்க வேண்டும். ஆனால் அரசியலில், இதுபோன்ற விஷயங்களைச் சுற்றி ஊகங்கள் கிளம்புகின்றன. பாஜகவில் நீண்ட காலமாக புதிய தலைவர் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், அவரது ராஜினாமாவுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்க முடியுமா?” என்கிறார்.
“இது ஒரு பெரிய பதவி என்பதால், ஒருவரை குடியரசுத் துணைத் தலைவராக நியமிப்பதன் மூலம் சமநிலையை உருவாக்கும் முயற்சியா இது? ஜே.பி. நட்டாவுக்காக இதெல்லாம் செய்யப்படவில்லை என்றாலும், நிகழ்வுகள் மாறிய வேகத்தைப் பார்க்கும்போது, ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்க வேண்டும்.”என்றும் ரஷீத் கித்வாய் குறிப்பிடுகிறார்.
உடல்நலக் காரணங்களுக்காக மட்டுமே ராஜினாமா செய்ய வேண்டியிருந்தால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு அது செய்யப்பட்டிருக்கும் என்று கருதுகிறார் ரஷீத் கித்வாய்.
இந்த திடீர் ராஜினாமாவை அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையேயான உறவுகளுடனும், புதிய குடியரசுத் தலைவர் தொடர்பான தற்போதைய விஷயங்களுடனும் இணைக்கிறார்.
தன்கரின் அரசியல் பயணம்
பட மூலாதாரம், @narendramodi
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள கிதானா கிராமத்தில் 1951-ஆம் தேதி மே 18-ஆம் தேதி பிறந்தவர் தன்கர். கிராம அரசு தொடக்கப்பள்ளியில் படித்த அவர், பின்னர் கர்தானா அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
பின்னர் 1962 ஆம் ஆண்டு, உதவித்தொகையுடன் சித்தோர்கர் சைனிக் பள்ளியில் சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலை (இயற்பியல் கௌரவப் பட்டம்) பட்டம் பெற்றார். அதன் பிறகு, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் 1978-79 ஆம் ஆண்டு எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.
தன்கர் நவம்பர் 1979 முதல் ராஜஸ்தான் பார் கவுன்சிலின் உறுப்பினராக வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.
மார்ச் 1990 இல், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு, 1990 முதல் உச்ச நீதிமன்றத்திலும் தன்கர் வழக்காடி வந்நுதுள்ளார். .
1989 ஆம் ஆண்டு ஜுன்ஜுனு மக்களவைத் தொகுதியில் இருந்து ஜனதா தளம் சார்பில் (பாஜக ஆதரவுடன்) வெற்றி பெற்றதன் மூலம் அவரது அரசியல் பயணம் தொடங்கியது.
பின்னர், 1990-91 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக தன்கர் பதவி வகித்தார்.
ஜனதா தளம் பிரிந்த பிறகு, 1991 இல் காங்கிரசில் இணைந்த தன்கர், அஜ்மீர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பின்னர் 2003 இல், தன்கர் பாஜகவில் சேர்ந்தார். 1993-98 க்கு இடையில் கிஷன்கர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
மக்களவை மற்றும் சட்டமன்றத்தில் பணியாற்றிய காலத்தில், பல முக்கியமான குழுக்களில் உறுப்பினராகவும் தன்கர் பதவி வகித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு