அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது.
புளோரிடாவில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை சந்தேகத்துக்குரிய நபராக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பிவிட்டார் என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் 58 வயதான ரியான் வெஸ்லி வட கரோலினாவைச் சேர்ந்தவர். அவரது சொத்து பதிவுகளின்படி, அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வட கரோலினாவில் கழித்தார். ஆனால், அவர் சமீபத்தில் ஹவாயில் வசித்து வந்தார்.
ரியான் வெஸ்லியின் சில செயல்பாடு, அவரது அரசியல் நிலைப்பாட்டின் கலவையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது.
யுக்ரேன் ரஷ்யா போரில் தீவிர யுக்ரேனின் ஆதரவு நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர் பல சட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளார்.
மேலும் அவரைப் பற்றி நமக்கு கிடைத்த சில தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
ரியான் வெஸ்லி ரூத் என்ன செய்தார்?
ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் சர்வதேச கோல்ஃப் மைதானத்திற்கு ரூத், ஏகே 47 ரக துப்பாக்கியுடன் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நபர் ஒரு புதரில் மறைந்திருந்ததாக எஃப்.பி.ஐ(FBI) சந்தேகிக்கிறது. அந்த புதரில் இருந்து ஆயுதம், ஸ்கோப்,கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் ஆகியவற்றை எஃப்.பி.ஐ மீட்டுள்ளது.
ரூத் தனது காரில் தப்பிச் சென்ற போதிலும், அவர் ஓட்டிச் சென்ற கருப்பு நிற நிசான் காரை ஒரு நபர் புகைப்படம் எடுத்தார். அவர்தான் இந்த விவகாரத்தின் முக்கிய சாட்சி.
அந்த காரின் அடையாளம் வெளியிடப்பட்டு அவசர எச்சரிக்கை விடப்பட்டது.
கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு அதிகாரிகள் ரூத்தின் வாகனத்தை பின்தொடர்ந்ததாக பாம் பீச் கவுண்டியின் காவல் உயர் அதிகாரி ரிக் பிராட்ஷா கூறினார்.
அந்த நபர் இறுதியில் இன்டர்ஸ்டேட் 95 சாலையில் நிறுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.
ரூத்தின் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்துவது என்ன?
பிபிசி வெரிஃபை ரூத்தின் பெயருடன் பொருந்தும் சமூக ஊடக கணக்குகளை கண்டறிந்தது.
ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது.
“உங்கள் குழந்தைகள், குடும்பம் மற்றும் ஜனநாயகத்திற்காக நான் ஹவாயில் இருந்து யுக்ரேனுக்கு வருகிறேன். உங்களுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்.” என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு கூறுகிறது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் கூறுகிறது.
அவரது சமூக ஊடக கணக்குகளில் பாலத்தீன ஆதரவு, தாய்வான் ஆதரவு மற்றும் சீனாவுக்கு எதிரான பதிவுகளும் உள்ளன. சீன “உயிரியல் போர்” பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் கோவிட்-19 வைரஸை “தாக்குதல்” என்று குறிப்பிடும் விமர்சனமும் உள்ளது.
2020-ஆம் அவர் பதிவிட்ட ஒரு எக்ஸ் பதிவில் 2016-ஆம் ஆண்டு அவர் டிரம்பிற்கு வாக்களித்தார் என கூறுகிறார். ஆனால் பின்னர் ஏமாற்றமடைந்த அவர், “நீங்கள் சென்றது மிகவும் மகிழ்ச்சி” என பதிவிட்டதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் டிரம்பின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை ரூத் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.
ரூத்துக்கும் யுக்ரேனுக்கும் என்ன தொடர்பு?
ரூத் 2023 இல் நியூயார்க் டைம்ஸிடம் யுக்ரேனில் போர் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும், தாலிபன்களிடம் இருந்து தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் வீரர்களை பணியில் அமர்த்த விரும்புவதாகவும் கூறினார்.
தொலைபேசி வாயிலாக அவர் அளித்தப் பேட்டியில், 10க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமாக இருப்பதாகவும், அவர்களை பாகிஸ்தான் மற்றும் இரானில் இருந்து யுக்ரேனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதனை சட்டவிரோதமாக செய்யவும் தயார் என்று பேட்டியளித்தார்.
“பாகிஸ்தான் ஊழல் நிறைந்த நாடு என்பதால் நாங்கள் சில பாஸ்போர்ட்டுகளை பாகிஸ்தான் மூலம் வாங்க முடியும்” என்று அவர் கூறினார்.
யுக்ரேனுக்கு கூடுதல் ஆதரவை வழங்கி உதவுவதற்காக, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க ஆணையத்தை சந்திக்க தான் வாஷிங்டனில் இருப்பதாகவும் ரூத் பேட்டியில் கூறியிருந்தார்.
ஜூலை மாதம் வரை ஆட்சேர்ப்பு முயற்சிகளில் ரூத் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
ஜூலை மாதத்தில் அவர் பதிவிடப்பட்ட ஒரு முகநூல் பகிர்வில் , “வீரர்களே, தயவுசெய்து என்னை அழைக்காதீர்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களை யுக்ரேன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக முயற்சிகளை செய்து வருகிறோம், வரும் மாதங்களில் பதில்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்.” என கூறப்பட்டுள்ளது
யுக்ரேனின் சர்வதேச வெளிநாட்டு தன்னார்வலர்களின் அமைப்பு, ரூத்தின் பதிவுக்கும் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. .
இந்த அரசியல் வன்முறைக்கு யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களில், “நெருப்புடன் விளையாடுவது அதன் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று ரஷ்ய அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
ரூத் மீது குற்றப் பதிவு உள்ளதா?
சிபிஎஸ் செய்தியின்படி, 1990 களில் காசோலை மோசடி உட்பட ரூத் சில சட்ட சிக்கல்களை எதிர்கொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன.
ரூத் 2002 மற்றும் 2010க்கு இடையில் வட கரோலினாவில் உள்ள கில்ஃபோர்ட் கவுண்டியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்றும் சிபிஎஸ் தெரிவித்துள்ளது.
2002 இல், மிக ஆபத்தான முழு தானியங்கி துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது, கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஆயுத விதிமீறல்களை மறைத்தது போன்ற செயல்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.
ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல், திருடப்பட்ட சொத்தை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது.
ரூத்தின் முன்னாள் பக்கத்து வீட்டார் கிம் முங்கோ, ரூத் “அன்பானவர்” என்று விவரிக்கிறார், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருமுறை ரூத்தின் சொத்துக்களை சோதனையிட்டதாகக் கூறினார்.
அவர் தனது வீட்டில் “திருடப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொருட்களை” வைத்திருந்ததாகவும் கிம் முங்கோ குற்றம் சாட்டினார். மேலும் ரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் திறந்த வெளியில் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
அவரது அரசியல் நிலைப்பாடு என்ன?
2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வட கரோலினாவில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்தெடுக்கும் நடைமுறையின், முதல்கட்ட தேர்தலில் இவர் வாக்களித்ததாக அரசு தரவுகள் கூறுகின்றன.
அவர் 2016-ஆம் ஆண்டு டிரம்பை ஆதரித்ததாக அவரது சமூக ஊடகப் பதிவுகள் இருந்தபோதிலும், அவர் எந்த கட்சியிலும் சாராத வாக்காளர் என பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ரூத்தின் குடும்பம் பற்றி
ரூத்தின் மகன் அவரை “அன்பான மற்றும் அக்கறையுள்ள தந்தை. நேர்மையான கடின உழைப்பாளி” என்று கூறியுள்ளார்.
அவரது மூத்த மகன்ஓரான், குறுஞ்செய்தி மூலம் சிஎன்என் உடன் பேசினார். “புளோரிடாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்திருப்பதாக நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் சிறிய வயதில் இருந்த பார்த்த நபர் அப்படியானவர் இல்லை. எனக்குத் தெரிந்த மனிதர் மிகவும் ஆக்ரோஷமானவர் இல்லை” என கூறியுள்ளார்.
அடுத்து என்ன நடக்கும்?
ரூத் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.
அவர் திங்கட்கிழமை பாம் பீச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின் போது அவர் தனது ஆயுதத்தை பயன்படுத்தி உண்மையில் துப்பாக்கி சூடு நடத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
”ஒரு தனிநபரால் எங்களது அதிகாரிகளை சுடமுடியுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக சந்தேக நபருடன் எங்கள் அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்” என்று ரகசிய சேவையின் மியாமி கள அலுவலகத்தின் ரஃபேல் பாரோஸ் கூறினார்.
பென்சில்வேனியாவில் டிரம்ப் மீதான முந்தைய கொலை முயற்சிக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், “அச்சுறுத்தல் அளவு அதிகமாக உள்ளது” என்றும் அவர் கூறினார்.
எஃப்பிஐ தனது விசாரணையை அறிவித்துள்ளது, மேலும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுகிறது.
ரகசிய சேவை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வட கரோலினாவின் கிரீன்ஸ்போரோவில் ரூத் முன்பு தங்கியிருந்த வீட்டையும் சோதனை செய்துள்ளனர்.