10
இந்தியாவின் தலைநகர் டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (03) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.
காலை சுமார் 9.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்துவதுடன், உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
விபத்தில் இதுவரை 40 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் பலர் மத்திய ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.