சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை உயரக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கப் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 15) ஓரிரு இடங்களிலும், 16 முதல் 20-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில்பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின் படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.