தமிழகத்தில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்றிதழ் உள்ளிட்ட போக்குவரத்துத்துறை சார்ந்த எந்தவொரு ஆவணமும் காகிதம் மற்றும் அட்டை வடிவில் வழங்கப்படாது, இவை அனைத்துமே இனி டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இதை பதிவிறக்கம் செய்யவும், பாதுகாக்கவும் வசதியுள்ள ஸ்மார்ட் ஃபோன் இல்லாதவர்கள், அதை பதிவிறக்கம் செய்து, அச்சிட்டு வைத்துக் கொள்ளலாம். இதனால் ஸ்மார்ட் கார்டுக்கு செலுத்தப்பட்ட ரூ.250 இனி செலுத்தத் தேவையில்லை.
ஏற்கெனவே இந்தியாவில் போக்குவரத்துத்துறை சார்ந்த அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் வடிவில் காண்பித்தால் போதுமென்ற நடைமுறையை மத்திய அரசு 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துவிட்டது. அதற்குப் பின்பும் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு ஆக இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் செப்டெம்பர் 15க்குப் பின்பு, முற்றிலுமாக டிஜிட்டலில் மட்டுமே இவை வழங்கப்படவுள்ளது.
போக்குவரத்துத்துறை தொடர்பான ஆவணங்களை வழங்கும் இந்த புதிய நடைமுறை பற்றி பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அரசின் அறிவிப்பு மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் பலருடைய கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு:
முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், கடந்த செப்டெம்பர் 2 ஆம் தேதி, பேரவையில் விதி எண் 110 ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியிலிருந்து ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவை டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்கப்படும் என்பது முக்கிய அறிவிப்பாகும்.
இதற்கு முன்பாகவும் டிஜிட்டல் வடிவிலான ஓட்டுநர் உரிமத்தை பலர் பயன்படுத்தி வந்தாலும், பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் கார்டுகளையும் உபயோகித்து வந்தனர். இனிமேல் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாது.
1. போக்குவரத்து ஆவணங்கள் இதுவரை எதன் அடிப்படையில் எவ்வாறு வழங்கப்பட்டு வந்தன?
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், அவை சார்ந்த 56 யூனிட் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்கள் மூலமாகவே புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குவது, உரிமம் புதுப்பிப்பது, வாகனப்பதிவுச் சான்றிதழ் வழங்குவது, வாகனப் பதிவுச்சான்றிதழில் பெயர் மாற்றுவது, வாகனப்பதிவுச் சான்று புதுப்பிப்பது, வாகன வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடக்கின்றன.
இவற்றுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அப்பாயின்மென்ட் வழங்கப்படும். அந்த நேரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலில் ஓட்டுநர் பயிற்சி உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாதத்துக்குப் பின்பு 6 மாதங்களுக்குள் மற்றொரு முறை இதேபோன்று அப்பாயிண்மென்ட் பெற்று எழுத்துத் தேர்வு, வாகனம் இயக்கிக் காண்பிப்பது போன்ற தேர்வுகளை எதிர்கொண்டு, அவற்றில் தேர்ச்சி பெறும்பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
இதற்கு பதிவுச்சான்று கட்டணம் தவிர்த்து, ஸ்மார்ட் கார்டு வழங்கவும் தனியாக ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதில் 200 ரூபாய் ஓட்டுநர் உரிமம் அதாவது ஸ்மார்ட் கார்டு வழங்கவும், 50 ரூபாய் தபால் கட்டணமாகவும் பெறப்பட்டுவந்தது. அதேபோன்று புதிய வாகனப்பதிவுச் சான்றிதழ் பெறவும், அந்த வாகனத்தின் மதிப்புக்கேற்ப வாகன வரி செலுத்துவதுடன், என்ஜின், சேஸிஸ் நம்பர்களைப் பதிவு செய்து, வாகனப்பதிவுச் சான்றிதழும் வழங்கப்பட்டுவந்தது. அதற்கும் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
2. ஸ்மார்ட் கார்டு கிடைப்பதற்கு சிலருக்கு தாமதமானதன் காரணம் என்ன?
ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக புத்தக வடிவிலும், காகித வடிவிலும் வாகனப்பதிவுச் சான்றும், ஓட்டுநர் உரிமமும் வழங்கப்பட்டுவந்தன. அவற்றை நகல் எடுத்து வைத்துக்கொண்டு, வாகன பரிசோதனையின் போது காண்பிக்க வேண்டிய நிலை இருந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் நடைமுறை, முதலில் சில பகுதிகளில் துவக்கப்பட்டது. அதன்பின்பு படிப்படியாக மாநிலம் முழுவதும் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவுச்சான்றிதழும் ஸ்மார்ட் கார்டு ஆகவே வழங்கப்படுகிறது. ஆனால் 10 ஆயிரம் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவுச் சான்றிதழ் விண்ணப்பங்கள் வந்தபின்பே அவை ஒன்றாகத் தயாரிக்கப்படும் என்பதால் இவை கிடைப்பதில் ஒரு வாரம் முதல் பல வாரங்கள் வரை தாமதம் ஏற்பட்டுவந்தது.
3. வரும் செப்டெம்பர் 15 ஆம் தேதியிலிருந்து வரவுள்ள புதிய நடைமுறை என்ன?
ஓட்டுநர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டால், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரித்தவுடன் அதை போக்குவரத்துத்துறை இணைதளத்திலிருந்தும், எம்.பரிவாஹன் செயலியிலியிருந்தும் அதே நாளிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பதாரரால் தரப்பட்டு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண்கள் வரும். அதை வைத்தே அவற்றைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
தனிநபர் தவிர, அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகளின் பெயர்களில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான வாகனப்பதிவுச் சான்றிதழ்களை க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரி பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும்.
இந்தியாவில் ஏற்கெனவே மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பச் சட்டப்படி, DigiLocker அல்லது mParivahan ஆகிய அதிகாரப்பூர்வ செயலிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவை அசல் ஆவணங்களுக்கு இணையானதாகக் கருதப்பட வேண்டும். அதே நேரத்தில் அதை புகைப்படம் எடுத்தும், பிடிஎஃப் வடிவிலும் கைபேசியில் காண்பித்தால் அது அசல் ஆவணமாகாது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
கடந்த 2020 அக்டோபர் முதல் தேதியிலிருந்து, இந்தியாவில் மோட்டார் வாகனச்சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, வாகனத் தணிக்கை மேற்கொள்ளும்போது, வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஆவணங்களை காகித வடிவில் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை டிஜிட்டல்வடிவில் காண்பித்தால் போதுமானது என்பது நடைமுறைக்கு வந்துவிட்டது.
கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காகிதமில்லாத போக்குவரத்து ஆவணங்கள் விநியோக நடைமுறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது தமிழகத்திலும் இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் போலி ஆவணங்கள் தவிர்க்கப்படும் என்பதுடன் ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ, மீண்டும் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளமுடியும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
4. எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்தும் ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவுச்சான்று பெறுவது எப்படி?
போக்குவரத்துத்துறையின் அனைத்து சேவைகளும் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டு, முழுமையாக டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில், எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்தும் வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இந்த வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப் படம்
5. ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் அல்லது பயன்படுத்தத் தெரியாதவர்கள் இவற்றைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
போக்குவரத்துத்துறைக்கான சேவைகளைப் பெறுவதற்கான எல்லா விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, புதிய வாகனம் வாங்குவோர், வாகனம் வாங்கும் டீலர் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கின்றனர். அவர்களே இதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதால் அவர்களை அதைப் பதிவிறக்கம் செய்து கார்டு ஆக அச்சிட்டுக் கொடுக்க முடியும்.
அதேபோன்று ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் பெரும்பாலானவர்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலமாக அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது உதவியுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கின்றனர். உரிமம் பெறுபவர் அல்லது வாகன உரிமையாளரின் தொடர்பு எண்ணுக்கு வரும் ஓடிபியை வைத்து பிறர் உதவியுடன் ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனப்பதிவுச்சான்றைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ள முடியும்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத்துறையால் பராமரிக்கப்படும் எம்.பரிவாஹன் செயலியில் வாகனப்பதிவுச் சான்றை பதிவிறக்கம் செய்ய அதன் என்ஜின் நம்பர் மற்றும் சேஸிஸ் நம்பர்களின் கடைசி 4 எண்களைக் கொடுத்தாலே போதுமானது. இந்த விவரங்களும் முதல் முறை மட்டுமே கேட்கப்படும். பின்பு எத்தனை முறையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
6. ஒருவருடைய வாகனத்தை அதன் உரிமையாளர் அல்லாத மற்றொருவர் எடுத்துச் செல்லும்போது அவரால் எப்படி டிஜிட்டல் ஆவணங்களைக் காண்பிக்க முடியும்?
அப்படி வாகனத்தை எடுத்துச் செல்லும் நபரின் தொடர்பு எண்ணுக்கு அந்த டிஜிட்டல் ஆவணங்களை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி எம்.பரிவாஹன் செயலியில் உள்ளது. அதன்படி ஒரு நாள், 7 நாள், 15 நாள், 1, 2, 3, 4, 5, 6 மாதம் வரையிலும் மாதக்கணக்கிலும், ஓராண்டுக்கும் மாற்றிக் கொள்ளவும் அதில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.