படக்குறிப்பு, தமிழ்நாடு நிதி அமைச்சர் மரிய வில்சன்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்துவருகிறார்.
பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் மரிய வில்சன், “உயிராய் நேசிக்கும் மக்களுக்காக சரித்திர வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய். 3 மாதங்களிலேயே ஏராளமான சாதனைகளை செய்திருக்கிறார் முதலமைச்சர். சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளுடன் தொடங்கிய இந்த அரசு பலவற்றை செய்து காட்டியுள்ளது.” என்றார்.
கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களையும் அமைச்சர் மரிய வில்சன் பட்டியலிட்டார். தொலைநோக்கு திட்டங்களை அடைவதற்கான பாதையை இந்த பட்ஜெட் வழிவகுத்து காட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டின் நிதிநிலையை வெள்ளை அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.” என்றார்.
இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அப்போதைய திமுக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று அரசு அமைத்ததை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் நாளை தாக்கல் செய்கிறார்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் வரவிருக்கும் நாட்களில் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகளும் அவற்றின் மீதான விவாதங்களும் நடைபெறும்.
பட மூலாதாரம், TNDIPR
தவெக அரசு பொறுப்பேற்றவுடன், விழா மேடையிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்பு படை, சிங்கப்பெண் படை ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவுகளில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளிக்கும் தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து கடந்த ஜூன் 16-ஆம் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த திமுக ஆட்சியில் நிதி நிர்வாகத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக கூறிய அந்த வெள்ளை அறிக்கையின் படி மாநிலத்தின் மொத்த கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களும் அடங்கும்.
பட மூலாதாரம், TNDIPR
படக்குறிப்பு, கடந்த ஜூன் மாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்
விஜயும் அவரது அமைச்சரவை சகாக்களும் கடன் சுமை பற்றி பலமுறை பேசியுள்ள நிலையில், தவெக தேர்தல் வாக்குறுதிகளில் வேறு என்னென்ன விஷயங்கள் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மறுபுறம், மின்வெட்டு, காவிரி நதிநீர் விவகாரம், மேகேதாட்டு அணை, சட்டம்-ஒழுங்கு போன்ற பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுவதற்கு ஒருநாள் அவகாசமே இருந்த நிலையில், முதல்வரை அவதூறு செய்ததால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டடார். அதுகுறித்து திமுக இன்று சட்டப்பேரவையில் குரல் கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது.