பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், கணேஷ் போல்
- பதவி, பிபிசி மராத்தி
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தற்போது அபிஜித் திப்கே, சோனம் வாங்சுக், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன.
அவர்கள் அனைவரும் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றுதான் – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே அது.
ஜூலை 20 அன்று, காக்ரோச் ஜனதா கட்சி பிரதிநிதிகள் குழு முதன்முறையாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியது.
அரசு தரப்பில் ஜே.பி. நட்டா இந்த விவகாரம் குறித்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதன் மூலம், போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையே உரையாடலுக்கான வாயில் திறந்திருப்பது தெளிவாகிறது.
இதனுடன், தற்போதைய மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் மோதி அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், முதலில் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்; அதன் பிறகே நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
மறுபுறம், சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரை விட்டு வெளியேற மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், மோதி அரசுக்கு நிலைமை எளிதானதாகத் தெரியவில்லை.
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தற்போது ஒரு முக்கியமான கேள்வி முன்வைக்கப்படுகிறது:
தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்குவது மோதி அரசுக்கு உண்மையிலேயே கடினமான காரியமா?
பட மூலாதாரம், Getty Images
மோதி அரசின் அணுகுமுறை
மோதி அரசில் உள்ள பல அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் இதற்கு முன்பும் எழுந்துள்ளன. ஆனால், பாஜக பொதுவாக அத்தகைய கோரிக்கைகளைப் புறக்கணித்தபடியே தனது அமைச்சர்களுக்கு ஆதரவாக நின்றுள்ளது.
மூத்த பத்திரிகையாளரும் தேசிய அரசியல் ஆய்வாளருமான விஜய் திரிவேதி, 2014 முதல் மோதி அரசின் அரசியல் செயல்பாட்டை கவனித்தால், அரசியல் அழுத்தத்தால் அமைச்சர்கள் பதவி விலகிய சம்பவங்கள் மிகவும் குறைவு என்று கூறுகிறார்.
அவரது கருத்துப்படி, இதுவரை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தவிர, தார்மிகப் பொறுப்பை ஏற்று பதவி விலகிய அமைச்சர்கள் மிகக் குறைவு.
“கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எப்ஸ்டீன் கோப்பு விவகாரத்துக்குப் பிறகு ஹர்தீப் சிங் பூரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தின் போது நரேந்திர சிங் தோமரையும் பதவி விலக கோரப்பட்டது”என்றார் விஜய் திரிவேதி.
“ரயில் விபத்துக்குப் பிறகும் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவர்கள் யாரும் உடனடியாக பதவி விலகவில்லை. மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த அரசு அரசியல் அழுத்தத்திற்கு பணியத் தயாராக இல்லை என்பதே தெரிகிறது.”
2015 ஜூன் மாதத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்தும் இந்த அணுகுமுறையை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சில அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்துவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “இங்கே யாரும் பதவி விலகப் போவதில்லை. இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அல்ல; தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு” என்று பதிலளித்தார்.
மூத்த பத்திரிகையாளரான விஜய் திரிவேதி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குள் தர்மேந்திர பிரதானின் அரசியல் செல்வாக்கும் இந்த விவகாரத்தில் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்.
அவர் கூறுகையில், “தர்மேந்திர பிரதானின் குடும்பத்துக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நீண்டகால தொடர்பு உள்ளது. 1984-ஆம் ஆண்டு ஏபிவிபி அமைப்பின் மூலம் அவர் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இத்தகைய தலைவரை அரசியல் அழுத்தத்தால் பதவியில் இருந்து நீக்குவது, அரசுக்கு அரசியல் தோல்வியாகப் பார்க்கப்படலாம்.” என்றார்.
இதுகுறித்து, டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச் அமைப்பின் ஆய்வாளரும் அரசியல் விஞ்ஞானியுமான ராகுல் வர்மா பிபிசி மராத்தியிடம், “முன்னர், அமைச்சக நிர்வாகத் தவறுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றத் தவறியதற்காக அமைச்சர்கள் பதவி விலகுவது அல்லது அவர்களிடம் இருந்து ராஜிநாமா பெறப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், மோதி அரசின் ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் அழுத்தத்தின் காரணமாக அமைச்சர்கள் பதவி விலகிய நிகழ்வுகள் மிகவும் குறைவாக உள்ளன. இத்தகைய போராட்டங்கள் அவ்வப்போது எழும்; அவற்றுக்கு ஒவ்வொரு முறையும் அரசியல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசு கருதக்கூடும்.” என்று கூறினார்.
காக்ரோச் ஜனதா கட்சி மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையாகும்.
பட மூலாதாரம், Getty Images
தேர்தல் வெற்றியே முக்கியக் கணக்கு?
இந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக சமூக ஊடகங்களில் தனது கருத்தை வெளியிட்டார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், ஜூலை 21 அன்று வெளியிட்ட அந்தப் பதிவில், பதவி விலகுவது குறித்து எந்த அறிகுறியையும் தர்மேந்திர பிரதான் வழங்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து பிபிசி மராத்தியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கிட்வாய்,”தார்மிகப் பொறுப்பை ஏற்று அமைச்சர்கள் பதவி விலகுவது என்பது மோதி அரசியலின் ஒரு பகுதியாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் பதவி விலகினால் அல்லது அவர்களிடம் இருந்து ராஜிநாமா பெறப்பட்டால், அது அரசின் செயல்திறன் குறித்த எதிர்மறையான செய்தியை அவர்களது ஆதரவாளர்களிடையே ஏற்படுத்தக்கூடும். மோதி அரசுக்கு தார்மிகப் பொறுப்பை விட தேர்தல் தாக்கம்தான் முக்கியமானது,” என்று கூறினார்.
ரஷீத் கிட்வாயும் அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மாவும், பொதுமக்கள் அழுத்தம் பாஜகவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் நிலைக்கு வராத வரை, மோதி அரசு அதற்கு பணியாது என்று கருதுகின்றனர்.
மறுபுறம், அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான அபிஷேக் சௌத்ரி,”பிரதமர் மோதி இப்போது இப்படிச் செயல்படுவதற்குக் காரணம், அரசியல் நிலை தன் கைகளிலிருந்து நழுவிச் செல்லக்கூடும் என்ற உணர்வு இருக்கலாம். ஒரு அமைச்சர் பதவி விலகினால், எதிர்காலத்தில் மற்ற அமைச்சர்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அழுத்தமும் அதிகரிக்கலாம். அதனால்தான் தனது அமைச்சரின் ராஜிநாமாவை பிரதமர் கோராமல் இருக்கலாம்,” என்று கூறுகிறார்
”இந்தப் போராட்டம் முந்தைய போராட்டங்களிலிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஏராளமான இளைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். இப்போது எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளன. அரசு அழுத்தத்துக்கு அடிபணிந்து அமைச்சரை ராஜிநாமா செய்ய வைத்தால், போராட்டக்காரர்களின் மன உறுதி மேலும் உயரும். இது மோதி கடைப்பிடித்து வரும் மையப்படுத்தப்பட்ட மற்றும் கடுமையான அரசியல் பாணியுடன் பொருந்தாது,” என ரஷீத் கிட்வாய் கூறினார்.
ஆனால், விஜய் திரிவேதி வேறொரு கோணத்தை முன்வைக்கிறார்.
அவரின் கருத்துப்படி, சர்ச்சைகளில் சிக்கிய அமைச்சர்களை மோதி அரசு ஒருபோதும் நீக்குவதில்லை என்பது உண்மையல்ல.
”அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றம் நடைபெறும் போது, சில அமைச்சர்களுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன அல்லது அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், பொதுவாக மோதி அரசு அரசியல் அழுத்தத்துக்கு உடனடியாக பதிலளிப்பதில்லை என்பதுதான் இதுவரை காணப்பட்ட நடைமுறையாக உள்ளது.” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
இது பாஜகவுக்கு அரசியல் இழப்பை ஏற்படுத்துமா?
தர்மேந்திர பிரதான் பதவி விலகாதது பாஜகவுக்கு அரசியல் இழப்பை ஏற்படுத்துமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களது கருத்துப்படி, எந்தப் போராட்டமும் நிரந்தரமாக நீடிப்பதில்லை. தற்போது தேர்தல் எதுவும் நடைபெறவில்லை. மேலும், ஒரு போராட்டத்தின் முக்கிய பிரச்னைகளும், தேர்தலில் வாக்காளர்கள் முன்னிலைப்படுத்தும் பிரச்னைகளும் பல நேரங்களில் வேறுபட்டவையாக இருக்கலாம்.
ராகுல் வர்மாவின் மதிப்பீட்டின்படி, தற்போதைய சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதில்தான் பல விஷயங்கள் அமையும்.
அடுத்த ஆறு மாதங்களில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதுவரை இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எவ்வாறு முன்னெடுக்கின்றன என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் அமையும் என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், ஜூலை 21 முதல் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து வருகிறது.
இது எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமைப்பாடு இல்லாததைக் காட்டுவதாக ரஷீத் கிட்வாய் கூறுகிறார்.
அவரது கருத்துப்படி, இன்று தெருக்களில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தேர்தல் நேரத்தில் வினாத்தாள் கசிவு விவகாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பார்களா அல்லது அரசியல் மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள் மீண்டும் மேலோங்குமா என்பது இன்னும் தெளிவாக இல்லை.
“தற்போது நாட்டில் அரசியல், சமூக மற்றும் மத அடிப்படையிலான பிளவுகள் மிகவும் ஆழமாக உள்ளன. மோதி மீது முழு நம்பிக்கை கொண்ட ஒரு வலுவான ஆதரவாளர் வட்டாரம் உருவாகியுள்ளது. அவர்கள் தங்களது தலைவரை பலவீனப்படுத்த விரும்புவதில்லை. மோதி சொல்வது அனைத்தும் சரியானதே என்று அவர்கள் நம்புகிறார்கள். மறுபுறம், மோதி எதைச் செய்தாலும் அவரை எதிர்ப்பவர்களின் கருத்தை மாற்றுவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று.” என்றார் ரஷீத் கிட்வாய்.
கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான வெளியுறவுக் கொள்கை, மணிப்பூர் வன்முறை, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் உள்ளிட்ட பல விவகாரங்களில் மோதி அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
ஆனால், அவற்றின் தேர்தல் தாக்கம் வரம்புக்குள் இருந்ததாக ரஷீத் கிட்வாய் கூறுகிறார்.
“விவசாயச் சட்டங்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் தேர்தல்களில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அரசு உணர்ந்தபோது, பிரதமர் மோதி அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றார். இதுவே மோதி அரசின் தேர்தல் கணக்கு ஆகும்” என்று ரஷீத் கிட்வாய் கூறினார்.
எனினும், மாணவர் போராட்டம் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற சிறிய அறிகுறி கூட அரசுக்கு கிடைத்தால், தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சகத்திலிருந்து மாற்றுவது அல்லது அவரது அமைச்சர் பொறுப்பை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
ஆனால், தற்போதைக்கு அத்தகைய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று விஜய் திரிவேதி கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
அமைச்சர்கள் ஏன் பதவி விலகுகிறார்கள்?
“ஒரு சர்ச்சைக்குரிய விவகாரம் விசாரணையில் இருக்கும் போது, அதனுடன் தொடர்புடைய அமைச்சகத்தின் அமைச்சர் பதவி விலகுவது என்பது குறைந்தபட்ச அரசியல் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குச் சமமானது. அந்த அமைச்சர் கட்சியில் முக்கிய அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருந்தால், பிரதமர் பின்னர் அவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கலாம். ஆனால் அந்த தருணத்தில், ஏற்பட்ட தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அரசின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் ராஜிநாமா ஒரு வழியாகக் கருதப்படுகிறது.” என்கிறார் அரசியல் ஆய்வாளர் அபிஷேக் சௌத்ரி.
இதற்கு உதாரணமாக அவர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசைச் சுட்டிக்காட்டுகிறார்.
2001 மார்ச் மாதம் தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷன் விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தார்மிகப் பொறுப்பை ஏற்று பதவி விலகினார். அந்த நடவடிக்கையை வாஜ்பாயும் ஆதரித்தார்.
அதேபோல், 1956 நவம்பரில் நிகழ்ந்த ரயில் விபத்துக்குப் பிறகு, அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, தார்மிகப் பொறுப்பை ஏற்று ராஜிநாமா செய்தார்.அவரது நடவடிக்கை, அரசியல் பொறுப்புக்கூறலுக்கான முன்மாதிரியாக இன்றளவும் குறிப்பிடப்படுகிறது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு