18
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ.க்கள் அந்த அரசுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிமுகவைக் காப்பாற்ற இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தேர்தலுக்குப் பின்னரான ஆலோசனையின் போது, திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கவும், தன்னை முதலமைச்சராக்கவும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ.க்கள், திமுகவுடன் இணைந்தால் அதிமுக என்ற இயக்கமே அழிந்துவிடும் என்று எச்சரித்ததாகக் கூறினார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,
சட்டமன்றக் குழுத் தலைவர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
கொறடா: சி. விஜயபாஸ்கர்
துணைத் தலைவர்: ஹரி
செயலாளர்: முன்னாள் அமைச்சர் காமராஜ்
இதேவேளை, புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழாவின் போது அதிமுகவின் பிளவு வெளிப்படையாகத் தெரிந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் 5 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே வந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தனியாக வந்தனர். சி.வி.சண்முகம் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் பாதியிலேயே வெளியேறி, பின்னர் சபாநாயகர் அறையில் தனியாகப் பதவியேற்றார்.
அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே தங்களின் கவலை என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். கட்சியை உடைக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டி, தோல்விக்கான காரணங்களை விவாதிக்க வேண்டும் என்றும் அவர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் அதிமுக 47 இடங்களைப் பிடித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.