• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

தவெக கட்சியின் முதல் மாநாடு அக்.27-க்கு தள்ளிவைப்பு – விஜய் வெளியிட்ட அறிவிப்பு | Actor Vijay Tamilaga Vettri Kazhagam Conference will be held on Oct 27

Byadmin

Sep 20, 2024


சென்னை: விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக. தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம். வாகை சூடுவோம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலம் தள்ளிவைப்பு: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த மாதம் 22-ம் தேதி கட்சியின் கொடி, பாடலை அறிமுகம் செய்தார். கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார். பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில், கட்சியின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக, பலரிடமும் கருத்து கேட்கப்பட்டு கட்சியின் கொள்கைகளை அவர் வகுத்து வருவதாகவும், அந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாநாடு நடத்துவதற்கு இடம் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்த விஜய், நிறைவாக விக்கிரவாண்டியை தேர்வு செய்தார். அங்கு செப்டம்பர் 23-ம் தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி காவல் துறையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கியது. ஆனாலும், திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி மாநாடு நடத்த இயலவில்லை. இந்நிலையில்தான், நடிகர் விஜய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



By admin