12
மக்களை அதிக அளவில் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் வகையில், இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, தினமும் நடைப்பயிற்சி செய்பவர்களுக்குப் பல்வேறு பரிசுகளும் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், NHS இங்கிலாந்து இந்தப் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் தினமும் சுமார் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
ஒரு மாதத்தில் தினமும் இவ்வாறு நடப்பதன் மூலம், ஒரு மாரத்தான் ஓட்டத்தின் தூரமான 26 மைல்களை அவர்கள் கடக்க முடியும்.
மக்கள் தங்களின் நடைப்பயிற்சியை இணையதளம் வழியாகவோ அல்லது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் மொபைல் போன்கள் மூலமாகவோ டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம்.,
இந்தச் சவாலை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வவுச்சர்கள், தள்ளுபடிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் போன்ற வெகுமதிகள் வழங்கப்படும் என்று NHS தெரிவித்துள்ளது.
ஒரு நபர் வாரத்திற்கு ஐந்து முறை, தலா 30 நிமிடங்கள் நடந்தால், அவரது ஆரோக்கியமான ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் வரை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் எதிர்காலத்தில் NHSக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்தில் சுமார் 1,00,000க்கும் அதிகமான மக்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக்கால நிதியை NHS வழங்கினாலும், பின்னர் பெரிய நிறுவனங்களின் நிதி உதவியுடன் இத்திட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 7,000 அடிகள் நடப்பது உடல்நலக் கோளாறுகளைக் குறைக்கும் என்றும், இத்தகைய எளிய முயற்சிகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் இதில் இணைவது எப்படி என்ற தகவல்கள் வரும் மாதங்களில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்.