திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட கருத்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரி சியாமள ராவ் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தில் நெய் அளவுக்கு அதிகமாக சேர்ப்பார்கள். இதற்கு முன்பு வனஸ்பதி மட்டுமே நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக கூறிவந்த சியாமள ராவ், தற்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு இருந்தது உறுதியாகியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஆந்திர பிரதேசத்தில் புதிய ஆட்சி அமலுக்கு வந்தவுடன் சியாமள ராவ், திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
“நான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல்வரை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தின் தரம் குறித்து என்னிடம் குறிப்பிட்டார். அதன் பிறகு நான் அதில் கவனம் செலுத்த துவங்கினேன். அந்த சமயத்தில் திருப்பதிக்கு 5 தனியார் நிறுவனங்களிடமிருந்து நெய் வாங்கப்பட்டது. அவர்களிடம் நாங்கள் நெய்யின் தரம் குறித்து எச்சரிக்கை செய்த பிறகு நான்கு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் தரத்தை மாற்றிக் கொண்டன. ஆனால் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதனை தொடர்ந்து நாங்கள் அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது சியாமள ராவ் கூறினார்.
கடந்த ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சியாமள ராவ், நெய்யில் வனஸ்பதி மட்டுமே கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார். ஆனால் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் விலங்குகளின் கொழுப்பும் கலக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சோதனை முடிவுகள் வெளிவந்த பிறகு நிபுணர்களிடம் பேசி அதைப் பற்றி புரிந்து கொள்ள தனக்கு நேரம் எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் எனப்படும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் நிறுவனத்திடம் இருந்து 10 டேங்கர்களில் நெய் கொண்டு வரப்பட்டது என்றும் அவற்றில் ஆறு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்த அவர், மீதமுள்ள நான்கு டேங்கர்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகிறார். சோதனை முடிவுகளில், அதில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆறு டேங்கர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டதா? அதில் கலப்பட சோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
அந்த நிறுவனத்திடம் நெய் வாங்குவதை நிறுத்துவதுடன், அதன் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகவும் சியாமள ராவ் தெரிவித்திருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஏ.ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம், “ஜூலையில் நாங்கள் மொத்தமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 16 டன் நெய்யை விநியாகித்துள்ளோம். நாங்கள் கலப்படமற்ற தூய்மையான நெய்யைதான் வழங்கினோம்,” என்று கூறியுள்ளது.
எஸ்.எம்.எஸ் என்ற தனியார் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெய்யின் சோதனை முடிவுகளை இணைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஏ.ஆர் நிறுவனம்.
திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒப்பந்தம் மே 8-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு, விநியோகம் மே-15 ஆம் தேதியில் துவங்கியது. ஒரு கிலோ நெய்க்கு ரூ.319 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகத்தை துவங்கியது ஏ.ஆர். நிறுவனம்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய சோதனை முடிவு என்ன?
தேவஸ்தானம் நெய் மாதிரிகளை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் சி.ஏ.எல்.எஃப். ஆய்வகத்திற்கு அனுப்பியது.
ஜூலை 17ம் தேதி மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனை ஜூலை 23ம் தேதி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவுகளே தற்போது சர்ச்சையின் மையப்பகுதியாக உள்ளன.
நெய்யின் ‘எஸ்’ மதிப்பீட்டிற்கு குறைவாகவோ, அதிகமாகவோ சோதனை முடிவுகள் வரும் பட்சத்தில் அந்த நெய்யில் ஏதேனும் கலப்படம் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சோதனை முடிவுகளின் படி, எஸ் மதிப்புகளை ஆய்வு செய்த போது ஐந்து மாதிரிகளும் தர மதிப்பீட்டு சோதனையில் தேர்ச்சிபெறவில்லை.
‘எஸ்’ மதிப்பீட்டைக் கணக்கிடும் போது, தேவஸ்தானத்தால் வழங்கப்பட்ட மாதிரிகளில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெய்யோடு தாவர எண்ணெய் மட்டுமின்றி விலங்குகளின் கொழுப்பும் இருப்பதாக இந்த சோதனை முடிவு கூறுகிறது.
மூன்றாவது பிரிவில் பாமாயில் மற்றும் மாட்டுக் கொழுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சோதனை முடிவுகள் இவ்வாறு வருவதற்கு மாட்டுக் கொழுப்பு காரணமா அல்லது பாமாயில் காரணமா என்று தெளிவாக தெரியவில்லை. நான்காவது கலப்பட பொருளாக பன்றியின் கொழுப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தை தொடர்பு கொண்டு பேசியது பிபிசி.
“பெறப்பட்ட மாதிரிகளின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். அனுப்புநரின் பெயர் மற்றும் இதர விபரங்கள் அதில் இருக்காது. மாதிரிகளை நாங்கள் பெற்றிருந்தாலும் அதன் முடிவுகள் குறித்து நாங்கள் எங்கும் தெரிவிக்க மாட்டோம். இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ரகசியமாக பாதுகாக்கப்படும். யாருக்கும் மாதிரிகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆய்வு மேற்கொள்ளப்படும்,” என்று தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த ஆய்வக முடிவுகள் பற்றி அறிந்திருந்த இரண்டு நிபுணர்களிடம் பேசியது பிபிசி. பால் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அவர்கள் தங்களின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இந்த கலப்படம் குறித்து பேசிய நிபுணர் ஒருவர் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது உண்மைதான் என்று கூறினார். “ஆனால் அது தாவர எண்ணெய்யா அல்லது விலங்கு கொழுப்பா என்று இந்த இந்த சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலமாக மட்டுமே குறிப்பிடும் முடியாது. இது தொடர்பாக மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாக 6 லட்சம் லிட்டர் பசும்பாலில் இருந்து தான் 15 டன் நெய்யை எடுக்க முடியும். என்னுடைய கருத்துப்படி திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய்யை விநியோகிக்கும் நிறுவனங்களிடம், இதுபோன்று அதிக அளவில் பசும்பாலை பெறுவதற்கான அமைப்பு இல்லை. மேலும் அவர்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே அங்கே கலப்படம் நடந்து இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் எதை கலப்படம் செய்தார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
“எனக்கு இதுகுறித்து ஏற்கனவே தெரியும். பொதுத்துறை பால் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவஸ்தானத்தை அணுகி அவர்கள் நெய்யை வழங்க விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேவஸ்தானம் அதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த பிரதிநிதிகள் தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயல் அதிகாரியிடம், தற்போது நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் குறைந்த விலைக்கு நெய்யை வழங்குவது சாத்தியமில்லை என்றும் கூறியிருந்தனர். ஆனால் அது குறித்து தேவஸ்தானம் கண்டுகொள்ளவில்லை,” என்று கூறினார் மற்றொரு நிபுணர்.
இந்த ஒரு சோதனை முடிவுகளை மட்டுமே வைத்து விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதா இல்லையா என்று கூறிவிட இயலாது. இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இந்தியாவைப் பொருத்தமட்டில் நெய்யில் பாமாயில் எண்ணெய் கலப்பது நடைமுறையில் இருக்கிறது. “ஆனால் தேவஸ்தான விவகாரத்தில் என்ன நடைபெற்றது என்று தெரியவில்லை,” என்று உணவு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் மற்றொரு நிபுணர் கூறினார்.
ஆனாலும், சில நிபந்தனைகள் அதே சோதனை முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பிடத்தக்க சூழலில் நெய்யின் மாதிரிகளை எடுத்திருந்தால் ஆய்வக முடிவுகள் தவறாக வரும்.
மாட்டிற்கு அளவுக்கு அதிகமாக தீவனம் கொடுக்கப்பட்டிருந்தாலோ, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருந்திருந்தாலோ, பாலில் கொழுப்பு நீக்கப்பட்டிருந்தாலோ, நெய்யின் மாதிரியை எடுக்க சிறப்பு வழிமுறைகளை பின்பற்றியிருந்தாலோ சோதனை முடிவுகள் தவறாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தேசிய பால்வள மேம்பாட்டு ஆய்வகத்தின் முடிவுகள் கூறுவது தான் என்ன? பால்வளம், ஊட்டச்சத்து, ரசாயனம், உணவு பாதுகாப்பு துறைகளில் உள்ள பலரிடமும் இதுகுறித்து புரிந்து கொள்ள பிபிசி முயற்சி செய்தது. இந்த விவகாரத்தின் வீரியம் உணர்ந்த அவர்கள் இது குறித்து பேச ஆர்வம் காட்டவில்லை.
இது முதல் முறையாக நடக்கிறதா?
இதற்கு முன்பும் பல காலங்களில் நெய் டேங்கர்களை தேவஸ்தானம் திருப்பி அனுப்பியுள்ளது.
எத்தனை முறை அனுப்பியுள்ளனர் என்று தெளிவாக தெரியவில்லை என்றாலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரின் ஆட்சி காலத்தின் போது குறைவான தரத்துடன் இருந்ததால் நெய் டேங்கர்கள் பலமுறை திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கின்றனர் தேவஸ்தான கவுன்சில் உறுப்பினர்கள்.
ஆனால் செயல் அதிகாரியோ, “தேவஸ்தானத்திடம் நெய்யை சோதிக்க ஆய்வகம் இல்லை என்றும், எந்த தர சோதனை முடிவுகளில் நெய் டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டது என தெரியவில்லை” என்றும் கூறியுள்ளார்.
செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் கர்நாடக பால் கூட்டமைப்பான நந்தினி திருப்பதிக்கு நெய்யை அனுப்பி வருகிறது.
அன்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், நெய்யில் கலப்படம் இருப்பது மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் விலங்குகளின் கொழுப்பு என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை.
அப்போது, புதிய ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், தரமான நெய் வாங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
விலை வேறுபாடுதான் உண்மையான காரணமா?
முந்தைய ஆட்சியின் போது வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தின் போது ரூ.319-க்கு ஒரு கிலோ நெய் வழங்க ஒப்புக் கொண்டது அந்த நிறுவனம்.
ஆனால் புறச்சூழல்கள் மற்றும் கலப்படம் ஆகியவற்றை பார்க்கும் போது இந்த விலைக்கு நிச்சயமாக ஒரு கிலோ நெய்யை வழங்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது தேவஸ்தானமும் அதை ஒப்புக் கொண்டது.
தற்போது நந்தினி நிறுவனத்திடம் இருந்து ரூ. 475க்கு ஒரு கிலோ நெய்யை வாங்கி வருகிறது. இதர நிறுவனங்களிடம் இருந்தும் நெய்யை வாங்குகிறது தேவஸ்தானம்.
பிரசாதத்தைச் சுற்றி நிகழும் அரசியல்
பிரசாதத்தின் தரம், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ள விலங்கு கொழுப்பு போன்றவை பக்தர்களின் நம்பிக்கையை காயப்படுத்திய அதே சூழலில் அதனைச் சுற்றி நடைபெறும் அரசியலும் தீவிரமாகி வருகிறது.
திருமலையில் உள்ள வணிகர் சங்கத்தின் தலைவர் முரளி இதுபற்றி பேசும் போது, “கடந்த காலத்தில் நெய்யின் தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திருப்பி அனுப்பப்பட்டது. இதர பொருட்களின் தரம் குறைவாக இருக்கும் போது அவையும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இதனை காரணமாக வைத்துக் கொண்டு எதிரணியினரை தாக்கக் கூடாது. உண்மையாகவே தவறு நடந்திருக்கும் பட்சத்தில், பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தண்டியுங்கள்,” என்று கூறினார்.
கர்நாடகாவைத் தவிர இங்கு வேறெந்த மாநிலங்களிலும் அதிகமாக பசுமாடுகள் கிடையாது. பஞ்சாபில் இருந்தாலும் கூட தூரம் காரணமாக நெய்யை இங்கே கொண்டு வர முடியாது. கர்நாடகாவில் இருந்து நெய்யை வாங்குவது நிறுத்தப்பட்ட பிறகு தான் இந்த பிரச்னையே எழுந்தது. தனியார் நிறுவனங்களிடம் இருந்து தேவஸ்தானம் நெய்யை வாங்கியது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெண்ணெய் போன்றவற்றோடு, நெய் கலப்படம் செய்யப்பட்டு நிறமேற்றிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவஸ்தானத்தில் சோதனைக் கூடங்கள் உள்ளை. உண்மையில் தேவஸ்தானத்தின் ஒப்பந்தத்தில் இரண்டரை லட்சம் பாலை வைத்து நெய் தயாரிக்கும் அமைப்புடன் இருக்கும் நிறுவனங்களுக்கு தான் விநியோக உரிமைகள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது. ஆனால் அவை ஏதும் கணக்கில் கொள்ளப்படாமல் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 35% நெய் நந்தினியிடம் இருந்து தான் வருகிறது. மற்றவை இதர நிறுவனங்களிடம் இருந்து வருகிறது,” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ரமணா கூறியுள்ளார்.
கடந்த காலங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
சியாமள ராவ் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, திருமலாவில் நெய்யை சோதிப்பதற்கான ஆய்வகம் இல்லை என்று கூறினார். ஏன் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆய்வகம் கட்டவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தற்போது குஜராத்தில் அமைந்திருக்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் ஆய்வ கருவி ஒன்றை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிகமாக, நெய்யின் தரத்தை மைசூரில் அமைந்துள்ள சி.எஃப்.டி.ஆர்.ஐ. மையத்தில் பரிசோதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி கூறுவது என்ன?
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆன பிறகும் சந்திரபாபு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளார் ஜெகன்.
“தூய்மையான நெய்யை வாங்க சிறப்பான அணுகுமுறையை கொண்டுள்ளது தேவஸ்தானம். பல காலங்களில் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டி அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. தேவஸ்தானத்தில் மூன்று கட்ட சோதனைகளுக்கு பிறகே நெய் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் சந்திரபாபுவின் ஆட்சியின் போது 14- 15 முறை நெய் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எங்களின் ஆட்சியின் போது 18 முறை டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதுவே பொதுவான நடைமுறை. ஜூலை 23ம் தேதி ஆய்வக முடிவுகள் வந்த போது வெளியிடாமல், ஆட்சி அமைக்கப்பட்ட நூறாவது நாளில் அதனை வெளியிடக் காரணம் என்ன? எதற்காக இது இரண்டு மாதம் தாமதப்படுத்தப்பட்டது? தேவஸ்தானம் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவதற்கு பதிலாக தெலுங்கு தேசம் கட்சியினர் இந்த முடிவை வெளியிடக் காரணம் என்ன? ஏன் இதனை தாமதம் செய்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஜெகன் மோகன்.
மேலும், “ஐயப்பனுக்கு 45 முறை மாலையிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார் சுப்பாரெட்டி. அவரை விட தேவஸ்தானத்திற்கு சிறந்த தலைமையை எப்படி கொண்டு வர இயலும்?” என்று தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் சுப்பாரெட்டி குறித்தும் கூறியுள்ளார் ஜெகன்.
பாஜக, ஜனசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் தெரிவித்துள்ளனர். விரிவான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு