திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களில் விவாதத்துக்கும் வழிவகுத்தது.
‘எக்ஸ்’ தளத்தில் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடக விவாதங்கள் பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ட்வீட்டும், நடிகர் பிரகாஷ் ராஜின் ட்வீட்டும் தான் விவாதத்தின் மையமாக உள்ளது.
லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தியது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
உண்மையில் நடந்தது என்ன?
செப்டம்பர் 19 அன்று, திருப்பதி கோவிலின் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து ஐடி செல் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்தது.
திருப்பதி லட்டில் கலப்படத்திற்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோருக்கு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பவன் கல்யாண் நிலைப்பாடு என்ன?
இந்து தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ட்வீட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
“திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டு நாங்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட திருமலா திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியம் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க எங்கள் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது” என்று பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார்.
தேசிய அளவில் ‘சனாதன தர்ம பாதுகாப்பு[’ரக்ஷனா] வாரியத்தை நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும், தேசிய அளவில் இது குறித்து விவாதம் தேவை என்றும் செப்டம்பர் 20 ஆம் தேதி பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார்.
பிரகாஷ் ராஜ் அறிவுரை
திருப்பதி லட்டு பிரசாதம் கலப்பட சர்ச்சையில் பவன் கல்யாணை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட் செய்துள்ளார்.
“அன்புள்ள பவன் கல்யாண், இந்த சம்பவம் நீங்கள் துணை முதல்வராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு நீங்கள் ஏன் தேவையற்ற அச்சத்தை பரப்புகிறீர்கள். இந்த பிரச்னையை தேசிய அளவில் ஊதி பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நாட்டில் போதுமான வகுப்புவாத பதற்றங்கள் உள்ளன. (மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி)’ என்று ட்வீட் செய்துள்ளார்.
நாட்டில் ஏற்கனவே மதம் சார்ந்த பிரச்னைகள் இருக்கிறது என்று குறிப்பிட்டு, மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு, அதாவது பா.ஜ.க.வுக்கு நன்றி என்று மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் “Just Asking’’ என்ற ஹேஷ்டேக் சேர்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் சங்க தலைவர் பதில்
பிரகாஷ் ராஜின் ட்வீட்டிற்கு தெலுங்கு நடிகர் சங்க தலைவர் நடிகர் மஞ்சு விஷ்ணு பதிலளித்துள்ளார்.
“என்னைப் போன்ற லட்சக்கணக்கான இந்துக்களுக்கு திருப்பதி லட்டு என்பது பிரசாதம் மட்டுமல்ல, நம்பிக்கையும் கூட. துணை முதல்வர் பவன் கல்யாண் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சிக்கிறார்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணு #StayInYourLane என்ற ஹேஷ்டேக்கைச் சேர்த்துள்ளார்.
மஞ்சு விஷ்ணுவின் ட்வீட்டுக்கு பிரகாஷ் ராஜ் பதிலளித்துள்ளார். தனது ட்வீட்டை டேக் செய்து, “ஓகே சிவய்யா.. நான் பகிர்ந்த கருத்து என்னுடைய கருத்து. நீங்கள் பகிர்ந்தது உங்களின் பார்வை ” என்று குறிப்பிட்டார்.
மஞ்சு விஷ்ணுவை சிவய்யா என்று பிரகாஷ் ராஜ் அழைக்க காரணம் அவர் கண்ணப்பா என்னும் படத்தில் நடித்திருப்பதால் தான் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
இந்தப் படத்தில் விஷ்ணுவை ‘சிவய்யா’ என்று சத்தமாக அழைக்கும் காட்சி இருக்கும்.
நெட்டிசன் கருத்து என்ன?
பிரசாதத்தில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியின் கொழுப்பை சேர்த்தது மத ரீதியான கவலையை பரப்பவில்லையா..? அதை வெளியுலகுக்கு சொல்வது மதப் பிரச்னையா? என்று நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் ட்வீட்டுக்கு குஜராத் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு தலைவர் ஹிதேந்திர பிடாடியா பதிலளித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலின் செல்வாக்கை அதிகரிக்க திருப்பதி கோவிலின் பெயரை கெடுக்க சதி நடந்துள்ளதா..? என்று அவர் பதிவிட்டுள்ளார்.
குஜராத்தின் நரேந்திர மோதியும், அமித் ஷாவும் அரசியல் சதி செய்யும் வரலாற்றைக் கொண்டவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 11 நாட்கள் பரிகார பூஜை நடத்தப்படும் என்று துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் உட்கொண்ட பிரசாதம் தூய்மையற்றது என்றால், ஒருவர் கூட பேசக்கூடாதா? அப்படிப் பேசுவது எப்படி மதச்சார்பற்ற அமைப்பை சீர்குலைக்கும்? இந்துக்களுக்கும் உணர்வுகள் உள்ளது. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசக் கூடாது என்று நீங்கள் எப்படி சொல்லலாம் ? என்று பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.
சுஸ்வாகதம், பத்ரி, ஜல்சா, கேமராமேன் கங்கதோ ராம்பாபு, வக்கீல் சாப் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)