ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தற்போது சர்ச்சையாகியுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட திருப்பதி லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
அமராவதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவலை வெளியிட்டார் சந்திரபாபு. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வணிகர் சங்கத் தலைவர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
சந்திரபாபு கூறியது என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய சந்திரபாபு முந்தைய ஆந்திர அரசை விமர்சனம் செய்தார்.
திருப்பதி கோவிலில் வரும் பக்தர்களுக்கு வழங்கும் லட்டுவை தயாரிக்கும்போது முறையான தர நிலைகளை முந்தைய அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.