• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பூரில் 7 மூட்டை தபால்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த போஸ்ட்மேன் தான் வளர்த்த நாயால் சிக்கியது எப்படி?

Byadmin

Jul 5, 2026


விநியோகிக்காமல் இருந்த தபால்கள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த காட்சி
படக்குறிப்பு, விநியோகிக்காமல் இருந்த தபால்கள் – செந்தில் குமார்(வலது)

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நட்பு, காதல் என பலவிதமான அன்பின் உணர்வுகளையும், பள்ளி, கல்லூரிச் சேர்க்கை, வேலைவாய்ப்பு என எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் செய்திகளையும் காகிதங்களாகச் சுமந்து வந்த தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது. எல்லாமே இணையமயமான பின்பு, மின்னஞ்சல்களிலும், சமூகஊடகங்களிலும் தகவல் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

ஆனாலும் இப்போதும் மத்திய, மாநில அரசுகளால் அனுப்பப்படும் தகவல் கடிதங்கள், ஆதார ஆவணங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின் அழைப்பிதழ்கள், சட்டப்பூர்வமான அழைப்பாணைகள் போன்றவை தபால் மூலமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

நாய் கடித்ததால் வெளிச்சத்துக்கு வந்த தபால்கள் பதுக்கல்

பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த பல ஆயிரம் தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் துணை அஞ்சலகம் உள்ளது. நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வரும் தபால்களை விநியோகிப்பதற்காக அங்கு பணியாற்றும் 4 தபால்காரர்களில் ஒருவர்தான் செந்தில்குமார். இவர் வெள்ளகோவிலில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தபால்களை விநியோகிக்கும் பணியை பல ஆண்டுகளாகச் செய்து வருவதாக அங்குள்ள ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

இவருடைய வீடு, அருகிலுள்ள காங்கேயம் நகராட்சியிலுள்ள தட்டான்தோட்டத்தில் உள்ளது. இவர் வீட்டுக்கு முன்புறமுள்ள வீட்டில் வசிக்கும் பழனியம்மாள் என்பவருக்குச் சொந்தமான காலியிடம், செந்தில்குமாரின் வீட்டிற்கு அருகில் உள்ளது.

By admin