பட மூலாதாரம், Getty Images
சார்லஸ் டார்வின் 1838ஆம் ஆண்டில் இயற்கைத் தேர்வு (Natural selection) குறித்த தனது கருத்துக்களை வகுக்கத் தொடங்கினார். ஹச்எம்எஸ் (HMS) பீகிள் என்ற அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் போது, குறிப்பாக தென் அமெரிக்காவில் அவர் பெற்ற அவதானிப்புகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்தார்.
இந்த காலகட்டத்தில், அவர் லண்டன் புவியியல் சங்கத்தின் செயலாளராகவும் ஆனார், அந்தப் பதவி கணிசமான பொறுப்புகளைக் கொண்டிருந்தது. மேலும் பிற ஆராய்ச்சிகளைத் தொடரும் அதே வேளையில், பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் டார்வின் சமர்ப்பித்தார்.
அந்த வருடத்தின் அத்தனை பணிகளுக்கும் மத்தியில், ஒரு தனிப்பட்ட விஷயம் அவரது எண்ணங்களை ஆக்கிரமித்தது.
வாழ்க்கைத் துணை இருப்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? திருமணம் அவரது வாழ்க்கையிலும் வேலையிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
அதே வருடம், ஏப்ரல் மாதத்தில், தனியாக வாழ்வதன் நன்மைகள் மற்றும் துணையோடு வாழ்வதன் தீமைகள் குறித்து அவர் சில குறிப்புகளை எழுதினார்.
திருமணம் செய்வதன் நன்மைகள் மற்றும் தீமைகள்
ஜூலை மாதம், டார்வின் இந்த விஷயத்தின் மீது மீண்டும் கவனம் செலுத்தினார், ஆனால் இந்த முறை மிகச்சிறப்பாக. 29 வயதான அந்த இயற்கை ஆர்வலர், திருமணம் குறித்த அந்த முக்கியமான கேள்விக்கு விடை கண்டறிய இரண்டு பட்டியல்களை உருவாக்கினார்.
‘திருமணம் செய்து கொள்வது’ என்ற தலைப்பின் கீழ், நன்மைகள் என அவர் கருதியவற்றை பின்வருமாறு பட்டியலிட்டார்:
- குழந்தைகள் (இறைவன் நாடினால்).
- உங்கள் மீது அக்கறை காட்டும் நிலையான துணை (வயதான காலத்தில் அந்த துணை நண்பராகவும் இருக்கக்கூடும்).
- விளையாடவும் நேசிக்கவும் ஏதோ ஒன்று இருக்கும் (எப்படியும் ஒரு நாயை விட சிறந்தது).
- வீடும், அந்த வீட்டைப் பராமரிக்க ஒருவரும்.
- இசையின் வசீகரமும் பெண்ணிய உரையாடலும்.
“இந்த விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஆனால் நேரத்தை வீணடிப்பதாகும்.” என பின்னர் அவர் கூறினார்.
“அய்யோ கடவுளே, வாழ்நாள் முழுவதையும், ஒரு ஆண்மை நீக்கப்பட்ட தேனீயைப் போல, வேலை செய்து கொண்டே, வேறு எதுவுமே செய்யாமல் கழிப்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இல்லை, நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன்.” என்றார் டார்வின்.
பட மூலாதாரம், Getty Images
அவர் இரண்டு காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தார்: “லண்டனில், ஒரு அழுக்கு வீட்டில் தனியாக வாழ்வதை கற்பனை செய்து பாருங்கள். மறுபுறம், ஒரு நல்ல சோஃபா, மென்மையான மனைவி, குளிருக்கு நல்ல நெருப்பு, அதனுடன் புத்தகங்கள் மற்றும் இசை என கற்பனை செய்து பாருங்கள்.”
பின்னர் அவர் ‘திருமணம் செய்யாதீர்கள்’ என்ற தலைப்பின் கீழ், பின்வருபவற்றை பட்டியலிட்டார்:
- எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கான சுதந்திரம்.
- மற்றவர்களுடன் பழகலாமா வேண்டாமா என்பதைத் நீங்களே தேர்ந்தெடுப்பது.
- கிளப்களில் புத்திசாலி மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்.
- உறவினர்களைப் பார்க்கச் சென்று ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் வளைந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
- குழந்தைகளின் செலவுகள் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கலாம். (ஒருவேளை சண்டைகள்).
- நேர விரயம்.
- மதிய வேளைகளில் படிக்க முடியாமல் இருப்பது.
- உடல் பருமன் மற்றும் சோம்பல்.
- பதற்றம் மற்றும் பொறுப்பு.
- புத்தகங்கள் போன்றவற்றுக்குக் குறைவான பணம்.
- உங்களுக்கு நிறைய குழந்தைகள் இருந்தால், நீங்கள் உணவுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள் (அதிகமாக வேலை செய்வது உங்கள் உடல்நலத்திற்கு மிகவும் மோசமானது).
- ஒருவேளை என் மனைவிக்கு லண்டன் பிடிக்காமல் போகலாம்; அப்படியானால் நான் நாடுகடத்தப்பட்டு, எங்கோ ஒரு இடத்தில சோம்பேறியாகவும், படைப்புத்திறன் அற்றவனாகவும் வாழும் நிலையை அடையலாம்.
தீமைகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும், நன்மைகள் அதிக மதிப்பைக் கொண்டிருந்தன, ஏனெனில் டார்வினின் இறுதி முடிவு என்பது: “எனவே, நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் தர்க்கரீதியான முடிவு.”
திருமணம் எப்போது செய்துகொள்ள வேண்டும்?
ஒரு முடிவுக்கு வந்த பிறகு, டார்வின் புதிய கேள்விகளை எடுத்துக்கொண்டார்: “திருமணம் செய்வது அவசியம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு, எப்போது செய்துகொள்ள வேண்டும்? கூடிய விரைவிலா அல்லது பின்னர்?”
“நீங்கள் இளமையாக இருந்தால், வளைந்து கொடுக்கும் குணம் அதிகம் இருக்கும், அதற்கு ஏற்ப உணர்வுகளும் தெளிவாக இருக்கும். நீங்கள் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நிறைய மகிழ்ச்சியான தருணங்களை இழக்க நேரிடும். எனவே விரைவில் திருமணம் செய்யுமாறு” சமூகம் டார்வினுக்கு அறிவுறுத்தியது.
ஆனால் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பு அவரைப் பயமுறுத்தியது.
“முடிவற்ற பிரச்னைகள் மற்றும் செலவுகள், அற்பமான சமூக வாழ்க்கைக்குள் தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய விவாதங்கள் மற்றும் தினசரி நேரத்தை வீணடிப்பது” ஆகியவற்றை அவர் எதிர்பார்த்தார்.
நேரம் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கூட வீணாகும் என அவர் நினைத்தார்.
“என்னால் பிரெஞ்சு கற்றுக்கொள்ள முடியாது, முழு கண்டத்தை சுற்றிப் பார்க்க முடியாது, அமெரிக்கா செல்ல முடியாது, பலூன் விமானத்தில் பறக்க முடியாது, வேல்ஸுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடியாது. ஒரு அடிமை போன்ற வாழ்க்கை” என்று அவர் எழுதினார்.
ஆனால், தன் கருத்தில் இருந்து அவர் பின்வாங்குவது போல் தோன்றியபோது, அவர் தனது தொனியை மாற்றி எழுதினார்: “உற்சாகமாக இருங்கள். நீங்கள் இந்த தனிமையான வாழ்க்கையை, ஒரு சோர்வு நிறைந்த முதுமையுடன், குளிரில், நண்பர்கள் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் வாழ முடியாது.”
மேலும், “கவலைப்படாதே, வாய்ப்புகளின் மீது நம்பிக்கை கொள். பல மகிழ்ச்சியான அடிமைகள் நம்மைச் சுற்றி உள்ளனர்.” என்றும் குறிப்பிட்டார்.
நவம்பர் 11ஆம் தேதி, அவர் தனது நாட்குறிப்பில், “மிகவும் சிறந்த நாள்!” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். காரணம் அன்று, டார்வினின் உறவினர் எம்மா வெட்ஜ்வுட், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். அதை டார்வின் கொண்டாடினார்.
பட மூலாதாரம், Getty Images
எம்மாவின் “சம்மதம்” மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், அது எதிர்பாராதது அல்ல.
டார்வின் மற்றும் வெட்ஜ்வுட் பரம்பரைகளுக்கு இடையே பல தலைமுறைகளாக திருமண பந்தங்கள் இருந்தது. டார்வினுக்கு எம்மா தான் பொருத்தமான தேர்வாக இருந்தார். அவர்களது குடும்பத்தினரும், இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டனர்.
இருப்பினும், டார்வினின் ‘திருமண ஆசை மற்றும் முன்மொழிவு’ எம்மாவை ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் அவர் டார்வினை விரும்பினார், ஆனால் டார்வின் தன்னை ஒரு சாதாரண உறவினராக மட்டுமே பார்த்தார் என எம்மா நினைத்திருந்தார்.
ஆனால் டார்வினை திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய பட்டியல்களை எம்மா உருவாக்கியிருந்தால், அவருடைய பட்டியல் வேறுபட்டிருக்கும் என ஹெலன் லூயிஸ் பிபிசி தொடரான ”கிரேட் வைவ்ஸ்”-இல் சுட்டிக்காட்டுகிறார்.
தனியாக வாழ்ந்தால், டார்வினுக்கு கிடைக்கக்கூடிய எந்த வசதிகளும் அவருக்குக் கிடைத்திருக்காது.
பலூன் விமான பயணங்களோ அல்லது வேல்ஸுக்கு தனியாக பயணிக்கவோ முடியாது.
அந்தக் காலத்தில், ஒரு பெண்ணுக்கு, ஒரு வளர்ப்பு நாய் இருப்பதை விட, ஒரு கணவன் கிடைப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது.
அப்போது இருந்த சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அல்லது பணக்கார மனிதரின் மனைவியாக இருப்பது ஒரு சிறந்த, தர்க்கரீதியான தேர்வாக இருந்தது.
‘எம்மா- ஒரு அற்புதமான துணைவி’
பட மூலாதாரம், Getty Images
ஆறு மாதங்களுக்குப் பிறகு, எம்மாவும் சார்லஸ் டார்வினும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர், பத்து குழந்தைகளைப் பெற்றனர், அன்பான குடும்ப வாழ்க்கையை நடத்தினர், 1882இல் டார்வின் இறக்கும் வரை ஒன்றாக இருந்தனர்.
அந்த 43 வருடங்களில், எம்மா தனது கணவரின் எழுத்துக்களை நகலெடுத்து தட்டச்சு செய்தது மட்டுமல்லாமல், தனது மொழித் திறனைப் பயன்படுத்தி, அறிவியல் முன்னேற்றங்கள் தொடர்பான செய்திகளை மொழிபெயர்த்து அவருக்குத் தெரிவித்தார்.
மேலும், இது அவரது மிகவும் பலவீனமான உடல்நலம் குறித்த அழுத்தத்தில் இருந்தும், தொற்று மற்றும் பரம்பரை நோய்களால் அவரது குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பாதிக்கப்படுவதைப் பார்ப்பதால் ஏற்படும் உளவியல் துயரத்தில் இருந்தும் அவரை காப்பாற்றியது.
டார்வினின் பக்கம் அவர் இருந்ததால், டார்வினுக்கு கிடைத்த நன்மைகள் எண்ணற்றதாக இருந்திருக்கும். ஏனெனில் டார்வினின் பணியை சாத்தியமாக்கிய பல அம்சங்களை எம்மா கையாண்டார்.
இதனால் (டார்வினின் மகன்களில் ஒருவர் விவரித்தபடி) டார்வினின் தினசரி வாழ்க்கை சீராக இருந்தது: காலை 7:00 மணிக்கு அவர் தனியாக காலை உணவை உட்கொள்வார், காலை 7:45 மணி முதல் மதியம் வரை அவர் வேலை செய்வார். பிறகு தோட்டத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு பிறகு, அவர் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிடுவார்.
அன்றைய தினம் தனது அறிவுசார் பணிகளை முடித்த பிறகு, அவர் எம்மாவிடம் ஒரு நாவலையோ அல்லது வேறு இலக்கியப் படைப்பையோ படித்துக் காட்டச் சொல்வார்; பின்னர் அவர் மீண்டும் நடைப்பயிற்சி மேற்கொள்வார், சில வேலைகளைச் செய்வார்,
பின்னர், மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை, இரவு உணவிற்கு முன் எம்மா மீண்டும் அவருக்கு வாசித்துக் காட்டுவார். டார்வின் விரும்பியதெல்லாம் அவரது விருப்பப்படி வழங்கப்பட்டது.
ஒரு அற்புதமான துணை இருப்பது, வாழ்க்கையின் சலிப்பான, முடிவில்லாத பணிகளால் திசைதிருப்பப்படாமல், வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது.
19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த, சிறந்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கலைஞர்களை விட, அறிவுசார் பணிகளுக்கு ஏற்ற மிகவும் சரியான வீட்டுச் சூழல்களை சிலர் அனுபவித்திருக்கிறார்கள்.
காபி அல்லது தேநீர் கோப்பைகள் வருவது அல்லது மேஜையில் உணவுகள் திடீரென தோன்றுவது தவிர, எந்த இடையூறும் இல்லாமல் அவர்களால் பணிகளைச் செய்ய முடியும்.
ஒரு காதல் கதை
பட மூலாதாரம், Getty Images
ஒரு சிறந்த மனைவியால் எவ்வளவோ விஷயங்களைச் செய்ய முடியும், அது வேரா நபோகோவ் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருந்தது.
வேராவின் கணவர் எழுத்தாளர் விளாடிமிர் நபோகோவ் சொற்பொழிவுகளை நிகழ்த்தும்போது, அவருக்கு உதவுவதற்காக மேடையின் ஓரத்தில் வேரா அமர்ந்திருப்பார்.
வேரா தான், அவருடைய கணவரின் ஏஜென்ட், மொழிபெயர்ப்பாளர், தட்டச்சு செய்பவர், கோப்புகளை சேமித்து வைப்பவர், ஆடை வடிவமைப்பாளர், நிதி மேலாளர், ஓட்டுநர். கணவரது அனைத்து நாவல்களின் முதல் வாசகராகவும் வேரா இருந்தார்.
கணவர் பல்கலைக்கழகத்தில் பாடங்களை எடுக்க தவறியபோது கூட, வேராவே கணவருக்குப் பதிலாக வகுப்புகளை எடுத்தார்.
ஒரு சமையல்காரர், கணவனைக் கவனித்துக்கொள்பவர், சலவைத் தொழிலாளி மற்றும் பணிப்பெண் என அந்த காலத்தில் ஒரு மனைவியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனைத்து கடமைகளையும் அவர் செய்தாலும், தான் ஒரு ‘மோசமான இல்லத்தரசி’ என்றே அவர் நினைத்துக்கொண்டிருந்தார்.
மேலும், கணவருடன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிக்கச் சென்றார். அவை 5 வயதிலிருந்தே கணவரைக் கவர்ந்த உயிரினங்கள். கணவரோ அவற்றைத் தேடி, ஆய்வு செய்ய பயணம் செய்தார்.
12 வயது சிறுமியை விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய நாவலான “லோலிடா” வெளியான பிறகு, நபோகோவ் சர்ச்சைக்கு ஆளானார். எனவே வேரா தனது பணப்பையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கணவனுக்காக எந்த கொலையாளியையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களுடையது ஒரு சிறந்த காதல். 1923இல் பெர்லினில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் சந்தித்தனர். தனது கவிதைகளில் சிலவற்றை வேராவுக்கு, நபோகோவ் வாசித்துக் காட்டினார்.
பின்னர் அவர் எழுதினார்: “என் ஒவ்வொரு எண்ணத்திற்கும் உங்கள் ஆன்மாவில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.”
வேராவின் அறிவுத்திறன், சுதந்திர உணர்வு, நகைச்சுவை உணர்வு மற்றும் இலக்கியத்தின் மீதான காதல் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர், வேராவுடன் சில மணிநேரங்கள் செலவிட்ட பிறகு வேராவுக்கான தனது முதல் கவிதையை எழுதினார்.
அவர்களது 52 வருட திருமண வாழ்வில், வரலாற்றின் மிகச்சிறந்த காதல் கடிதங்களில் சில எனக் கருதப்பட்ட கடிதங்களை வேரா பெற்றார். அவை ‘லெட்டர்ஸ் டு வேரா’ என்ற புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், எல்லா மேதைகளின் மனைவிகளும் அவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் அல்ல.
புகழ்பெற்ற எழுத்தாளர் டால்ஸ்டாயின் மணவாழ்க்கை
பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் எழுதி 1889 இல் வெளியிடப்பட்ட “தி க்ரூட்ஸர் சொனாட்டா” என்ற சிறு நாவல், முந்தைய பத்து ஆண்டுகளில் அவர் கட்டமைத்த தார்மீக தத்துவத்திற்கு ஒரு மெல்லிய மறைமுக ஊடகமாக இருந்தது.
அதற்குள் அவர், கிறித்தவம் குறித்த தனது சொந்த பதிப்பை உருவாக்கி, தனது பிரபுத்துவ பட்டத்தைத் துறந்து, தனது முந்தைய நாவல்களைப் பற்றி மோசமாகப் பேசியிருந்தார்.
அவர் “அன்னா கரேனினா”-வை (லியோ எழுதிய ஒரு நாவல்) அருவருப்பானது என்று கூறி, ஒரு விவசாயியைப் போல உடை அணியத் தொடங்கினார்.
“தி க்ரூட்ஸர் சொனாட்டா”வில், காதலுக்காக திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை கேலி செய்யும் ஒரு ஆணுடன், கதை சொல்பவர் ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார்,
வாழ்க்கையில் பெண்களுடன் தனக்கு ஏற்பட்ட அனைத்து காதல் விவகாரங்களுக்கும் தான் வருந்துவதாக அந்த ஆண் கூறுகிறார்.
“பெண்களின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் உடலால் ஆண்களை மயக்குகிறார்கள். மனித இனத்தில் பத்தில் ஒன்பது பங்கு மக்களை, பெண்கள் கடின உழைப்புக்கு அடிமைப்படுத்துகிறார்கள். ஏனென்றால் பெண்கள் சுரண்டப்பட்டுள்ளனர், ஆண்களுக்கு சமமான அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவர்கள் நமது காம உணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலையில் நம்மை சிக்க வைத்து பழிவாங்குகிறார்கள்,” என்று அந்தக் கதாபாத்திரம் கூறும்.
டால்ஸ்டாயின் நாவலின் முக்கிய கதாபாத்திரம் பொறாமையால் அவதிப்படுகிறது, ஏனெனில் அந்த நபர் தனது மனைவி ஒரு அழகான வயலின் கலைஞரை காதலிக்கிறாள் என்று சந்தேகிக்கிறார்.
டால்ஸ்டாயின் மனைவி சோபியா, குடும்ப இசை ஆசிரியருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார், எனவே இந்தப் படைப்பை அவர் மீதான விமர்சனமாக பார்க்கலாம்.
டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையேயான சிக்கலான உறவு
பட மூலாதாரம், Getty Images
டால்ஸ்டாயின் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்தவர் சோபியா என்பதால், அவருக்கு செய்தி புரிந்திருக்கும் என்று நாவலாசிரியர் உறுதியாக நம்பலாம்.
டால்ஸ்டாய் தம்பதியினருக்கு இடையே சிக்கலான உறவு இருந்தது.
சோபியாவின் வாழ்க்கை, அவரது கணவரின் தொழில், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் சொத்து மேலாண்மை மற்றும் அவரது பொறுப்பில் இருந்த விவகாரங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. அவர் எப்போதும் தனது கணவரின் இலக்கிய லட்சியங்களை ஆதரித்தார்.
டால்ஸ்டாய், மனைவியிடம் கருத்துகளைக் கேட்டார், மேலும் பல்வேறு ஆலோசனைகளை அவருடன் நடத்தினார். டால்ஸ்டாயின் முழுமையான படைப்புகளை வெளியிடும் மகத்தான திட்டத்திற்கு சோபியா திட்ட மேலாளராகவும் செயல்பட்டார். அது தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களை கையாண்டார்.
மேலும் 13 பிரசவங்களின்போது படுக்கையில் இருந்தபோதும், ஒரு சிறப்பு மேசையை உருவாக்கி, அவர் தொடர்ந்து கணவரின் எழுத்துக்களை நகலெடுக்கும் வேலையைச் செய்தார்.
இவற்றில் சுமார் 6,00,000 வார்த்தைகள் கொண்ட “போர் மற்றும் அமைதி” (War and peace) போன்ற படைப்புகளும் அடங்கும். இது தவிர, டால்ஸ்டாய் நான்கு பெரிய நாவல்கள், சுமார் ஒரு டஜன் குறு நாவல்கள் மற்றும் குறைந்தது 26 சிறுகதைகளை எழுதினார்.
‘தி க்ரூட்ஸர் சொனாட்டா’ வெளியிடப்பட்ட நேரத்தில், கணவருடனான சோபியாவின் உறவு இறுக்கமடைந்தது, ஏனெனில் அந்தச் சிறந்த எழுத்தாளர், இளம் பிரபுவான விளாடிமிர் செர்ட்கோவுடன் அதிக நேரம் செலவிட்டார்.
அந்தப் பிரபுவோ, மனைவிக்கு எதிரான கருத்துக்களால் டால்ஸ்டாயின் மனதை நிரப்பினார், மேலும் அராஜகவாதத்தில் (அதிகார மையங்களுக்கு எதிரான கோட்பாடு) அவரது ஆர்வத்தையும் ஊக்குவித்தார்.
எனவே டால்ஸ்டாய் தனது உலக உடைமைகள் அனைத்தையும் துறந்து, அவற்றை ஊழல் நிறைந்ததாகக் கருதியபோது, தனது குழந்தைகள் பசியால் இறக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சோபியாவிடம் இருந்தது.
எனவே கணவரது நாவல்களை வெளியிடும் பொறுப்பை சோபியா ஏற்றுக்கொண்டார். மேலும் தணிக்கை காரணமாக கணவரது புத்தகங்களைத் தடை செய்வதை நிறுத்துமாறு ஜார் மன்னர் மற்றும் தேவாலயத்திடம் கெஞ்சினார்.
‘சோபியாவின் இந்த வணிக ரீதியான பரிசீலனைகள், அவர் ஒரு துரோகி மற்றும் முதலாளித்துவவாதி என்பதை நிரூபித்ததாக’ செர்ட்கோவ் டால்ஸ்டாயிடம் கூறினார்.
அக்டோபர் 28, 1910 அன்று, டால்ஸ்டாய் வீட்டை விட்டு வெளியேறினார். அவர்களுக்கு திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகியிருந்தன.
ஒரு வாரத்திற்கும் மேல் தேடிய பிறகு, இறுதியாக தனது 82 வயதான கணவர் மற்றும் எழுத்தாளர் டால்ஸ்டாயை கண்டுபிடித்தார் சோபியா. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில், ரசிகர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்ட நிலையில், அவர் மரணத்திற்கு அருகே இருந்தார்.
டால்ஸ்டாயின் மரணம் ஒரு ஊடக நிகழ்வாக மாறியது.
ஆனால் அவரது கடைசி நிமிடங்கள் வரை, டால்ஸ்டாயின் மரணப் படுக்கையிலிருந்து சோபியா ஒதுக்கி வைக்கப்பட்டார்.
“நான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நூற்றுக்கணக்கான முறை, ஒரு அடிமை போல சேவை செய்திருக்கிறேன். என் அறிவுசார் ஆற்றல் மற்றும் எல்லா வகையான ஆசைகளும் என்னுள் கிளர்ந்தெழுவதை உணர்ந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் அந்த ஏக்கங்களையெல்லாம் நசுக்கி, அடக்கி வைத்திருக்கிறேன்.” என அந்நிகழ்வுக்கு சில வருடங்களுக்கு முன்பு சோபியா குறிப்பிட்டிருந்தார்.
“எல்லோரும் கேட்கிறார்கள், ‘ஆனால் உங்களைப் போன்ற ஒரு பயனற்ற பெண்ணுக்கு ஏன் அறிவுசார் அல்லது கலை வாழ்க்கை தேவை? என்று” எனக் குறிப்பிட்டுள்ள சோபியா, “அந்தக் கேள்விக்கு ஒரு பதிலையே கூற முடியும், ‘எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு மேதைக்கு சேவை வேண்டும் என்பதற்காக, எனது உணர்வுகளை நிரந்தரமாக அடக்கிவைப்பது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு