மதுவிலக்கு மாநாட்டிற்கு அ.தி.மு.கவுக்கு அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என தி.மு.க. – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த சலசலப்பு எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். என்ன நடந்தது?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் செய்தித் தொடர்புப் பிரிவின் செயலர் டி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மதுவிலக்கு விவகாரத்தை வைத்து தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின.
செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார்.
ஆனால், அதே நாளில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தி.மு.க. – வி.சி.க. கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். காலை 11.30 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் வழங்கினோம்.
அதில் இடம்பெற்றுள்ள முதலாவது கோரிக்கை, தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது கோரிக்கை தேசிய அளவிலானது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47ன் படி, படிப்படியாக மதுவிலக்கை இந்தியா அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்பதாகும்.
கோரிக்கையை படித்துப் பார்த்த முதல்வர் மதுவிலக்கு தமிழ்நாட்டில் அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு அதைப் படிப்படியாக எவ்வாறு நிறைவேற்ற முடியுமோ அவ்வாறு செய்வோம். வி.சி.கவின் மாநாட்டில் தி.மு.கவின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செலாளர் டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார்கள் என்று சொன்னார்” என்று தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. – வி.சி.க. கூட்டணியில் எந்த நெருடலும் இல்லை என்றும் கூறினார்.
“மதுவிலக்கு மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் எல்லாக் கட்சிகளும் வரலாம், அ.தி.மு.கவும் வரலாம் என திருமாவளவன் பேசியது, எதிர்பாராத அளவில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. அதற்குப் பிறகு, அமெரிக்காவிலிருந்து முதல்வர் தமிழ்நாட்டிற்குத் திரும்பும் நாளில், ‘அதிகாரத்தில் பங்கு’ குறித்த வீடியோ ஒன்றை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, நீக்கி பிறகு மீண்டும் வெளியிடப்பட்டது.
இதெல்லாம் சேர்த்து திருமா கூட்டணி மாறப்போகிறாரோ என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. வி.சி.க.விற்குள்ளேயே தி.மு.கவுக்கு கூடுதல் அழுத்தம் அளிக்கவேண்டும் எனக் கருதும் சக்திகள் இருக்கலாம். அவர்கள் இதனைச் செய்திருக்கலாம். ஆனால், இப்போது அந்த மதுவிலக்கு மாநாட்டில் கலந்துகொள்வதாக அறிவித்ததன் மூலம், கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகள் யாரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாதபடி செய்துவிட்டது தி.மு.க..
தி.மு.க. தலைமையகத்தில் வந்து முதல்வரைச் சந்தித்ததைப் போல, கூட்டணிக்கு வெளியில் உள்ள கட்சிகளின் தலைவர்களைப் போய் திருமாவளவன் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, கூட்டணியைப் பொறுத்தவரை இப்போதைக்கு போர் நிறுத்தம் வந்திருப்பதாகச் சொல்லலாம்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
மதுவிலக்கு மாநாட்டில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம்; தேர்தல் அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என திருமாவளவன் சொல்வதை ஏற்கலாம் என்றாலும் வீடியோ வெளியிடப்பட்டதுதான் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
“மதுவிலக்கு குறித்து பலரும் பேசினாலும் இப்போதைக்கு அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பது எல்லோருக்குமே தெரியும். மதுவிலக்கு மாநாட்டிற்கு தி.மு.கவின் கூட்டணிக் கட்சியாக இருந்தபடி, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் அழைப்பது என்பதே வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொள்வதாகவே வைத்துக்கொள்வோம். அவர் பேசிய பிறகு ஆர்.எஸ். பாரதி பேசினால் என்னவாகும்? இது ஒருபுறமிருக்க, அதிகாரத்தில் பங்கு குறித்து பேசிய வீடியோவை இந்தத் தருணத்தில் வெளியிட்டு, நீக்கி, மீண்டும் வெளியிட்டதும் ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது” என்கிறார் குபேந்திரன்.
ஆனால், கூட்டணி மாற்றம் தொடர்பாக, இந்தத் தருணத்திலேயே ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது என்கிறார் அவர்.
மதுவிலக்கு மாநாட்டை ஒட்டி எழுந்த யூகங்கள் அனைத்தும் தவறானவை என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு.
“இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் தலைவரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு மாநாட்டை நடத்துவோம். அதுவும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து நடத்துவோம். கடந்த ஆண்டு ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் நடத்தினோம். அதற்கு முந்தைய ஆண்டு, ‘சமூக நீதி சமூகங்களுடைய ஒற்றுமை மாநாடு’ என்ற பெயரில் நடந்தினோம். இந்த ஆண்டு ‘மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு’ என்ற பெயரில் நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நாங்களாக அ.தி.மு.கவுக்கு அழைப்புவிடுக்கவில்லை. எல்லோரும் வரலாம் என்று சொன்னபோது, அ.தி.மு.கவும் பங்குபெறலாமா எனக் கேட்டபோது, பங்கு பெறலாம் என திருமாவளவன் பதிலளித்தார். மதுவிலக்கு தொடர்பாக, எல்லா கட்சிகளுமே தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அ.தி.மு.கவும் அதனைச் சொல்ல வேண்டும்.
தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக இருக்கிறது. ஆகவே அந்தக் கூட்டணியைச் சிதைக்க வேண்டும், அதற்காக அந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.கவை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இப்படி கிளப்பிவிடுகிறார்கள்” என்கிறார் வன்னியரசு.
வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “அதிகாரத்தில் பங்கு என்பது 1999ஆம் ஆண்டிலிருந்து வி.சி.க. முன்வைத்துவரும் கருத்துதான். அதில் புதிதாக ஏதும் இல்லை. செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்த மண்டல செயற்குழு கூட்டத்திலும் அதைத்தான் திருமாவளவன் பேசினார். அந்த வீடியோதான் பதிவேற்றப்பட்டது. ஆனால், அதன் ஒரு பகுதி மட்டும் பதிவேற்றப்பட்டதால் முழுவதையும் பதிவேற்றும்படி சொன்னார். ஆகவே, அது நீக்கப்பட்டு மீண்டும் பதிவேற்றப்பட்டது. அதில் வேறு எதுவும் இல்லை” என்றார் அவர்.
வி.சி.கவின் கூட்டணி
1999ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் வி.சி.க. இடம்பெற்று, த.மா.கா. சின்னத்திலேயே 2 இடங்களில் போட்டியிட்டது.
2001-ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 8 இடங்களில் போட்டியிட்டது.
2004-ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி என்ற பெயரில் ஜனதா தளம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 8 இடங்களில் போட்டியிட்டது.
2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்ணியில் போட்டியிட்டது.
2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் இடம்பெற்றது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி. 2 இடங்களில் போட்டியிட்டது.
2016 சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் வி.சி.க. 25 இடங்களில் போட்டியிட்டது.
2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சி.க இடம்பெற்றது.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில் விசிக தொடர்ந்தது.