• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

தீவிரவாதம் வியாபிப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் | சஜித்

Byadmin

Sep 19, 2024


இலங்கை என்பது ஜனநாயக நாடாகும். மக்களுடைய சுதந்திரம், விருப்பம் என்பனவற்றை மையமாகக் கொண்டு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அச்சுறுத்தல்களையும் ஒடுக்குமுறைகளையும்  தீவிரவாதத்தையும் வியாபிக்கின்ற அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 69ஆவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (18) எம்பிலிபிட்டிய நகரில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு மேற்படி தெரிவித்த சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க ‘இயலும்’ என்று சொல்கின்ற போது, அவருடைய சகாக்கள் அநுரகுமார திசாநாயக்கவால் ‘இயலும்’ என்று சொல்கின்றார்.  ரணில் இயலும் என்று சொன்னாலும் புலமைப்பரிசில் பரீட்சையேனும் முறையாக நடத்த முடியாது. பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது.

அத்தோடு பரீட்சைக்கு முன்பு இந்த வினாத்தாளை வெளியிட்டது யார் என அநுரகுமார திசாநாயக்கவிடம் கேட்கின்றோம். எந்தப் பிரதேசத்துக்குரிய எந்த கட்சிக்குரியவர் இதனை லீக் செய்தார் என அவரிடம் கேட்கின்றோம். அநுரகுமார திசாநாயக்க இதற்கு விடையளிக்க வேண்டும்.

இன்று வினாத்தாளை தயாரித்தவர்களும் லீக் செய்தவர்களும் அரசியல் ஜோடியாக மாறி இருக்கின்றார்கள். இந்த அரசியல் திருமணம் 21ஆம் திகதியோடு விவாகரத்தாகும்.

20 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவோம்.

21ஆம் திகதி எந்த சந்தேகமும் இன்றி 20 இலட்சம் வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம். ரணில் விக்கிரமசிங்க அநுரகுமார திசாநாயக்க கூட்டணி 21ஆம் திகதியோடு தோல்வியை தழுவுவார்கள். இது புலனாய்வுத் துறையின் தகவல்களாகும்.

வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்

தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை சங்கைக்குரிய தலதா மாளிகையில் வைத்து, தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தோம். புனித தலதா மாளிகையின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட முதல் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்படுவேன். தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை புத்த பெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும். அத்தோடு இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். மாற்றுக்கருத்து கொண்டுள்ள எவரையும் எதிரியாக பார்க்காமல் அவர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இது மத சார்பற்ற நாடல்ல. இந்த நாட்டு பிரஜைகளுக்கு தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குவோம். இது மத சார்பற்ற நாடல்ல. தமது மதத்துக்கான, கலாச்சாரத்துக்கான உரிமையுள்ள நாடு. அதனை நாம் மேம்படுத்துவதோடு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். போதைப் பொருளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நாட்டை மீட்டெடுப்போம்.

ஜேவிபி, மொட்டு, திசைகாட்டி, unp போன்ற கட்சிகளில் உள்ளவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய வாக்குகளை வீணடிக்காது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவை வழங்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம். முழு நாட்டையும் ஐக்கியப்படுத்தி ஒற்றுமையுடனும், நட்புடனும், நல்லிணக்கத்துடன் நாட்டை வலுப்படுத்துவதோடு, இந்த நாட்டை கட்டி எழுப்புவோம்.

இலஞ்ச ஊழல் மோசடியை ஒழிப்போம்

இலஞ்ச ஊழலை முதலில் ஒழிப்போம். சிலரைப் போன்று கட்டுக்கட்டாக பைல்களை வைத்துக்கொண்டு திருடர்களை பிடிப்போம் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு திருடர்களை பிடித்திருக்கின்றோம். சொல்வதைச் செய்கின்ற குழு ஒன்று தம்மோடு இருப்பதால் நம்மிடம் அரசியல் டீல் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு பல சலுகைகள்

விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 50 கிலோ கிராம் உரத்தை 5000 ரூபாவுக்கு வழங்குவோம். பல்வேறு வகையான விவசாயங்களில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய நகரங்களை உருவாக்குவோம். புதிய தொழில்நுட்பத்தின் ஊடாகவே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும். ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள சொத்துக்களையும் வளங்களையும் விற்பனை செய்கின்றது.

தொழிற்சாலைகளை மூடுகின்றவர்களும் கொளுத்துகின்றவர்களும் இன்று ஒன்றாக சேர்ந்துள்ளனர்.

ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி இந்த நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்கினாலும், தற்போதைய அரசாங்கம் தொழிற்சாலைகளை மூடி முதலீட்டாளர்களை வெளியேற்றுகின்றார்கள். அடுத்த மாற்று குழுவினர் தொழிற்சாலைகளுக்கு தீவைக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி தொழில் வாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும்.

வன்முறைக்கு நாட்டில் இடமில்லை

அனைத்து இடங்களிலும் சிலர் வன்முறைகளை தூண்டி அச்சத்தை உருவாக்கி ஒடுக்கி மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்ய முயற்சிக்கின்றனர். இலங்கை என்பது ஜனநாயக நாடாகும். மக்களுடைய சுதந்திரம் விருப்பம் என்பனவற்றை மையமாகக் கொண்டு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அச்சுறுத்தல்களையும் ஒடுக்கு முறைகளையும்  தீவிரவாதத்தையும் வியாபிக்கின்ற அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம். எனவே 220 இலட்சம் மக்களும் எந்தவித அச்சமுமின்றி 21ஆம் திகதி தொலைபேசிக்கு வாக்களித்து உங்கள் பலத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

By admin