வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மகோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மகோற்சவ திருவிழாக்களில் மஞ்சள் திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதியும் , மாம்பழத் திருவிழா ஓகஸ்ட்19ஆம் திகதியும், சப்பரத் திருவிழா ஓகஸ்ட் 20ஆம் திகதியும், தேர்த் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதியும், தீர்த்தத் திருவிழா ஓகஸ்ட் 22ஆம் திகதி காலை இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவம் நிறைவு பெறும்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாநகர சபையால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி வரையில் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்துக்கு நேர்த்திக் கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல் மாநகர சபையால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்குப் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்புச் செய்ய முடியும்.உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்தல், வானூர்தியைப் பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வான வேடிக்கை நிகழ்வுகளைச் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
The post நல்லூரான் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.