படக்குறிப்பு, நாகாடைட்டன் (Nagatitan) என்ற இந்த புதிய டைனோசர் இனம் 10 முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது.கட்டுரை தகவல்
எழுதியவர், விகி வாங்
பதவி, பிபிசி நியூஸ்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தாய்லாந்தில் தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, நீண்ட கழுத்து கொண்ட புதிய வகை மாபெரும் டைனோசர் வாழ்ந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தென்கிழக்கு ஆசியாவில் இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகப்பெரிய டைனோசரான இந்த ‘நாகாடைட்டன்’, 27 டன் எடையும் (அதாவது ஒன்பது முதிர்ந்த ஆசிய யானைகளின் எடைக்குச் சமம்) 27 மீட்டர் (சுமார் 88 அடி) நீளமும் கொண்டது. இது ‘டிப்ளோடோகஸ்’ டைனோசரை விட நீளமானது.
அந்த டைனோசரைப் போலவே, இதுவும் நீண்ட கழுத்தைக் கொண்ட தாவர உண்ணிகளான ‘சாரோபாட்’ குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
பிரிட்டன் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு தசாப்தத்திற்கு முன்பு வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களிலிருந்து இந்த புதிய இனத்தை அடையாளம் கண்டுள்ளது.
பண்டைய காலநிலை சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், இத்தகைய மாபெரும் டைனோசர்கள் உருவாக எவ்வாறு வழிவகுத்தன என்பது குறித்து இந்த கண்டுபிடிப்பு விளக்குவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
பெயரின் பின்னணி என்ன?
இந்த டைனோசரின் முழுப் பெயர் ‘நாகாடைட்டன் சாயாபுமென்சிஸ்’ ஆகும்.
நாகா (Naga): தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் பாம்பைக் குறிக்கிறது.
டைட்டன் (Titan): கிரேக்க புராணங்களில் வரும் வலிமைமிக்க கடவுள்களைக் குறிக்கிறது.
சாயாபுமென்சிஸ் (chaiyaphumensis): இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ‘சாயாபும்’ மாகாணத்தைக் குறிக்கிறது.
இது 10 முதல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது, அதாவது பிரபலமான ‘டைரனோசரஸ் ரெக்ஸ்’ (Tyrannosaurus Rex – T-Rex) டைனோசரை விட சுமார் 4 கோடி ஆண்டுகள் பழமையானது மற்றும் அதை விட இரண்டு மடங்கு பெரியது ஆகும்.
‘சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியராக, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் (யூ.சி.எல்) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் தாய்லாந்து மாணவர் திதிவூத் சேதாபனிச்சாகுல் இருந்துள்ளார்.
இந்த புதைபடிவங்கள் அந்நாட்டின் மிகவும் இளமையான டைனோசர் காலப் பாறை அமைப்பில் கண்டெடுக்கப்பட்டதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த நாகாடைட்டனை தாய்லாந்தின் “கடைசி டைட்டன்” என்று அழைப்பதாக அவர் கூறினார்.
“டைனோசர்களின் காலத்தின் இறுதிக் கட்டத்தில் உருவான இளமையான பாறைகளில் டைனோசர்களின் எச்சங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அதற்குள் அந்தப் பகுதி ஆழமற்ற கடலாக மாறிவிட்டது. எனவே, தென்கிழக்கு ஆசியாவில் நாம் கண்டறியும் கடைசி அல்லது மிக சமீபத்திய பெரிய சாரோபாட் டைனோசராக இது இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, ஆராய்ச்சியாளர் திதிவூத் சேதாபனிச்சாகுல், நாகாடைட்டன் டைனோசரின் முன் கால் எலும்புடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தன்னை ஒரு “டைனோசர் குழந்தை” என்று கூறிக் கொள்ளும் சேதாபனிச்சாகுல், இந்த ஆய்வு “ஒரு டைனோசருக்குப் பெயரிட வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்றியுள்ளது” என்று யூ.சி.எல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்ட 14-ஆவது டைனோசர் இனம் நாகாடைட்டன் ஆகும்.
மகாசாரகாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லுயிரியலாளர் சீதா மானிட்கூன் கூறுகையில், தாய்லாந்தில் அதிக அளவிலான டைனோசர் புதைபடிவ பன்முகத்தன்மை இருப்பதாகவும், “டைனோசர் எச்சங்களின் அடிப்படையில் ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய இடமாக இது இருக்கக்கூடும்” என்றும் கூறினார்.
பூமியின் வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு அளவும், உலக வெப்பநிலையும் ஒரே நேர்கோட்டில் உயர்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் இந்த நாகாடைட்டன் பூமியில் வாழ்ந்துள்ளது.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும், யூ.சி.எல் பேராசிரியருமான பால் அப்ஸ்சர்ச், நேஷனல் ஜியோகிராஃபிக் இதழுக்கு அளித்த பேட்டியில், இந்தக் காலகட்டத்தில் சாரோபாட் குடும்ப டைனோசர்கள் மிகப் பெரிய உடலமைப்பைக் கொண்டவையாக மாறியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
“பெரிய உடல்கள் வெப்பத்தைத் தங்களுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றை எளிதில் குளிர்விக்க முடியாது. அப்படியிருக்க, சாரோபாட் டைனோசர்களால் எப்படி இவ்வளவு அதிக வெப்பநிலை சூழலைச் சமாளித்து வாழ முடிந்தது என்பது சற்று விசித்திரமாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “மாபெரும் உடலமைப்பைக் கொண்ட தாவர உண்ணிகளான சாரோபாட் டைனோசர்களுக்கு முக்கியமானதாக இருந்த தாவர உணவுகளின் மீது, இந்த அதிக வெப்பநிலை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது,” என்றும் தெரிவித்தார்.