படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
பதவி, பிபிசி தமிழ்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. பிளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்த வெற்றி தேவை என்ற நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் நேற்று (மே 18) சேப்பாக்கத்தில் தோற்றிருக்கிறது சிஎஸ்கே.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுக்க, அதை 19 ஓவர்களில் சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 16 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்தது. அவர்களோடு குஜராத் டைட்டன்ஸ் அணியையும் (16 புள்ளிகள்) அவர்கள் அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அதேசமயம் 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் சூப்பர் கிங்ஸ் 12 புள்ளிகளில் தேங்கி நிற்கிறது. ஞாயிற்றுக் கிழமை ஆர்சிபி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த நிலையில், இன்னும் ஒரேயொரு இடம் தான் மீதமிருக்கிறது. அந்த இடத்தை சிஎஸ்கே அடைவதற்கான வாய்ப்பு இந்தத் தோல்வியின் மூலம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதனால், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின் முடிவையும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டிருக்கிறது.
மிக முக்கியமான இந்தப் போட்டியில் சில தருணங்களில் நல்ல நிலையில் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது ஏன்? தற்போது அவர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மற்ற போட்டிகளில் என்ன நடக்கவேண்டும்?
கேப்டன்களின் செயல்பாடும், அது ஏற்படுத்திய தாக்கமும்
டாஸ் வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் தேர்ந்தெடுத்த போது பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் உள்பட. ஆனால், டாஸுக்குப் பிறகு ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதை நல்ல முடிவு என்று கூறினார். இந்த ஆடுகளம் போகப்போக மெதுவாக மாறும் என்றும், ரன் குவிப்பது கடினமாகும் என்றும் கூறிய அஷ்வின், அதனால் முதலில் பேட்டிங் செய்வது சிஎஸ்கே அணிக்கு நல்லது என்று கூறினார்.
அஷ்வின் சொன்னது போலத்தான் அந்த ஆடுகளம் இருந்தது. ஆரம்பத்தில் சன்ரைசர்ஸ் பௌலர்கள் வேகமாகப் பந்துவீசிய போது பவுண்டரிகள் அடிப்பது எளிதாக இருந்தது. அதனால், முதல் 3 ஓவர்களிலேயே 43/1 என்ற நிலைக்கு சென்றுவிட்டது சிஎஸ்கே. ரன்ரேட் 14.33. ஆனால், அதன்றபிகு சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் வேகத்தைக் குறைத்து பந்துவீச, சூப்பர் கிங்ஸின் வேகமும் குறைந்தது. அடுத்த 10 ஓவர்களில் ரன்ரேட் வெகுவாகவே குறைந்தது.
படக்குறிப்பு, இந்த சீசனில் 120.67 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிவரும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அணுகுமுறை தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகிவருகிறது
இந்த ரன்ரேட் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக விளங்கினார் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். இந்தப் போட்டியில் 21 பந்துகள் சந்தித்த அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 71.42.
12வது ஓவர் வரை ஆடிய கெய்க்வாட், இந்த இன்னிங்ஸில் 1 பவுண்டரி கூட அடிக்கவில்லை. அவர் அடிக்க முற்படவே இல்லை. மறுபக்கம் ஓரளவு அடித்து ஆடிய சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல் மற்றும் கார்த்திக் ஷர்மா போன்ற வீரர்களுக்கு சிங்கிள்கள் எடுத்துக் கொடுக்கும் வேலையையே அவர் செய்தார். ஆனால், சன்ரைசர்ஸ் வீரர்கள் வேகத்தைக் குறைத்து பவுண்டரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்திய போது அது ரன் விகிதத்தை மொத்தமாகவே பாதித்தது.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் இதுபற்றிப் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர்கள் மிட்செல் மெக்லகன் மற்றும் அம்பத்தி ராயுடு இருவரும், பெரிய மைதானத்தைப் பயன்படுத்தி கெய்க்வாட் 2 ரன் எடுக்கக்கூட முற்படவில்லை என்று விமர்சனம் செய்தார்கள். உண்மைதான், இந்த இன்னிங்ஸில் சிஎஸ்கே கேப்டன் அடித்த 15 ரன்களும் 15 சிங்கிள்கள் மூலம் வந்தவை. அவர் ரன்ரேட்டை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடக்கூட இல்லை.
அதேசமயம் சூப்பர் கிங்ஸ் ஓரளவு நல்ல நிலையில் இருந்த போதெல்லாம் தானாக முன்வந்து தன் அணிக்கு விக்கெட் வீழ்த்திக் கொடுத்தார் சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ். சஞ்சு சாம்சன் முதல் இரு ஓவர்களில் 5 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் விளாச, மூன்றாவது ஓவரில் பந்துவீச வந்து சாம்சனை அவுட்டாக்கினார் கம்மின்ஸ்.
அடுத்ததாக, கார்த்திக் ஷர்மா விக்கெட்: 8வது ஓவரில் பிரஃபுல் ஹிங்கே பந்துவீச்சில் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடித்தார் கார்த்திக் ஷர்மா. 9வது ஓவரில் ஷிவாங் குமார் பந்துவீச்சிலும் ஒரு சிக்ஸர் அடித்தார். உடனே 10வது ஓவரை தானே பந்துவீச வந்தார். ஸ்வீப்பர் கவரில் ஒரு ஃபீல்டர் வைத்து, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இரண்டு ஸ்லோயர் பவுன்சர்கள் வீசினார். அந்த இரண்டாவது பவுன்சரில் சிக்கினார் கார்த்திக் ஷர்மா.
அந்த ஸ்பெல்லைத் தொடர்ந்த கம்மின்ஸ் 12வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டையும் கைப்பற்றினார். இப்படியாக தன் அணிக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் தானே முன்வந்து கம்மின்ஸ் விக்கெட் எடுத்துக் கொடுக்க, ஆட்டத்தில் மெல்ல தங்கள் பிடியை இறுக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், சூப்பர் கிங்ஸுக்கு தங்கள் கேப்டனிடமிருந்து அப்படியொரு செயல்பாடு கிடைக்கவில்லை.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, முக்கியமான தருணங்களில் முன்நின்று பந்துவீசிய சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் இந்தப் போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்
சன்ரைசர்ஸிடமிருந்து பாடம் கற்க மறந்ததா சிஎஸ்கே?
முதல் இன்னிங்ஸில் பந்தின் வேகத்தைக் குறைத்து சிஎஸ்கே அணியின் ரன்ரேட்டை வெகுவாகக் கட்டுப்படுத்தினார்கள் சன்ரைசர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள். இந்த ஆடுகளத்துக்கு அது மிகச் சரியான அணுகுமுறையாக அமைந்தது. அதீத அதிரடி காட்டும் சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு எதிராக அந்த அணுகுமுறை சூப்பர் கிங்ஸ் பௌலர்களுக்கும் கைகொடுக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், சிஎஸ்கே பௌலர்கள் அதைச் செய்யவே இல்லை.
ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் தங்களின் வழக்கமான பாணியையே கடைபிடித்தார்கள். பவர்பிளேவில் சரியான லைன் & லென்த்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியதால் அவர்களால் நெருக்கடி கொடுக்க முடிந்தது. ஆனால், அப்போதும் கூட அவர்கள் ஸ்லோயர் பால்களைப் பயன்படுத்தியிருக்கவில்லை. பவர்பிளேவுக்குப் பின்பும் கூட அவர்கள் அதையேதான் செய்தார்கள்.
யார்க்கர், வைட் யார்க்கர் என்று அவர்கள் வழக்கம்போல் பந்துவீசினார்கள். அதை வேகமாகவும் வீசினார்கள். அது சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு சவால் எதுவும் ஏற்படுத்தவில்லை. அந்தப் பந்துகள் அவ்வப்போது தவறி ஸ்லாட்டில் விழ, அதை இஷான் கிஷன் போன்ற சன்ரைசர்ஸ் பேட்டர்கள் எளிதாகக் கையாண்டார்கள். சில தருணங்களில் நன்றாக பேட்டில் படாத பந்துகள் கூட வெகுதூரம் சென்றன.
இதை விமர்சித்த அம்பத்தி ராயுடு, “சன்ரைசர்ஸ் பௌலர்கள் ஸ்லோயர் பால்களை நன்கு பயன்படுத்தினார்கள். அது அவர்களுக்கு நன்கு உதவியது. அதை சிஎஸ்கே பௌலர்கள் முயற்சி செய்திருக்கவேண்டும். எனக்குத் தெரியும் அது அவர்களின் பலம் இல்லையென்று. ஆனால், அதற்கு பெருமளவு உதவிய ஆடுகளத்தில் முயற்சி செய்திருக் கவேண்டும்” என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய மிட்செல் மெக்லனகன், “சன்ரைசர்ஸுக்கு என்ன உதவியது என்று சிஎஸ்கே கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். சன்ரைசர்ஸ் பௌலர்களிடமிருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை அல்லது கற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். கடைசி கட்டத்தில் கெய்க்வாட் தன் பௌலர்களிடம் மெதுவாக வீசும்படி சைகை செய்தார். ஆனால், பௌலர்கள் அதை செய்யவில்லை. ஒன்று அவர்களால் அதை செய்ய முடியாது, இல்லை அவர்கள் செய்யக்கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய பிரச்னை” என்று கூறினார்.
இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் பௌலர்கள் 43% ஸ்லோயர் பால்கள் வீசினார்கள். அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் பௌலர்கள் 19% ஸ்லோயர் பால்களை மட்டுமே வீசியிருக்கிறார்கள்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் போல் வேகத்தைக் குறைத்து ஸ்லோயர்கள் பால்கள் வீசவில்லை
சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியுமா?
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் என மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் என இரு அணிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருக்கின்றன. அதனால் மீதமிருக்கும் அந்த 1 இடத்துக்கு இன்னும் 5 அணிகள் போட்டியிடுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் – 13 போட்டிகளில் 13 புள்ளிகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் – 12 போட்டிகளில் 12 புள்ளிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் – 13 போட்டிகளில் 12 புள்ளிகள்
டெல்லி கேபிட்டல்ஸ் – 13 போட்டிகளில் 12 புள்ளிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12 போட்டிகளில் 11 புள்ளிகள்
12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸை ஆமதாபாத்தில் சந்திக்கிறது. அந்தப் போட்டியில் ஜெயித்தால் சிஎஸ்கே-வால் 14 புள்ளிகள் பெறமுடியும். அதேசமயம், ராயல்ஸ் அணியால் அதிகபட்சம் 16 புள்ளிகளும், பஞ்சாப் மற்றும் கேகேஆர் அணிகளால் அதிகபட்சம் 15 புள்ளிகள் வரையும் பெற முடியும். டெல்லி கேபிட்டல்ஸும் கூட 14 புள்ளிகளில் முடிக்கலாம். இந்த போட்டியில் இருக்கும் மற்ற 4 அணிகளுமே புள்ளிகளை இழந்தால் மட்டுமே சிஎஸ்கே 4வது இடத்தை உறுதி செய்ய முடியும்.
அதற்கு என்ன நடக்கவேண்டும்?
பஞ்சாப் கிங்ஸ் தங்கள் போட்டியில் கட்டாயம் தோற்கவேண்டும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது தோற்கவேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும்.
டெல்லி கேபிட்டல்ஸ் தங்கள் போட்டியில் தோற்கவேண்டும். ஒருவேளை டெல்லி கேபிட்டல்ஸ் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும், அவர்களின் ரன்ரேட் மோசமாக இருப்பதால் அது சூப்பர் கிங்ஸை பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இதுவரை 13 போட்டிகளில் ஆடியிருக்கும் சூப்பர் கிங்ஸ் 12 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் இருக்கிறது
உதாரணமாக, கீழ்க்கண்டவாறு நடந்தால் சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடலாம்.
இன்று (மே 19) நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், எல்எஸ்ஜி அணியிடம் தோற்கவேண்டும்.
நாளை (மே 20) மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணியை வீழ்த்தவேண்டும்.
மே 21, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை தோற்கடிக்கவேண்டும்.
மே 23, லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் பஞ்சாப் கிங்ஸ் தோற்கவேண்டும்.
மே 24, மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக வெற்றி பெறவேண்டும்.
மே 24, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் டெல்லி கேபிட்டல்ஸ் தோற்கவேண்டும்.
இப்படி நடந்தால் சிஎஸ்கே – 14, கேகேஆர் – 13, பஞ்சாப் கிங்ஸ் – 13, டெல்லி கேபிட்டல்ஸ் – 12, ராஜஸ்தான் ராயல்ஸ் – 12 புள்ளிகளுடன் சீசனை முடிப்பார்கள்.
கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி வெற்றி பெற்றாலும் வித்தியாசம் குறைவானதாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர்களின் நெட் ரன்ரேட் (-0.871) சூப்பர் கிங்ஸின் நெட் ரன்ரேட்டை (-0.016) விட மிகவும் பின்தங்கியிருக்கிறது. இது சூப்பர் கிங்ஸுக்கு சாதகமான விஷயம்.
ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் தங்களுக்கு மீதமிருக்கும் 2 போட்டிகளில் ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் பெற்றால் நெட் ரன்ரேட் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூப்பர் கிங்ஸுக்குப் பிறகு தான் ராயல்ஸின் கடைசிப் போட்டி என்பதால், அது ரியான் பராக்கின் அணிக்கு சாதகமான அம்சம். என்ன வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்றோ அல்லது என்ன வித்தியாசத்தில் தோல்வியைத் தவிர்க்கவேண்டும் என்றோ அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்துவிடும்.