ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா, ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
இந்தத் தகவல், அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேறொரு நாட்டில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் முதல் இந்தியர் நிமிஷா பிரியா மட்டும் அல்ல.
உலகின் எட்டு நாடுகளில் மொத்தம் 49 இந்திய குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மார்ச் 2025 இல் இந்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மட்டும் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் மரண தண்டனையை எதிர்கொண்ட இந்தியர்கள் யார்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
- ஷெஹ்சாதி (பண்டா, உ.பி.)
- தொழில்: வீட்டு வேலைக்காரர்
- குற்றச்சாட்டு: நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தது தொடர்பாக.
- கைது: 10 பிப்ரவரி 2023
- தண்டனை: ஜூலை 31, 2023 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது, பிப்ரவரி 2025 இல் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஷெஹ்சாதி டிசம்பர் 2021 இல் அபுதாபிக்குச் சென்றார். அவர் ஆகஸ்ட் 2022 முதல் அங்கு வீட்டு உதவியாளராக ஈடுபட்டு பணிபுரிந்து வந்தார். தான் கவனித்துக் கொண்டிருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நான்கு மாதக் குழந்தை தவறான தடுப்பூசி காரணமாக இறந்துவிட்டது என்பது ஷெஹ்சாதியின் உறவினர்களுடைய கூற்று.
அதனால்தான் இந்த விஷயத்தில் முன்னர் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு குழந்தையின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் வழக்குப் பதிவு செய்தததன் காரணமாக ஷெஹ்சாதி சிக்கிக்கொண்டார் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
அவரது மகள் டிசம்பர் 15, 2021 அன்று அபுதாபிக்குச் சென்றார் எனவும், டிசம்பர் 7, 2022 அன்று அவர் கவனித்துக் கொண்டிருந்த குழந்தை இறந்துவிட்டது எனவும், பின்னர் பிப்ரவரி 10, 2023 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றும் கூறுகிறார் ஷெஹ்சாதியின் தந்தை ஷபீர்.
ஷெஹ்சாதி சிறையில் இருந்தபோது, இந்த விஷயம் தொடர்பாக இறந்த குழந்தையின் தந்தை ஃபைஸ் அகமதுவை பிபிசி தொடர்பு கொண்டது.
இறந்தவரின் தந்தை, “ஷெஹ்சாதி என் மகனை கொடூரமாகவும் வேண்டுமென்றே கொன்றார். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோராக எங்கள் வலியை உணருமாறு ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.
அதே நேரத்தில், ஷெஹ்சாதியின் தந்தை தனது மகள் மீது குற்றம் சாட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் ஷெஹ்சாதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- முகமது ரினாஷ் (தலச்சேரி, கேரளா)
- தொழில்: பயண முகவர்
- குற்றச்சாட்டு: கூர்மையான ஆயுதத்தால் சக அரபு ஊழியரைக் கொலை செய்தல்.
- தண்டனை: பிப்ரவரி 15, 2025 அன்று மரண தண்டனை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பயண முகவராக இருந்த ரினாஷ், 2021 முதல் அல் ஐன் நகரில் பணிபுரிந்து வந்தார். அரபு குடிமகன் அப்துல்லா ஜியாத் அல் ரஷீத்தை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருவரும் ஒரே டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்த நிலையில், ரினாஷுக்கும் அப்துல்லாவுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகராறு காரணமாக, ரஷீத் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு, ரினாஷ் சில ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
- பி.வி.முரளிதரன் (காசர்கோடு, கேரளா)
- தொழில்: ஓட்டுநர்
- குற்றச்சாட்டு: 2009 இல் கொலை செய்து உடலை பாலைவனத்தில் புதைத்தல் தொடர்பாக.
- தண்டனை: பிப்ரவரி 15, 2025 அன்று மரண தண்டனை.
இந்தியாவின் முய்தீன் கொலைக்காக கேரளாவின் காசர்கோட்டைச் சேர்ந்த முரளிதரன்னுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. முரளிதரன் 2006 முதல் அல் ஐனில் ஓட்டுநராக இருந்தார், அங்கு அவரது தந்தையும் பணிபுரிந்தார்.
2009 ஆம் ஆண்டு முய்தீன் கொலை செய்யப்பட்டு பாலைவனத்தில் அவரது உடலை புதைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிப்ரவரி 14 ஆம் தேதி, முரளிதரன் கடைசியாக வீட்டிற்கு போன் செய்து தண்டனை குறித்து தெரிவித்தார்.
செளதி அரேபியா
- அப்துல் காதர் அப்துர்ரஹ்மான் (பாலக்காடு, கேரளா)
- வயது: 63 ஆண்டுகள்
- குற்றச்சாட்டு: செளதி குடிமகன் யூசுப் பின் அப்துல் அஜீஸை கொலை செய்தது தொடர்பாக
- தண்டனை: ஆகஸ்ட் 2024
இந்தச் சம்பவம் 2021 ஆம் ஆண்டு நடந்தது. ஒரு தகராறில் ஒரு நபரை தாக்கி கொன்றதாக அப்துர் ரஹ்மான் மீது குற்றம் சாட்டப்பட்டது
2024 ஆம் ஆண்டில், செளதி அரேபியா மூன்று இந்தியர்கள் உட்பட மொத்தம் 101 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் எத்தனை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளன ?
2024 ஆம் ஆண்டில் 1,518 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அம்னஸ்டி இன்டர்நேஷல் கூறுகிறது.
இது 2023 ஐ விட 32% அதிகம். இந்த எண்ணிக்கை 2015 க்குப் பிறகு மிக அதிகமான எண்ணிக்கையாக உள்ளது.
இரானில் அதிகபட்சமாக (குறைந்தபட்சம் 972) மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன, அவற்றில் 30 பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக நிறைவேற்றப்பட்டவை.
செளதி அரேபியா 345 பேருக்கும் இராக் 63 பேருக்கும் மரணதண்டனை நிறைவேற்றியது.
சீனா, வியட்நாம் மற்றும் வட கொரியாவிற்கான புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் மரண தண்டனை அங்கு பொதுவானதாக நம்பப்படுகிறது.
நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார்.
அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.
நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார்.
மஹ்திக்கு ‘அதிகப்படியான மயக்க மருந்து’ கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.
ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு