சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக கடந்த 1991-ம் ஆண்டு தமிழக அரசு பலரை பணியில் அமர்த்தியது.
பின்னர் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
அதன்படி, பி.சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேருக்கு வணிகவரித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக பணி வழங்கப்பட்டது. அவர்களது பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணிவரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனால், இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதை எதிர்த்து சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களை 1996-ம் ஆண்டு முதல் பணி வரையறை செய்து அவர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கடந்த 2024-ம் ஆண்டு பிப்.15 அன்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி ஐஏஎஸ் அதிகாரிகளான பணியாளர் மற்றும் நிர்வாகத் துறை முzதன்மை செயலர் சி.சமயமூர்த்தி, நிதித்துறைச் செயலர் டி.உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகத்துறை முதன்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி, வணிகவரித் துறை ஆணையர் டி.ஜெகந்நாதன், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் கிருஷ்ணன் உன்னி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரான எஸ்.கண்ணப்பன் ஆகிய 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் என 6 பேரும் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.