படக்குறிப்பு, காட்லாங் கிராமத்தில் உள்ள முட்டைக்கோஸ் வயல்கள்கட்டுரை தகவல்
எழுதியவர், கனி அன்சாரி
பதவி, பிபிசி நியூஸ் நேபாளம்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்திற்கு, போட்டிகோஷி-திரிசூலி பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் வெவ்வேறு வகையான துயரங்களைக் கொண்டு சேர்த்துள்ளது.
ஒருபுறம், அந்த பயங்கரமான வெள்ளத்தில் தங்கள் விளைநிலங்களையும் உறவினர்களையும் இழந்து நிற்கும் மக்களின் வலி உள்ளது. மறுபுறம், வெள்ளத்தில் தங்கள் சொந்தங்களை இழக்கவில்லை என்றாலும், நிலங்கள் தப்பியுள்ள நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் மக்களின் கவலை உள்ளது.
ரசுவா மாவட்டத்தில் உள்ள கட்லாங் (Gatlang) கிராமத்தை உள்ளூர் மக்கள் ‘கருப்பு கிராமம்’ என்று அழைக்கின்றனர்.
இந்த வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு கிராமத்தைச் சேர்ந்த குறைந்தது 29 பேர் காணாமல் போய்விட்டதாக உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கிராமத்திற்குள் வெள்ளநீர் நுழையவில்லை என்றாலும் கூட, அங்கே வசிக்கும் பலரும் இதன் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கிராமத்திற்கு அருகே உள்ள சந்தைப் பகுதிக்கு வேலைக்குச் சென்றவர்கள்தான் இவர்கள்.
உள்ளூர் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, அந்தப் பயங்கரமான வெள்ளத்தில் கட்லாங் கிராமத்தைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள், ரசுவா-திபெத் எல்லையில் கடைகள் நடத்தி வந்தவர்கள் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்பவர்கள் பலியாகியுள்ளனர்.
‘சாலை அமைக்கப்படவில்லை என்றால்…’
பட மூலாதாரம், Nima Norbu Tamang
படக்குறிப்பு, அடுத்த 15-20 நாட்களில் முட்டைக்கோஸ் அறுவடைக்குத் தயாராகிவிடும் என்கிறார் புர்பு தமாங்
இந்த கிராமத்தில் தமாங் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். தங்கள் சொந்தங்களை வெள்ளத்தில் இழந்தது போதாது என்று, இந்தக் கிராமத்திற்கு தற்போது மற்றொரு கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கு கிராமத்தின் சாலை இணைப்பை முற்றிலுமாகத் துண்டித்துவிட்டது.
தங்கள் நிலங்களில் விளையும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான முட்டைக்கோஸ்கள், சாலை வசதி இல்லாததால் விற்க முடியாமல் முடங்கிப் போனால், அது தங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் என்று கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
கட்லாங் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய புர்பு வங்போ தமாங், பேரழிவை ஏற்படுத்திய அந்த வெள்ளத்திற்குப் பிறகு பல நாட்கள் கழித்து கடந்த சனிக்கிழமை தனது நிலத்திற்குச் சென்றார். சென்றவுடன் அவர் நிலத்தைச் சீரமைக்கும் பணியைத் தொடங்கினார்.
இது குறித்து பிபிசி நியூஸ் நேபாளியிடம் அவர் கூறுகையில், “அடுத்த 15-20 நாட்களில் முட்டைக்கோஸ் அறுவடைக்குத் தயாராகிவிடும், ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. எல்லாம் மக்கிப் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்” என்றார்.
“சாலை அமைக்கப்படவில்லை என்றால் பயிர் முற்றிலும் அழிந்துவிடும். முட்டைக்கோஸை விற்றுத்தான் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை விவசாயிகள் வாங்குகிறார்கள்; அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாவார்கள். முட்டைக்கோஸ் விற்கவில்லை என்றால் இந்தப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.”
விவசாயிகள் முட்டைக்கோஸை விற்றுத்தான் அரிசி, உப்பு, எண்ணெய் போன்றவற்றை வாங்குவதாகவும், அதன் பிறகே தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
“அவர்கள் என்ன சாப்பிடுவார்கள், தங்கள் குழந்தைகளை எப்படிப் படிக்க வைப்பார்கள்? எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது” என்றார் அவர்.
“கடந்த ஆண்டு நாங்கள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு முட்டைக்கோஸ் விற்றோம். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விடக் கூடுதலாக முட்டைக்கோஸ் பயிரிட்டுள்ளோம்” என்றும் புர்பு கூறினார்.
புர்புவின் கணவர் நீமா நோர்பு தமாங் , உள்ளூர் சுகாதார நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தனது ஓய்வு நேரத்தில் அவர் தனது மனைவிக்கு விவசாயப் பணிகளில் உதவி செய்கிறார்.
புர்பு மற்றும் நீமா கடந்த ஐந்து ஆண்டுகளாக முட்டைக்கோஸ் பயிரிட்டு வருகின்றனர், இருப்பினும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களின் குடும்பம் இதன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
“கடந்த ஆண்டு விற்பனை நன்றாக இருந்தது, அதனால்தான் இந்த ஆண்டு மற்ற விவசாயிகளும் கூடியவரை அதிக அளவில் முட்டைக்கோஸைப் பயிரிட்டனர். ஆனால் இந்த முறை இந்தத் துயரம் வந்துவிட்டது. விற்பனை நடக்கவில்லை என்றால், எங்களால் கால்நடைகளுக்குத் தீவனம் கூட வாங்க முடியாது” என்று நீமா கூறுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்லாங் கிராம மக்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முட்டைக்கோஸை விற்று வருவதாக நீமா தெரிவிக்கிறார்.
இந்த முறை கிராமத்து விவசாயிகள் முன்பை விடக் கூடுதலாக முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.
நல்ல வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் மற்ற பயிர்களைத் தவிர்த்துவிட்டு முட்டைக்கோஸ் உற்பத்தியை அதிகரித்துள்ளதாக நீமா குறிப்பிடுகிறார்.
ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாகக் கிராமத்தின் வெளியுலக தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. வெள்ளத்தின் காரணமாகக் கிராமத்தின் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
“சில விவசாயிகள் தங்கள் உறவினர்களை இழந்த கவலையில் உள்ளனர், இப்போது தாங்கள் பயிரிட்ட பயிர்கள் மக்கிப் போய்விடுமோ என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது” என்றார் நீமா.
‘முழு கிராமமும் கவலையில் உள்ளது’
பட மூலாதாரம், Tenpi Nhima Tamang
படக்குறிப்பு, கடந்த ஆண்டு முட்டைக்கோஸை விற்றுத் தங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்ததாகக் கட்லாங் கிராம விவசாயிகள் தெரிவித்தனர்.
கட்லாங் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தேன்பி நீமா தமாங், தனது தம்பிகள் மற்றும் ஆறு பேருடன் இணைந்து இந்த ஆண்டு பெரிய அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ளார்.
கடந்த ஆண்டை விட கிராமம் முழுவதும் முட்டைக்கோஸ் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், இவற்றை விற்றால் இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தச் சீசனில் கிராமம் முழுவதும் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு நல்ல விலை கிடைத்தால், எங்களால் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை ஈட்ட முடியும்” என்று தேன்பி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், சாலை வசதி இல்லாதது தேன்பியை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
“முக்கியப் பிரச்சினை சாலைதான். பாசாங் லாம்ஹு நெடுஞ்சாலை சேதமடைந்துவிட்டதால், எங்கள் மக்கள் காத்மாண்டு, ஹெட்விடா, பிர்ஹஞ்ச், பைரவா, புட்வால் மற்றும் பிற இடங்களுக்கு எப்படிப் பயணம் செய்வது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
உற்பத்தி செய்த பொருட்கள் விநியோகிக்கப்படாமல் போனால், எதிர்காலத்தில் எழும் பிரச்னைகளை எண்ணி அவர்கள் மேலும் கவலையடைகிறார்கள்.
“முட்டைக்கோஸை விற்றுத்தான் நாங்கள் அரிசி வாங்குகிறோம், எங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துகிறோம், அவற்றுக்கான மருத்துவச் செலவுகளைப் பார்த்துக் கொள்கிறோம். அந்தப் பணம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? முழு கிராமமும் மிகுந்த கவலையில் உள்ளது” என்றார் அவர்.
அமாச்சோடிங்மோ கிராம நகராட்சியின் துணைத் தலைவர் சந்திகா தமாங்கும் கிராம மக்களின் பிரச்னைகள் குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிபிசி நியூஸ் நேபாளியிடம் அவர் கூறுகையில், “சாலை அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளின் பயிர்கள் அழிந்துவிடும், இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும்” என்றார்.
ரசுவாவில் உள்ள சியப்ரபேசியை சானோ பர்குவுடன் இணைக்கும் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நகராட்சித் துணைத் தலைவர் சந்திகா கூறுகையில், “நாம் உடனடியாக ஒரு பாலம் அமைத்தால், இந்தப் பெரிய இழப்பைத் தவிர்க்கலாம். இல்லையெனில், நாம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்” என்றார்.
சந்திகாவின் கூற்றுப்படி, கட்லாங் கிராமத்தில் மட்டுமல்லாமல், அமாச்சோடிங்மோ கிராம நகராட்சியின் பிற வார்டுகளிலும் விவசாயிகள் பெரிய அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.
“சரியான பரப்பளவை என்னால் சொல்ல முடியாது, என்றாலும் இந்தச் சீசனில் முட்டைக்கோஸ் சாகுபடி பெருமளவில் நடந்துள்ளது” என்றார் அவர்.
நேபாள-சீன எல்லையில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் மின்சார உள்கட்டமைப்புகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசுவா முதல் நுவாகாட் மற்றும் தாரிங் வரையிலான மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்தில் கொண்டால், நேபாளத்தில் மறு கட்டமைப்புப் பணிகள் முழுமையடைய நீண்ட காலம் ஆகலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும், புர்பு, தேன்பி மற்றும் நீமா போன்ற விவசாயிகள் தங்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
லட்சக்கணக்கில் முதலீடு செய்து தாங்கள் விளைவித்த பயிர்களை எப்படியாவது விற்க அவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்; ஏனெனில் இது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்னை .
“விரைவில் எங்கள் கிராமத்திற்கு மாற்று வழி ஒன்று பிறக்கும்” என்று நீமா ஆழ்ந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.