10
நாட்டில் தற்போது சுமார் 5.4 – 5.5 சதவீதமாகப் பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள பணவீக்கம், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் நிலையான நுகர்வோர் கேள்வி என்பன தொடருமேயானால் 07 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்குறிப்பிட்டவாறு கருத்துரைத்த அவர், பணவீக்கம் சுமார் 10 சதவீதமாக அதிகரித்தால் பொதுமக்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
அதேவேளை சமகால உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைவரங்களைக் கருத்தற்கொண்டு ஓரிரவுக் கொள்கை வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75 சதவீதமாக மத்திய வங்கி உயர்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 5.5 சதவீதமாக உயர்வடைந்திருப்பதுடன், இது 5 சதவீத இலக்குக்கு சற்று அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த அதிகரிப்புக்குப் பிரதான காரணம், மத்திய கிழக்கு மோதல்களை அடுத்து, உள்நாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பேயாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்துள்ளதாகவும், இது உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி, இலங்கையின் பணவீக்க எதிர்வுகூறல் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
City & Local Guides
மேலும் பொருள் விலைகளில் மேலதிக அதிகரிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கும், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் எதிர்வரும் மாதங்களில் கேள்வி குறைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.