• Sun. Jul 5th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானில் மனித நஞ்சுக்கொடி கடத்தல் குற்றச்சாட்டு – முதுமை தடுக்கும் ஊசிக்காக கடத்தப்பட்டதா?

Byadmin

Jul 5, 2026


நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையில் உருவாகி, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் ஒரு தற்காலிக உறுப்பாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நஞ்சுக்கொடி என்பது கர்ப்ப காலத்தில் கருப்பையில் உருவாகி, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் ஒரு தற்காலிக உறுப்பாகும்.

    • எழுதியவர், ஆசாத் சோஹைப் மற்றும் ஷேசாத் மாலிக்
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிமருந்துகள் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கும்பல், பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 200 கிலோகிராம் மனித நஞ்சுக்கொடியை வாங்கியதாக பாகிஸ்தானின் மத்திய விசாரணை முகமை (எஃப்.ஐ.ஏ) குற்றஞ்சாட்டியுள்ளது. இவை உலர்த்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக பிபிசி உருதுவிடம் அந்த முகமை தெரிவித்தது.

கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த ஒரு பதப்படுத்தும் மையத்தில், 500 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு அமைப்பு பகிர்ந்துள்ள புகைப்படங்களில், “நஞ்சுக்கொடியைச் சேமித்து பதப்படுத்தும் மையமாக மாற்றப்பட்ட” ஒரு வீட்டின் உள்ளே, தள்ளுவண்டிகளில் உலர்த்தப்பட்ட நஞ்சுக்கொடி அடுக்கி வைக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதன்கிழமை அன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வியட்நாமுக்கு அனுப்பப்படவிருந்த 100 கிலோ எடையுள்ள மனித நஞ்சுக்கொடி கடத்தலை எஃப்.ஐ.ஏ அதிகாரிகள் தடுத்தனர். இதில் பிடிபட்ட ஐந்து சந்தேக நபர்களும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து ஒரு நஞ்சுக்கொடியை சுமார் 800 ரூபாய்க்கு வாங்கியதாக, பாகிஸ்தானின் மனித உறுப்பு மாற்று ஆணையத்தின் அதிகாரி ஹினா கன்வால் தெரிவித்துள்ளார்.

By admin