0
பிரான்ஸின் டோம்ப்லைன் (Tomblaine) நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து நேற்று காலை சுமார் 11 மணியளவில் நான்சி நகருக்கு அருகிலுள்ள பகுதியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த உடனேயே அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணித்தவர்களில் விமானி ஒருவரும், 10 ஸ்கைடைவர்களும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே அவசர மீட்புக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து இடம்பெற்ற பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
விமான விபத்திற்கான சரியான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், விசாரணைகளின் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.