“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ்த் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்தப் பாய்ச்சல்களையும் இந்த அரசு செய்யவில்லை.
இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களைச் செய்த இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்த் தரப்பைக் குற்றவாளியாகக் காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும்.” – என்றார்.
The post போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை! – சிறீதரன் கடும் விசனம் appeared first on Vanakkam London.