“ப்ரிக்ஸ் கூட்டமைப்பு உட்பட அனைத்து முக்கிய அமைப்புகளிலும் துருக்கி உறுப்பினராக விரும்புவதாக எங்கள் அதிபர் தெளிவாகக் கூறியுள்ளார்,” என்று துருக்கி அதிபரான ரிசெப் தையிப் எர்டோகனின் ஆளும் கட்சி செய்தித் தொடர்பாளர் ஓமர் செலிக் கூறினார்.
ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர துருக்கி முறைப்படி விண்ணப்பித்துள்ளதா என்பது குறித்து அவர் தெளிவாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்காக ‘தொடர்ச்சியாக முயற்சி’ எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அக்டோபர் 22 – 24ஆம் தேதிகளில் மேற்கு ரஷ்யாவில் உள்ள கசான் நகரத்தில் நடைபெறவுள்ள ப்ரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் துருக்கி இணைந்தால் என்ன நடக்கும்?
ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர துருக்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், மேற்கத்திய நாடுகள் அல்லாத ரஷ்யா மற்றும் சீனா தலைமையில் உள்ள பொருளாதாரக் கூட்டணியில் உறுப்பினராகும் முதல் நேட்டோ உறுப்பு நாடு என்ற பெருமையை துருக்கி பெரும்.
“இது, துருக்கி மற்றும் ப்ரிக்ஸ் கூட்டமைப்புக்கு மட்டுமின்றி நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்புக்கும் ஒரு அடையாளமாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்”, என்று துருக்கி-ரஷ்யா உறவுகள் சார்ந்த நிபுணர் கெரிம் ஹாஸ் கூறுகிறார்.
தற்போது துருக்கி கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டால், அந்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை, அதற்காக பிற நாடுகள் உடனான உறவை அது பன்முகப்படுத்த வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
“துருக்கியின் பொருளாதாரம் சரிந்தால், அது ஐரோப்பிய வங்கிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், ஏனெனில் துருக்கியின் பொருளாதாரம் அவற்றைச் சார்ந்தேதான் இருக்கிறது. துருக்கியின் வணிகத்தில் சுமார் பாதி அளவு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் உள்ளது,” என்கிறார் அவர்.
துருக்கியின் வணிகத்தில் 31.8% ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இருக்கிறது. அதனால் ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டின் சிறந்த வணிகப் பங்காளியாக உள்ளது, என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2022ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி இடையிலான வணிகத்தின் மொத்த மதிப்பு சுமார் 200 பில்லியன் யூரோக்களாக இருந்தது.
யுக்ரேன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்கியதற்காக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளில் துருக்கி பங்கேற்காமல் இருப்பதை, இதற்காகத்தான் ஐரோப்பிய நாடுகள் கண்டுகொள்ளாமல் செயல்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.
“ரஷ்யா மற்றும் பிற ப்ரிக்ஸ் நாடுகளுடன் துருக்கி பொருளாதார உறவுகளை வளர்த்து வருவதை மேற்கத்திய நாடுகள் சகித்துக் கொள்கின்றன” என்று ஹஸ் கூறுகிறார்.
“மேலும், நேட்டோ உறுப்பு நாடான துருக்கி ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினரானால், அந்தக் கூட்டமைப்பில் உள்ள மேற்கத்திய நாடுகள் மீதான எதிர்ப்புகளைக் குறைப்பதில் துருக்கி முக்கியப் பங்காற்றும்”.
“அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைப் பற்றிய பார்வையை இதுவரை உறுப்பினாராகாத துருக்கி, ப்ரிக்ஸ் கூட்டமைப்பிற்கு வழங்கலாம். இது மேற்கத்திய நாடுகள் அல்லாத ப்ரிக்ஸ் கூட்டமைப்பு, மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் அமைப்பாக மாறுவதைத் தடுக்க வழிவகுக்கும்.”
ப்ரிக்ஸ் கூட்டமைப்பு என்றால் என்ன?
முதலில் ப்ரிக் (BRIC) என்று அழைக்கப்பட்டு, வளரும் பொருளாதாரங்களின் அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. இது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளால் 2006ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா இணைந்தபோது, இக்கூட்டமைப்பு அதன் பெயரை ப்ரிக்ஸ் (BRICS) என மாற்றியது.
வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் வளமான நாடுகளில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார சக்திக்கு சவாலாக இருப்பதற்காக, உலகின் மிக முக்கியமான வளர்ந்து வரும் நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் ப்ரிக்ஸ் கூட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டமைப்பில், சமீபத்தில் ஒரு பெரிய விரிவாக்கம் நடந்தது. அதன் பிறகு இரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் உறுப்பினராக இணைந்தன.
இந்தக் கூட்டமைப்பில் இணையும் முடிவை சௌதி அரேபியா பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது மற்றும் அஜர்பைஜான் இதற்காக முறையாக விண்ணப்பித்துள்ளது.
துருக்கியும் பல மாதங்களுக்கு முன்பு ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் சேர அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று தெரிவித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 10வது ப்ரிக்ஸ் உச்சிமாநாட்டில், துருக்கி ப்ரிக்ஸ் உறுப்பினராக விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்திருந்தார்.
துருக்கி ஏன் பிரிக்ஸ் பக்கம் திரும்பியது?
இருபது ஆண்டுகளாக துருக்கியின் அதிபாராக எர்டோகன் உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இருப்பதில் துருக்கிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று அவர் எண்ணினார். இதனால் துருக்கி, மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள நாடுகளுடனும் “ஒரே நேரத்தில்” தனது உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார்.
“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) ஆகியவற்றுக்கு இடையே நாங்கள் தேர்வு செய்ய வேண்டியதில்லை” என்று சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு பற்றி எர்டோகன் கூறினார்.
“துருக்கியின் பலனுக்காக இந்த அமைப்பு மட்டுமல்லாமல், வேறு அனைத்து கூட்டமைப்புடனும் எங்களது உறவுளை மேம்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, ரஷ்யாவுடனான துருக்கியின் வணிகம் அந்நாட்டின் ஒட்டுமொத்த வணிகத்தில் 11 சதவீதமாக இருந்தது, மேலும் சீனாவுடனான வணிகம் 7.2 சதவீதமாக இருந்தது.
ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் துருக்கி இணைவதை ரஷ்யா வலுவாக ஆதரிப்பதாக கெரிம் கருதுகிறார்.
“யுக்ரேனுடன் போரில் தாக்குப் பிடிக்கவும், மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் கீழ் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருப்பதை உறுதி செய்வதும், அதன் பொருளாதாரத்தை நிலையானதாக வைத்திருப்பதும் ரஷ்யாவின் முதன்மையான நோக்கமாக உள்ளது”, என்று அவர் கூறுகிறார்.
“எனவே ரஷ்யா எப்போதும் துருக்கியை நெருக்கமாக வைத்திருக்க விரும்புகிறது. ஆற்றல், வர்த்தகம், சுற்றுலா போன்ற பல துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் இருக்கின்றன. ஒரு நேட்டோ உறுப்பு நாட்டுடன் நன்மை பயக்கும் அளவிற்கு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பது ரஷ்யாவிற்கு பலன் அளிப்பதாக இருக்கும்,” என்றார்.
ப்ரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிற கூட்டமைப்புகளில் இணைய துருக்கி அதிக ஆர்வம் கட்டி வருவது, அதன் கருத்தியல் மாறுபாடாக நாம் பார்க்கக்கூடாது என்று அமெரிக்காவின் வில்சன் சென்டர் எனப்படும் ஒரு திட்டக்குழுவைச் சேர்ந்த யூசுப் கேன் கூறுகிறார்.
“இதுபோன்ற கூட்டமைப்புகளில் தனது உறுப்பு நாடு இருப்பது நேட்டோ அமைப்பிற்குப் பலன் அளிப்பதாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.
துருக்கியின் பொருளாதார நெருக்கடி
துருக்கியில் உள்ள கடும் பொருளாதார நெருக்கடியும், வெளிநாட்டு முதலீடு சார்ந்திருக்கும் நிலையும், கடன் நிதியுதவியைச் சார்ந்திருப்பது போன்றவையின் காரணமாக துருக்கி உலக அரசியலில் சமநிலையில் இருக்க விரும்புகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்படி, உலகின் 17வது பெரிய பொருளாதாரமாக துருக்கி இருக்கிறது.
சர்வதேச அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி, அதிகாரப்பூர்வ வருடாந்திர சில்லறை விலைப் பட்டியலில் ஜிம்பாப்வே, அர்ஜென்டினா, சூடான் மற்றும் வெனிசுலாவுக்கு அடுத்து 71.6% உடன் துருக்கி இருக்கிறது.
சமீபத்தில் துருக்கியில் எடுக்கப்பட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும், அந்நாட்டு மக்களுக்கு மிகுந்த சுமையாக விலைவாசி உயர்வு இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
வளர்ச்சியை வலியுறுத்தி, கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைவாக வைத்திருக்க துருக்கியின் மத்திய வங்கிக்கு அந்நாட்டின் அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் அறிவுறுத்தினார். அவர் வட்டி விகிதத்தினால்தான் பணவீக்கம் ஏற்பட்டதாகக் கருதினார்.
ஆனால் அவர் கடந்த ஓராண்டாக அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றியுள்ளார். புதிய பொருளாதாரக் கொள்கை மிகவும் பழமைவாத பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, துருக்கி மத்திய வங்கியின் புதிய வாரியம் ஒன்பது மாதங்களில் வட்டி விகிதங்களை 8.5%-இல் இருந்து 50% வரை உயர்த்தியுள்ளது.
தற்போது துருக்கியின் பொருளாதாரம், இந்தப் புதிய திட்டம் மூலம் சிறப்பாகச் செயல்படுவதாகவும், பணவீக்கத்தைப் பொறுத்தவரை அதன் ‘மோசமான காலம் முடிந்துவிட்டது’ என்றாலும் பலருக்கு இன்னும் எதிர்காலம் குறித்து சந்தேகம் உள்ளது”, என்றும் துருக்கியின் தற்போதைய நிதி அமைச்சர் மெஹ்மத் சிம்செக் கூறினார்.
“சிம்செக் நியமிக்கப்பட்டதில் இருந்து, பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது, துருக்கியின் பணமதிப்பு குறைந்துள்ளது, மேலும் வட்டி விகிதங்கள் 8% முதல் 50% வரை அதிகரித்துள்ளது,” என்று பெர்லின் பொருளாதார மற்றும் சட்டத்திற்கான பள்ளியைச் சேர்ந்த முனைவர் உமித் அக்கே தெரிவித்தார்.
“அதிகப்படியான உள்நாட்டு தேவை மற்றும் ஊதிய உயர்வு என்ற நோக்கம் கொண்ட சிம்செக்கின் பழமைவாத பொருளாதார திட்டம்தான் பணவீக்கம் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. அது பயனுள்ளதாக இல்லை என்பதை இது குறிக்கிறது.”
வருங்காலத்தில் துருக்கியின் பொருளாதாரத்திற்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
“அடிப்படை விளைவு காரணமாக வரும் மாதங்களில் பணவீக்கம் குறையும்” என்று முனைவர் உமித் அக்கே குறிப்பிட்டார்.
“இருப்பினும், பணவீக்கம் குறைவதால் விலைவாசியில் உள்ள நெருக்கடியான நிலை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. ஊதிய உயர்வு அல்லது கீழ் வகுப்பினருக்காண உரிய பொருளாதார ஆதரவு வழங்கப்படாத வரை, இந்த இக்கட்டான நிலை தொடரும்.”
மேற்கத்திய நாடுகள் அல்லாத பொருளாதாரக் கூட்டணிகளில் துருக்கி இணைந்தால், அது அந்நாட்டில் உள்ள பொருளாதாரத்தை சமநிலைப்படுத்த உதவும். ஆனால், அரசியல் ரீதியான பலனுக்காகவும், அதிபர் எர்டோகனின் 360 டிகிரி வெளியுறவுக் கொள்கையின் உத்தியை செயல்படுத்துவதுமே ப்ரிக்ஸ் கூட்டமைப்பில் துருக்கியின் நோக்கமாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.