2
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனைகள் (NUH) அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மகப்பேறு பிரிவில், கர்ப்பிணிப் பெண்களைக் குறிக்க ஊழியர்கள் “FOH” (‘F’ எனும் ஒரு கெட்ட வார்த்தை. ‘O’ என்பது ‘OFF’ என்பதைக் குறிக்கிறது. ‘H’ என்பது ‘HOME’ என்பதன் சுருக்கம். அதாவது அந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்பதைக் குறிக்கும் ஆபாசமான சுருக்கச்சொல்) போன்ற அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு மூத்த செவிலியர் தனது சக ஊழியர்களிடம், பிரசவ வலி என்று வரும் பெண்களிடம் “அதிகமாக அன்பாக இருக்காதீர்கள், இல்லையெனில் அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்” என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த அறக்கட்டளை, NHS வரலாற்றிலேயே மிகப்பெரிய மகப்பேறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜூன் 24 அன்று வெளியிடப்பட உள்ளது.
2012 முதல் 2025 வரை சுமார் 2,500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், குறிப்பாக சிசு மரணங்கள், தாய்மார்களின் மரணங்கள் மற்றும் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் குறித்து இந்த விசாரணை நடைபெறுகிறது.
பெண்களைப் பிரசவத்திற்காக அனுமதிக்காமல் முடிந்தவரை வீட்டிலேயே வைத்திருக்கும் மனப்பாங்கு பல மோசமான விளைவுகளுக்குக் காரணமாகியுள்ளது. ஒரு சம்பவத்தில், பிரசவ வலியுடன் வந்த ஒரு பெண்ணை அனுமதிக்க மறுத்ததால், அவர் மருத்துவமனைக்கு வந்தபோது சிசு உயிரிழந்திருந்ததுடன், அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவருக்கு நிரந்தர சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் நிலவும் நச்சுத்தன்மையான கலாச்சாரம் மற்றும் கடுமையான ஊழியர் பற்றாக்குறை குறித்து முன்னாள் ஊழியர்கள் பல திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
ஒரு செவிலியர் கூறுகையில், சிக்கலான நிலையில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் உதவிக்காக அழைப்பு மணியை (buzzer) அழுத்தியபோது, அங்கிருந்த பொறுப்பாளர்கள் அதைக் கவனிக்காமல் ஆன்லைனில் கைப்பைகள் (handbags) வாங்குவதில் மும்முரமாக இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணையில் இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்பான பல புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தெற்காசியப் பெண்கள் வலியைப் பற்றி அதிகம் புகார் செய்கிறார்கள் என்ற தவறான கண்ணோட்டத்துடன் அவர்கள் அலட்சியமாக நடத்தப்பட்டதாக மூத்த செவிலியர் டோனா ஒக்கென்டன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்களின் பாதுகாப்பற்ற சூழல் குறித்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது. மேலும், தீவிரமான பாதிப்புகளை வெளியே தெரியாமல் மறைக்க, முறையான NHS விதிமுறைகளைத் தவிர்த்து வைத்தியசாலையிலேயே ஒரு தனி விசாரணை அமைப்பைப் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி மே, இந்தத் தவறுகளுக்குத் தனது நிறுவனம் பொறுப்பேற்பதாகக் கூறியதுடன், நிலைமையைச் சரிசெய்யப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மூலம் – பிபிசி