பூல் தேவ் ஷானி, அவரது தந்தை மற்றும் தாத்தாவை போலவே தலைமுறை தலைமுறையாக, 8 அடி ஆழமுள்ள சேற்றுக் குளத்தின் அடிப்பகுதியில் டைவ் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.
“நான் தினமும் 7 முதல் 8 அடி ஆழமுள்ள குளத்தில் டைவ் செய்து, தண்ணீரில் மணிக்கணக்காக இருப்பேன். 8 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மூச்சு விடுவதற்காக தண்ணீரின் மேற்பரப்புக்கு வருவேன்” என்று ஷானி விளக்குகிறார்.
குளத்தின் இருண்ட ஆழத்தில் அவர் யூரியால் ஃபெராக்ஸ் (euryale ferox) எனப்படும் ஒருவகை தாமரை விதைகளை அறுவடை செய்து கொண்டிருப்பார்.
இவை மக்கானா, ஃபாக்ஸ் கொட்டைகள் (fox nuts) அல்லது தாமரை விதைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் அதிக அளவில் வைட்டமின் B, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்று ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் சிலர் இவற்றை ஒரு சூப்பர்ஃபுட் எனக் கூறுகின்றனர்.
கடினமான தாமரை விதை விவசாயம்
பெரும்பாலும் தின்பண்டமாக (ஸ்நாக்ஸ்) உண்ணப்படும் இந்த மக்கானா பால் பாயாசம் போன்ற உணவு வகைகளிலும், அத்துடன் மாவாக அரைக்கப்பட்டும் பயன்படுத்தப்படுகிறது.
ஷானி வசிக்கும் வட கிழக்கு இந்திய மாநிலமான பிகாரில், உலகின் 90% மக்கானா விளைகிறது.
தாமரைச் செடியின் இழைகள் பெரிதாகவும் வட்டமாகவும் குளத்தின் மேற்புறத்தில் மிதந்துகொண்டிருக்கும். ஆனால் அதன் விதைகள் தண்ணீருக்கு அடியிலுள்ள காய்களில் உருவாகும். அவற்றைச் சேகரிப்பது மிகவும் கடினமான செயலாக இருக்கும்.
“குளத்தின் அடிப்பகுதிக்கு நாங்கள் டைவ் செய்யும்போது காது, கண், மூக்கு மற்றும் வாய்க்குள் சேறு நுழையும். இதனால் எங்களுக்கு தோல் சார்ந்த பிரச்னைகள் இருக்கின்றன. மேலும் இந்தச் செடி முட்களால் நிறைந்திருக்கும். அறுவடையின்போது அவை நம் உடல் முழுவதும் வெட்டுகளை ஏற்படுத்துகின்றன” என்று ஷானி கூறுகிறார்.
ஆனால் சமீப காலமாக விவசாயிகள் இதன் சாகுபடி முறையை மாற்றியுள்ளார்கள். தாமரைச் செடிகள் பெரும்பாலும் வயல்களில், மிகவும் ஆழமில்லாத நீரில் வளர்க்கப்படுகின்றன.
குறைந்த ஆழத்தில் பயிரிடப்படும் செடிகளில் இருக்கும் விதைகளை அறுவடை செய்வதால் ஷானி இரண்டு மடங்கு அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
“இதுவும் ஒரு கடினமான வேலைதான், ஆனால் நான் எனது பாரம்பரியத்திற்காக இதைச் செய்து வருகிறேன். எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள், எனது மகன்களில் ஒருவர் மக்கானா பயிரிடும் பாரம்பரியத்தைத் தொடர்வதை நான் உறுதி செய்வேன்,” என்கிறார் அவர்.
சாகுபடியில் ஏற்பட்ட மாற்றம்
மக்கானா சாகுபடியில் ஏற்பட்ட மாற்றத்தின் பின்னணியில் இருந்தவர்களில் டாக்டர் மனோஜ் குமாரும் ஒருவர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆழமான குளங்களில் மக்கானா சாகுபடியை விரிவுபடுத்துவது கடினம் என்பதை அவர் உணர்ந்தார்.
மனோஜ் ஆழமற்ற நீர்பரப்பில் தாமரைச் செடிகளை வளர்ப்பதற்கு வழிவகுத்தார். தற்போது அவர் மக்கானாவுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் (NRCM) மூத்த விஞ்ஞானியாக உள்ளார்.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
“மக்கானாவை ஆழமற்ற நீர்ப்பரப்பில் விளைவிக்கும் இந்தக் கண்டுபிடிப்பால், இப்போது தாமரை விதைகளை வளர்ப்பது நிலத்தில் எந்தவொரு பயிரையும் வளர்ப்பது போல் எளிதாக மாறியது. ஒரு அடி ஆழத்திற்குத் தண்ணீர் இருந்தாலே போதும். தொழிலாளர்கள் ஆழமான நீரில் மணிக்கணக்காக வேலை செய்ய வேண்டியதில்லை” என்று அவர் விளக்குகிறார்.
மேலும் இந்த மையத்தில் பல்வேறு விதைகளை சோதனை செய்து, வலுவான மற்றும் அதிக உற்பத்தி தரும் விதை வகை ஒன்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த முறையில் மக்கானா சாகுபடி செய்வதன் மூலம் சமீபத்திய ஆண்டுகளாக பிகாரில் நிகழும் வெள்ளம் போன்ற இயற்கை ஆபத்துகளைச் சமாளிக்க உதவியாக இருப்பதாக டாக்டர் மனோஜ் கூறியுள்ளார்.
இப்போது மக்கானாவுக்கான தேசிய ஆராய்ச்சி மையம், விதைகளை அறுவடை செய்யக்கூடிய இயந்திரத்தைக் கண்டறியும் முயற்சியில் உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் இன்னும் கூடுதலாக விவசாயிகளை ஈர்த்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில், மக்கானாவை சாகுபடி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட நிலம் 35,224 ஹெக்டேர் (87,000 ஏக்கர்). இது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
மக்கானா அறுவடையில் நவீன அணுகுமுறை
திரேந்திர குமார் சமீபத்தில் மக்கானா சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகளில் ஒருவர். பண்ணையில் வளர்ந்தவராக இருந்தாலும், தனது வாழ்க்கையில் அவரது தந்தை சென்ற வழியிலேயே செல்ல திரேந்திர குமார் விரும்பவில்லை.
“விவசாயிகளாகிய நாங்கள் எப்பொழுதும் கோதுமை, பருப்பு வகைகள், கடுகு ஆகியவற்றையே பயிரிட்டோம், அதனால் அதிக பணத்தை இழந்துள்ளோம். பெரும்பாலான நேரங்களில் வெள்ளம் பயிர்களை நாசமாக்கியது,” என்று அவர் கூறுகிறார்.
அவர் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது, மக்கானா சாகுபடி குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானி ஒருவருடன் தொடர்புகொண்டு, தனது பண்ணையில் இதைப் பயிரிட்டு சோதனை செய்ய முடிவு செய்தார்.
“இதன் முடிவுகள் ஆச்சரியமாக இருந்தன.” முதல் ஆண்டில் தாம் 36,000 ரூபாய் வரை லாபம் ஈட்டியதாகக் கூறுகிறார் அவர். இப்போது அவர் 17 ஏக்கர் (6.9 ஹெக்டேர்) நிலத்தில் தாமரைச் செடிகளை வளர்த்து வருகிறார்.
“அதிக உடல் உழைப்பு கொண்டு பெரும்பாலும் மீனவர்களால் அறுவடை செய்யப்பட்ட இந்த ஃபாக்ஸ் கொட்டைகளை நான் சாகுபடி செய்வேன் என்று கனவில்கூட நான் எதிர்ப்பார்த்தது இல்லை.”
இந்தச் செடியைப் பயிரிடுவதில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தால் பெண்களுக்கும் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. குமார் இப்போது விதைகளை விதைப்பதற்காக உள்ளூரில் 200 பெண்களைக்கு வேலை வழங்கியுள்ளார்.
“விவசாயத்தில் இருக்கும் பிரச்னைகளால் விவசாயம் செய்வதில் இருந்து வெளியேறாமல் இருக்க, முடிந்தவரை பல விவசாயிகளுக்கு வேலை வழங்குவதே எனது நோக்கம்” என்று அவர் கூறுகிறார்.
இதைப் பயிரிடுவதில் மட்டுமே புதுமைகள் செய்யப்படவில்லை. மக்கானா பயிரிடும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மதுபானி மக்கானா, இதைக் கையாள்வதிலும் புதுமைகளைப் புகுத்தி ஏற்றுமதியும் செய்கிறது.
பாரம்பரியமாக, மக்கானாக்கள் அறுவடை செய்யப்பட்டவுடன், கழுவி, வறுத்தெடுக்கப்பட்டு, பின்னர் அது சுத்தியல் போன்ற கருவியால் உடைக்கப்படுகிறது.
“இந்தச் செயல்முறை சுத்தமற்ற, சுகாதாரமில்லாத மற்றும் ஆபத்தான ஒன்று. இது அதிக உழைப்பு மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் முறை, சில நேரங்களில் தீப்புண், காயங்கள்கூட ஏற்படலாம்” என்று மதுபானி மக்கானாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி ஷம்பு பிரசாத் கூறுகிறார்.
மக்கானாவுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, அவரது நிறுவனம் மக்கானாவை வறுத்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
“இந்த இயந்திரம், மக்கானாவின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுவதாக” கூறுகிறார் பிரசாத்.
வடக்கு பிகாரிலுள்ள மதுபானியில் இருக்கும் அவரது தொழிற்சாலையில் இதுபோன்ற மூன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மக்கானாவின் சாகுபடி மற்றும் தயாரிப்பிலுள்ள புதுமைகள் மூலம் உற்பத்தி அதிகரித்திருந்தாலும், மக்கானாவின் விலை குறைய இந்த உற்பத்தி போதுமானதாக இருக்காது என்று பிரசாத் எண்ணுகிறார்.
“மகானாவுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருவதால், விலை குறைவதற்கு, உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வேண்டியது அவசியம்” என்றும் அவர் கூறுகிறார்.
மறுபுறம் திரேந்திர குமார் மக்கானா சாகுபடி மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நினைக்கிறார்.
“இது, மக்கானா அறுவடைக்காக பிகாரில் நடைபெறும் புதுமைகளின் ஆரம்பம் மட்டுமே. இது மாநிலத்தையே புரட்டிபோடலாம்,” என்று அவர் கூறுகிறார்.