2
முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர், மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நடத்தப்பட்ட திடீர் மூச்சுப் பரிசோதனையின் பின்னர் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வோர்னர் குற்றத்தை ஏற்றுக்கொள்வார் என அவரது சட்டத்தரணி பொபி ஹில் முன்னதாகவே தெரிவித்திருந்தார்.
மே மாதம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, வோர்னர் தனது நடவடிக்கை “முட்டாள்தனமானதும் பொறுப்பற்றதுமானது” என்பதை உணர்ந்துள்ளதாகவும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நண்பரின் வீட்டில் மூன்று கிளாஸ் வைன் அருந்திய பின்னர், வோர்னர் தனது காரில் ஏறிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை அறிவிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், வோர்னருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வாகனம் செலுத்துவதற்கான தடை விதிக்கப்படலாம் எனவும், அதிகபட்சமாக 2,200 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் அல்லது ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2024ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற டேவிட் வோர்னர், தற்போது கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராகவும், சிட்னி தண்டர் அணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
வோர்னர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் நியூ சவுத் வேல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜெர்மன், இந்த விவகாரம் கவலைக்குரியது என்றும், அமைப்பு இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
“பாதுகாப்பான வாகனம் செலுத்துதலை நாங்கள் வலியுறுத்துகிறோம்; மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்துவதை ஒருபோதும் ஆதரிக்கவில்லை,” என அவர் கூறியிருந்தார்.
வோர்னரின் சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் செய்தது தவறு என்பதை அறிந்துள்ளதாகவும், வாடகை வாகன சேவையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக காரில் சென்றது தவறான முடிவு என ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“மது அருந்தியது குற்றமல்ல; ஆனால் அதன் பின்னர் வாகனம் செலுத்திய முடிவே தவறானது,” என சட்டத்தரணி பொபி ஹில் குறிப்பிட்டார்.