இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரும், கொழும்பு கெப்ஸ் (Colombo Kaps) அணியின் தலைவருமான குசல் மெண்டிஸ் தொடை பின்தசை (hamstring) காயம் காரணமாக லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கெப்ஸ் மற்றும் கண்டி ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 19 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஓட்டம் பெற முயற்சித்தபோது குசல் மெண்டிஸின் வலது தொடை பின்தசையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், அவரை லங்கா பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காயத்திலிருந்து முழுமையாக குணமடைவதற்காக, குசல் மெண்டிஸ் தேசிய உயர் செயல்திறன் மையத்திற்கு (National High Performance Centre) திரும்பி, சிகிச்சை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் விலகியிருப்பது கொழும்பு கெப்ஸ் அணிக்கு முக்கிய பின்னடைவாக கருதப்படுகிறது. அணியின் தலைமைத்துவம் மற்றும் துடுப்பாட்ட வரிசையில் முக்கிய பங்கு வகித்து வந்த அவர், தொடரின் முக்கிய கட்டத்தில் அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
The post லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் ! appeared first on Vanakkam London.