• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

இங்கிலாந்தில் இளம் பெண்களிடையே இரண்டாம் வகை நீரிழிவு நோய் அதிகரிப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை

Byadmin

Jul 22, 2026


இங்கிலாந்தில் 20 வயதுகளில் உள்ள இளம் பெண்களிடையே இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோய் பாதிப்புகள் கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

COVID-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அதிகரித்து வரும் உடல் பருமன் இந்த போக்குக்கு முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது.

இலண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 2011 முதல் 2024 வரையிலான NHS தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில், முதியவர்களிடையே புதிய நோயறிதல்கள் சற்று குறைந்துள்ள நிலையில், 40 வயதுக்குட்பட்டவர்களிடையே, குறிப்பாக 20 முதல் 29 வயது வரையிலான பெண்களிடையே இந்த நோய் வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் 30 வயதுக்குட்பட்ட சுமார் 12,000 பேர் இரண்டாம் வகை நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.

முக்கிய ஆய்வாளர் டொக்டர் சிவானி மிஸ்ரா இது குறித்துக் கூறுகையில், இளம் வயதிலேயே ஏற்படும் கடுமையான உடல் பருமன் இந்த அபாயத்தை அதிகரிப்பதாகவும், இது நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதால் மிகவும் கவலைக்குரியது என்றும் தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையினரிடையே அதிகம் காணப்பட்ட இந்தப் பாதிப்பு தற்போது வெள்ளை இன மக்களிடமும் அதிகரித்து வருகிறது.

இளம் வயதிலேயே நீரிழிவு நோய் ஏற்படுவது இதயப் பாதிப்பு, பக்கவாதம் மற்றும் உடல் உறுப்பு சேதங்களுக்கு வழிவகுக்கும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் நீடித்த சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் எடை குறைப்பு மூலம் இந்நோயிலிருந்து மீள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

By admin