3
வட இங்கிலாந்து முழுவதும் ரயில் போக்குவரத்து கடுமையான சீர்குலைவை சந்தித்துள்ளது. ஒரு முக்கிய சிக்னல் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையான இடையூறுகளையும், நீண்ட நேரத் தாமதங்களையும் சந்தித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், நேற்று (06) வியாழக்கிழமை பகல் 2 மணியளவில் நெட்வொர்க் ரெயிலின் மான்செஸ்டர் ரயில் இயக்க மையத்தில் (Manchester Rail Operating Centre) இடம்பெற்றுள்ளது. அப்போது வெறும் 90 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்பட்டது.
ஆனால், அதிர்ச்சிகரமான விடயம் என்னவென்றால், மின் தடைக்குப் பிறகு இருப்பு மின்சக்தி அமைப்புகள் (back-up systems) எதிர்பார்த்த வேகத்தில் இயக்கப்படாததால், சிக்னல்கள் செயலிழந்து, ஏராளமான ரயில்கள் பாதையின் நடுவே நிறுத்தப்பட்டன. இதனால் பல மணி நேரங்களாக போக்குவரத்து முடங்கியது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, குறைந்தது 08 ரயில் சேவை நிறுவனங்கள் இந்த பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொறியாளர்கள், சிக்னல் பிரச்சினைகளை சரிசெய்யும் பணியில் முன்னேற்றம் அடைந்து வருவதாக நெட்வொர்க் ரெயில் தெரிவித்துள்ளது. எனினும், வெள்ளிக்கிழமை நாள் முடியும் வரை பெரும் பாதிப்பு தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவம் குறித்து நெட்வொர்க் ரெயிலின் வடமேற்கு மாவட்ட இயக்குநர் கிறிஸ் ரைட் (Chris Wright) கருத்து தெரிவிக்கையில், “இங்கு ஏதோ பிழை நிகழ்ந்துள்ளது என்பது தெளிவு, எனவே விடயங்கள் ஏன் எதிர்பார்த்த அளவில் சீராக மீட்கப்படவில்லை என்பதை முழுமையாக ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், பல ரயில்கள் மற்றும் ஊழியர்கள் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் சாதாரணமாக இருக்க வேண்டிய இடங்களில் இல்லாததால், சேவைகள் தொடர்ந்து சீர்குலைவடையக்கூடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், இன்று வெள்ளிக்கிழமை (07) பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள், மேலும் ஏதேனும் மாற்றங்கள் குறித்து தொடர்ந்து தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு நெட்வொர்க் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. “எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் உங்களுக்கு புதுப்பிப்புகளை வழங்குவோம்” என்று அது தெரிவித்துள்ளது.
மான்செஸ்டர் ரயில் இயக்க மையம் 2014 ஜூலை மாதத்தில் திறக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள ரயில் பாதைகளின் சிக்னல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான இயக்கத்திற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இந்த மையமே கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.