உற்பத்தித் துறையின் இலக்காக இந்தியாவை மாற்ற, இங்குள்ள வாய்ப்புகளை ஆய்வு செய்ய தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.
அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோதி நியூயார்க் நகரில், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து பேசினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மற்றும் இந்தியாவை உள்ளிடக்கிய குவாட் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நியூயார்க்கில் இந்த சந்திப்பை நிகழ்த்தினார் மோதி.
உலக நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் பக்கம் திருப்பவும், சீனாவுக்கு மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்தியா சில காலமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தியா, செமிகண்டக்டர் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிக கவனம் செலுத்தி வந்தாலும், இந்த வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கும் சீனா, தைவானிடம் இருந்து மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இந்தியா உள்ளது.
செப்டம்பர் 23-ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மோதி கூகுளின் சுந்தர் பிச்சை, அடோபின் ஷாந்தனு நாராயண், ஐ.பி.எம்-இன் அரவிந்த் கிருஷ்ணா, என்.வி.ஐ.டி.ஐ.ஏ-வின் ஜென்சன் ஹவாங் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்தார்.
“இந்தியாவில் இந்த நிறுவனங்கள் ஒன்றிணைந்து, உலகத்தின் தேவைக்காக மேம்படுத்த, வடிவமைக்க, உருவாக்க இயலும்,” என்று மோதி தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், நடைபெற்ற வட்டமேசை சந்திப்புக் கூட்டத்தில், “உலகப் பொருளாதாரம், மனித மேம்பாட்டைப் புரட்சிகரமாக மாற்றும் கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த இயலும்,” என்பது குறித்து பேசியதாக குறிப்பிட்டிருந்தது.
நியூயார்க்கில் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த மாநாட்டில் பிரதமர் மோதி, இந்திய-அமெரிக்கர்களை இந்தியாவின் ‘பிராண்ட் அம்பாசிடர்கள்’ என்று குறிப்பிட்டார். மேலும் உலக மேம்பாடு, உலக அமைதி, உலக காலநிலைக்கு எதிரான செயல்பாடு, உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் திறவுகோலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மோதி, பைடன் என்ன பேசினர்?
செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று குவாட் மாநாட்டில் மோதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து பேசினார். பிறகு சில ஒப்பந்தங்களில் இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டன.
இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தான செமிகண்டக்டர் ஒப்பந்தத்ததை மிக முக்கியமான ஒப்பந்தமாக மேற்கோள்காட்டினர். தேசியப் பாதுகாப்பு, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு மற்றும் பசுமை எரிசக்தி செயலிகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கு தேவையான ‘சிப்’களளைத் தயாரிக்கத் தேவையான ஆலையை அமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்காக உள்ளது.
அமெரிக்காவின் ராணுவம், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கான ராணுவம் மற்றும் இந்திய ராணுவத்திற்கு தேவையான ‘சிப்களை’ இந்தியா வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் திட்டம் இதுவாகும்.
இதற்கு முன்பு இந்தியாவில் செமிகண்டக்டர்களை உருவாக்கும் முயற்சி எதிர்பாத்த பலன்களை அளிக்கவில்லை. ஆனால் சீனாவுக்கு எதிராக தொழில் நுட்பத்தில் அமெரிக்கா தற்சார்பு நிலையை எட்டுவதை இலக்காக கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு ஒரு உந்துதலை அளிக்கும்.
அதிநவீன உணரும் தன்மை (advanced sensing), அதிநவீன தொடர்பு (advanced communications), மற்றும் அதிக வோல்டேஜ்களைக் கொண்ட பவர் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை உருவாக்குதல் என்று நவீன போரிடலுக்கு தேவையான மூன்று அம்சங்களை மையப்படுத்தி இந்த ஆலை உருவாக்கப்படலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீக்கியத் தலைவர்கள் தாக்கப்படுவது குறித்து எதுவும் சொல்லாத அறிக்கை
அமெரிக்கா மற்றும் கனடாவில் சீக்கிய தலைவர்கள் தாக்கப்படுவது குறித்து எந்தவிதமான அறிக்கையையும் கூட்டாக இந்த தலைவர்கள் வெளியிடவில்லை.
இந்தியாவில் சீக்கியர்களுக்கென தனி நாடு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீக்கிய பிரிவினைவாத தலைவர்கள் பல தசாப்தங்களாக கோரி வருகின்றனர். இந்திய அரசால் ஆதரிக்கப்பட்ட குழுவினரால் அவர்கள் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றம்சாட்டினார்கள். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.
டிரம்பை சந்திக்காத மோதி
மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோதி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அவர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இன்னும் சில வாரங்களே இருக்கின்ற சூழலில் இந்தப் பயணம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக இரண்டாவது முறையாக அதிபராகும் முயற்சில் ஈடுபட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு எதிராக கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றனர் ஜனநாயகக் கட்சியினர்.
கடந்த வாரம், டிரம்ப் மோதியை ‘மிகச்சிறந்த மனிதர்’ என்று குறிப்பிட்டு அவரைச் சந்திக்க இருப்பதாக கூறினார். ஆனால் இந்திய அதிகாரிகள் இது குறித்து மௌனம் காத்து வருகின்றனர். இதுவரை மோதியும் டிரம்பும் சந்தித்துக் கொள்ளவில்லை.
இந்திய பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பு குறித்து குவாட் கூட்டமைப்பின் தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
“படை அல்லது அழுத்தம் காரணமாக ஏற்கனவே இருக்கும் நிலையை ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் மூலமாக மாற்ற நினைப்பதையோ, சீர்குலைப்பதையோ நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம். எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் மீது ஆதிக்க செலுத்தாத ஒரு பிராந்தியத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். அங்குள்ள அனைத்து நாடுகளும் இத்தகைய அழுத்தங்களுக்கு ஆளாகமால் சுயேச்சையாக அவர்களின் எதிர்காலம் குறித்து திட்டமிடலாம்,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சீனாவை கண்டிக்கும் குவாட் உறுப்பு நாடுகள்
அரசியல் மதிப்பீட்டாளர்கள், இந்த அறிக்கை சீனாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள செய்தி சீனாவிற்காகவே உருவாக்கப்பட்டது, என்கின்றனர். மேலும் இந்த அறிக்கையின் மொழிப் பயன்பாட்டில் உள்ள வீரியத்தையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
“தென்சீன கடல் பிராந்தியத்தில் நிலவும் நிகழ்வுகள் குறித்தே இந்த அறிக்கை குறிப்பிடுகிறது என்றாலும் கூட நேரடியாகச் சீனாவை அது மேற்கோள் காட்டவில்லை. ஆனால் இந்த அறிக்கை முன்பு எப்போதும் இல்லாததைக் காட்டிலும் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது. ஏனென்றால் நான்கு குவாட் உறுப்பு நாடுகளும் இந்த பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடு குறித்து அதிக கவலை அடைந்துள்ளன,” என்று வாஷிங்டனில் உள்ள வில்சன் சிந்தனைக் கூடத்தில் செயல்பட்டு வரும் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகெல்மான் கூறினார்.
இந்த குவாட் கூட்டமைப்பு இந்த பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை அதிகரிக்க இருப்பதாகவும், இயற்கை இடர்பார்டுகளைச் சமாளிக்கும் வகையிலான வலையமைப்பை உருவாக்கும் புதிய திட்டம் குறித்தும், கர்ப்பப்பைப் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்தும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.