ஐரோப்பா வழியாக யுக்ரேனுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
“இந்திய ஆயுத உற்பத்தியாளர்கள் ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வெடிபொருட்களை விற்றுள்ளனர். இதை அவர்கள் யுக்ரேனுக்கு கொடுத்து இருக்கிறார்கள், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது” என்று செப்டம்பர் 19ஆம் தேதியன்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து வரும் எதிர்ப்பையும் மீறி, இந்தியா இதற்கான எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தியை நாங்கள் பார்த்தோம். இந்தச் செய்தி பொய்யானது மற்றும் தவறாக வழிநடத்துவதாக உள்ளது. இந்தியா விதிகளை மீறியதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பது முற்றிலும் தவறு” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை அன்று கூறினார்.
“ராணுவ மற்றும் மற்ற பயன்பாட்டுப் பொருட்களுக்கான ஏற்றுமதி குறித்த சர்வதேச சட்டங்களை, எப்போதும் இந்தியா சரியாகப் பின்பற்றி வருகிறது. அதிக அளவில் ஆயுத பயன்பாட்டைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான் இந்தியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி கூறுவதென்ன?
இந்தியா, ஐரோப்பா மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த 11 அதிகாரிகளுடனான உரையாடல்களின் அடிப்படையில் இந்தச் செய்தியை ராய்ட்டர்ஸ் வெளியிட்டது.
ரஷ்யாவிற்கு எதிராக யுக்ரேனின் பாதுகாப்பை ஆதரிக்கும் விதமாக இந்த ஆயுதப் பரிமாற்றம் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஆயுத ஏற்றுமதியைப் பொறுத்தவரை, யாருக்கு விற்கப்படுகிறதோ அவர் மட்டுமே அந்த ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே விதியாக உள்ளது. யாரேனும் இந்த விதிகளை மீறினால் அல்லது சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தாலோ அவர்களுடனான ஏற்றுமதி நிறுத்தப்படும்.
இந்த விஷயம் குறித்து ரஷ்யா இரண்டு முறை கேள்வி எழுப்பியதாக மூன்று இந்திய அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஜூலை மாதம் சந்தித்தபோது, இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ள கருத்துகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
“இந்தியா யுக்ரேனுக்கு எந்த பீரங்கி குண்டுகளையும் வழங்கவில்லை அல்லது விற்கவில்லை” என்று ஜெய்ஸ்வால் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூறியிருந்தார்.
“ஐரோப்பா வழியாக இந்திய ஆயுதங்கள் யுக்ரேனுக்கு வழங்கப்பட்டது உண்மையெனில், ஆயுத ஏற்றுமதி விதிகளை மீறியதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று ராய்ட்டர்ஸ் செய்தி குறித்து மூத்த பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவும் ஆயுத விநியோகமும்
“கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்துவிட்டது. 2029ஆம் ஆண்டுக்குள் அது 6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க வேண்டும்,” என்று ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
ரஷ்யா இந்தியாவின் ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்தியாவின் 60% ஆயுத இறக்குமதி ரஷ்யாவில் இருந்துதான் வருகிறது என ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகள்படி, 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ரஷ்யாவின் ஆயுதங்கள் 62%-இல் இருந்து 45% ஆகக் குறைந்துவிட்டது.
அதே மையம் இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாகக் கூறியுள்ளது. மேலும் இந்தியாவின் இறக்குமதியானது 4.7% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
இந்தியாவின் விமானப்படை ரஷ்யாவின் சுகோய் சு-30 எம்.கே.ஐ, எம்.ஐ.ஜி 29, மற்றும் எம்.ஐ.ஜி. 21 போர் விமானங்களை அதிகமாக நம்பியுள்ளது.
அதுமட்டுமின்றி ஏ.என்.32 ரக போக்குவரத்து வானூர்தி, எம்.ஐ.35, எம்.ஐ. 17 வி5 ஹொலிகாப்டர்கள், எஸ்-400 போன்ற வான்வழிப் பாதுகாப்பு சிஸ்டம் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இந்திய ராணுவம் ரஷ்யாவின் பீரங்கி வண்டிகளான டி-72, டி-90 ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா முந்தைய காலங்களில் அட்மிரல் கோர்ஷ்கோவாக பணியாற்றியது.
இருப்பினும் கடந்த காலங்களில் மத்திய அரசு ஆயுதங்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்தியாவும் இஸ்ரேல்-ஹமாஸ் போரும்
காஸா மீது கடந்த ஆண்டு போர் துவங்கிய பிறகு, இஸ்ரேலுக்கு நிறைய ஆயுதங்கள் தேவைப்பட்டது.
தி ஹிந்து தன்னுடைய செய்தியில், “இந்தியா அப்போது ஒரு கொள்கை முடிவை எடுத்திருந்தது. அதன்படி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை. இந்தியா இரண்டு தரப்பினருக்கும் ஆயுதங்களை வழங்காமல் நடுநிலையாக நடந்துகொண்டது,” என்று பாதுகாப்புத் துறை தரப்பில் இருந்து கூறியதாகக் குறிப்பிட்டிருந்தது.
பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தி ஹிந்துவிடம், “இஸ்ரேலுக்கு 155 மற்றும் 105 மிமீ அளவுள்ள குண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் நாங்கள் அவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தோம். இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்களின் அளவு மிகவும் குறைவு,” என்று குறிப்பிட்டார்.
போர் காரணமாக இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கும் ஆயுதங்களின் அளவும் குறைந்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகாள் யுக்ரேன் – இஸ்ரேல் போரில் யுக்ரேனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் போரிலும் அமெரிக்கா இஸ்ரேலின் பக்கம் நிற்கிறது.
இந்தியா, ரஷ்யா, ஐரோப்பா
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போரை துவங்கியதும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பல்வேறு விதமான தடைகளை விதித்தது.
பொருளாதாரத் தடைகளை தாண்டியும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சாப் பொருட்களை வாங்கி வருகிறது. இந்தியாவும் இதனால் பயன் அடைந்துள்ளது.
அதன் பின்னர் இந்தியா வழியாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கத் துவங்கினர். இந்தியா தற்போது மிகப்பெரிய விநியோகஸ்தராக மாறியது.
ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக கச்சா எண்ணெயை வாங்க முடியாத காரணத்தால் ஐரோப்பாவில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டனர். ஆனால் இந்தியா இதை ஒரு வாய்ப்பாகப் பார்த்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கி ஜனவரி 2023 வரை இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியான சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோலியம் 11.6 மில்லியன் டன்னாக அதிகரித்தது.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்கும் முதல் 20 நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் முதலிடம் வகித்தது.
ரஷ்யா – யுக்ரேன் போருக்கு முன்னர், ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சாப் பொருட்கள் 1% மட்டுமே. ஆனால் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அது 35% ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்ய பெட்ரோலிய பொருட்கள் ஐரோப்பாவை அடைந்த பிறகு, ஐரோப்பிய ஆணையம், “ரஷ்யாவின் எண்ணெயில் இருந்து உருவாக்கப்பட்ட பொருட்கள் அதிக அளவில் ஐரோப்பிய சந்தைகளுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இதைச் சமாளிக்க வழிகளைக் கண்டறிய வேண்டும்,” என்று கூறியது.
ஆயுதங்களில் தற்சார்பை நோக்கி நகரும் இந்தியா
இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் அறிவிப்புப்படி, இந்தியா 84 நாடுகளுக்கு ஆயுதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதில் யுக்ரேனும் ஒன்று.
தலைக்கவசம், தோட்டாக்கள் தாக்காத ஜாக்கெட்டுகள் உட்படப் பல்வேறு ராணுவம் சார்ந்த பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
யுக்ரேனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் துப்பாக்கி பாகங்களும் அடங்கும்.
பாதுகாப்புத்துறை அமைச்சகம் 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்திய ராணுவ தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 10 ஆண்டுகளுக்கு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சுமார் 5,300 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திய ராணுவத்திற்குத் தேவையான மின்னணு வெடிகுண்டு உதிரிபாகங்களை தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடந்த மே மாதம் வெளியான எக்கனாமிக் டைம்ஸின் செய்தியின்படி கடந்த சில ஆண்டுகளாக, பாதுகாப்புத் துறைக்குத் தேவையான உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்கவும், இறக்குமதியைத் தடை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியிருந்தது.
இதற்காக உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாதுகாப்புத் துறை கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் 12,300 பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. டிஃபென்ஸ் ப்ரொடெக்ஷன் துறை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 346 ஆயுதங்கள் சார்ந்த பொருட்களை வாங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், பாதுகாப்புத்துறை ரூ.7500 கோடி மதிப்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு