மத்திய கிழக்கில் மிகவும் கடுமையான போர் மூளும் அபாயம் இருப்பதைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. அதை நிறுத்துவதற்கான செயலில் இறங்கி வேண்டிய நேரம் வந்துவிட்டது.
லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதலைத் தொடர்ந்து, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றதாக இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டது. ஹெஸ்பொலாவும் தனது டெலிகிராம் பதிவில் இந்தத் தகவலை உறுதி செய்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்தவர்களின் கூற்றுப்படி, அதுவொரு பெரிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்.
இதுவரை நான் லெபனான் மோதல்கள் பற்றிக் கேள்விப்பட்டதில் இதுதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்று நகரத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் கூறினார்.
தாக்குதல் நடந்த இடங்களில், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
முன்னேற்றிச் செல்ல முடிவெடுத்த இஸ்ரேல்
ஹஸன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, இஸ்ரேலின் மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது. இஸ்ரேலின் ‘பெரிய எதிரி’ எனக் கருதப்பட்ட ஓர் அமைப்புக்கு எதிராக அவர்கள் பெற்றுள்ள இந்த மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டும்.
இஸ்ரேல் மேலும் பல வீரர்களைத் திரட்டியுள்ளது. லெபனான் மீது தரைவழித் தாக்குதலைக்கூட மேற்கொள்ள அவர்கள் பரிசீலித்துக் கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மிகப்பெரிய தீவிரத்தை எட்டக்கூடிய நடவடிக்கை இது. கடந்த 11 மாதங்களாக இரு தரப்பினருக்கும் இடையே மாறி மாறி மோதல்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் இஸ்ரேல் தரப்பு லெபனானுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த மோதலில் முன்னேறிச் செல்ல இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது.
ஹமாஸுக்கு எதிரான போரைப் போலன்றி, இஸ்ரேல் 2006இல் இருந்து இந்தப் போரைத் திட்டமிடுகிறது. ஹமாஸ் உடனான மோதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஹெஸ்பொலாவுக்கு எதிரான போரை நீண்ட காலமாகத் திட்டமிட்டு வருகின்றனர். இப்போது அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.
ஹெஸ்புலாவிற்கு முன்னால் பெரிய சவால்கள் உள்ளன, இஸ்ரேலிய ராணுவம் ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்வது உண்மையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்ரேல் அவர்களுக்கு முன் பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
ஹெஸ்பொலா முன்பாகப் பெரிய சவால்கள் உள்ளன. இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹெஸ்புலா நிலைகள் மீது தொடர்ந்து குண்டுவீசி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
நெதன்யாகுவின் அச்சுறுத்தல்
முன்னதாக வெள்ளியன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறைந்தபட்சம் 21 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவு பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.
இந்த முன்மொழிவு இஸ்ரேலின் மிக முக்கியமான மேற்கத்திய நட்பு நாடுகளால் ஆதரிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மூலம் முன்மொழியப்பட்டது.
ஆனால் நியூயார்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் நெதன்யாகு முன்வைத்த பிடிவாதமான மற்றும் ஆக்ரோஷமான உரையில், ராஜதந்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இஸ்ரேலை “அழிக்க விரும்பும் காட்டுமிராண்டித்தனமான எதிரியுடன் போரிடுவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை” என்றார் நெதன்யாகு.
ஹெஸ்பொலாவை தோற்கடித்து காஸாவில் ஹமாஸ் மீது முழுமையான வெற்றி கிடைத்தால் மட்டுமே இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்புவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நெதன்யாகு, படுகொலை செய்யப்படவிருக்கும் ஆட்டுக்குட்டியாக இருப்பதற்குப் பதிலாக, இஸ்ரேல் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் கூறினார். இது நாஜி இனப்படுகொலையைக் குறிக்கும் இஸ்ரேலிய பழமொழி.
நெதன்யாகு உரை முடிந்ததும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனவே, லெபனானில் போர் நிறுத்தம் பற்றிய விவாதம் இஸ்ரேலின் திட்டத்தில் இல்லை என்பதற்கான அறிகுறி இது.
எதிரிகள் எங்கிருந்தாலும், இஸ்ரேல் அவர்களைக் குறிவைத்துத் தாக்கும் என்ற நெதன்யாகுவின் அச்சுறுத்தலுக்குப் பிறகு உடனடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
மறுபுறம், இந்தப் பெரிய தாக்குதல் குறித்து இஸ்ரேல் தங்களுக்கு எந்த முன் தகவலும் தெரிவிக்கவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்த நெதன்யாகு
ஜெருசலேமில் உள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பல தகவல் தொடர்பு சாதனங்களுக்கு மத்தியில் நெதன்யாகு அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.
மேலும் அந்தப் புகைப்படம் நியூயார்க் நகரில் உள்ள ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலுக்கு அவர் அனுமதி வழங்கிய தருணத்தின் படம் இது என்று அந்தப் படத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தான் பல மாதங்களாக முன்னிறுத்த முயன்று வரும் கொள்கையின் பக்கமே நிற்கிறார். அவர் பேச்சுவார்த்தைக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக நம்புகிறார். இருப்பினும், அந்தக் கூற்று நம்ப முடியாத ஒன்றாகத் தெரிகிறது.
இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு அமெரிக்காவுக்கு இல்லை. ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸ் அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளதால் சட்டரீதியாக அவர்களுடன் பேச முடியாது.
மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில், கடந்த ஆண்டைப் போல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தாக்குதல் நடத்திய அடுத்த சில நாட்களிலேயே, ஹெஸ்பொலா தாக்கப்பட வேண்டுமென்று இஸ்ரேல் அரசாங்கத்திலும் ராணுவத்திலும் உள்ள சக்திவாய்ந்த நபர்கள் வாதிட்டனர்.
அமெரிக்காவின் ஆலோசனைகளைப் புறக்கணித்த இஸ்ரேல்
லெபனானில் இருக்கும் தனது எதிரிகளுக்கு ஒரு பலமான அடியைக் கொடுக்க முடியுமென்று இஸ்ரேலின் சக்திவாய்ந்த நபர்கள் வாதிட்டனர். இருப்பினும், அமெரிக்கா அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களை வற்புறுத்தியது. முழு பிராந்தியத்திலும் ஒரு போர் வெடிப்பது இஸ்ரேலின் பாதுகாப்பிற்குப் பயனளிக்காது என்று அமெரிக்கர்கள் வாதிட்டனர்.
ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இஸ்ரேல் போரிடும் விதம் குறித்த அமெரிக்க அதிபர் பைடனின் அறிவுறுத்தல்களை மீறுவதை நெதன்யாகு வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
பெய்ரூட் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட போர் விமானங்கள் மற்றும் குண்டுகளை இஸ்ரேலுக்கு வழங்கிய போதிலும், அதிபர் பைடனும் அவரது குழுவினரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.
ஆதரவளிப்பது, ஆயுதங்களை வழங்குவது, ராஜதந்திர பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் நெதன்யாகு மீது செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதாகவே, இஸ்ரேலின் வாழ்நாள் ஆதரவாளராக கடந்த ஆண்டு முதல் அதிபர் பைடனின் கொள்கை இருந்தது.
இஸ்ரேல் போர்புரியும் விதத்தை மாற்றுவது மட்டுமின்றி, அதனுடன் இணைந்து சுதந்திர பாலத்தீனிய அரசை உருவாக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் திட்டத்தை நெதன்யாகு ஏற்றுக்கொள்வார் என்று ஜோ பைடன் நம்பினார்.
இந்தப் போரில் பல பாலத்தீன மக்கள் கொல்லப்படுவதாகவும், இந்தப் போர் மக்களுக்குப் பெரும் துன்பத்தை அளிப்பதாகவும் அதிபர் பைடன் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனாலும், நெதன்யாகு பைடனின் ஆலோசனைகளை முற்றிலுமாக நிராகரித்தார்.
ஹெஸ்பொலாவின் நிலை என்ன?
பெய்ரூட் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கில் பெரியளவிலான போரைத் தவிர்ப்பதற்கு ஆதரவு மற்றும் ராஜதந்திரத்தின் கலவை தேவை என்று பிளிங்கன் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால், நிலைமை அமெரிக்காவின் கையை மீறிவிட்டதால், அவர்களின் பார்வை நம்பத்தகுந்ததாகத் தெரியவில்லை.
இனி வரும் காலங்களில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும்.
முதலில், ஹெஸ்பொலா தனது ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது பெரிய தாக்குதலை நடத்துவார்களா? மீதமுள்ள ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தாவிட்டால், இஸ்ரேல் அவற்றை அழித்துவிடும் என்று அவர்கள் நினைக்கலாம்.
இஸ்ரேல் தரப்பு அதன் முடிவுகளின் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் ஏற்கெனவே லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவது பற்றிப் பேசியுள்ளனர். மேலும் அவர்கள் இன்னும் தேவையான படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், அவர்களின் ராணுவம் சனிக்கிழமையன்று “ஒரு பெரியளவிலான நடவடிக்கைக்குத் தயாராக இருப்பதாக” கூறியது.
லெபனானில் உள்ள சிலர் தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்திற்குப் பெருமளவிலான சேதத்தை ஹெஸ்பொலா ஏற்படுத்தக்கூடும் என்று நம்புகின்றனர்.
மேற்கத்திய ராஜதந்திரிகள் ராஜதந்திர தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுப்பதன் மூலம் பிரச்னையைச் சரிசெய்ய நம்புகின்றனர். இந்த ராஜதந்திரிகளில் சிலர் இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடுகளாகவும் உள்ளனர்.
இப்போது இந்த ராஜதந்திரிகள் பெரும் ஏமாற்றத்துடனும், ஆதரவற்ற உணர்வுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.