ஹெஸ்பொலாவைக் குறித்து லெபனானில் எழும் விவாதங்களுக்கு மத்தியில் இஸ்ரேலுடனான அக்குழுவின் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஹெஸ்பொலா ஒரு ஷியா ஆயுதக்குழு. காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவத் தளங்கள் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.
எவ்வாறாயினும், லெபனானில் ஹெஸ்பொலா ஆதரவாளர்களுக்கும் ஹெஸ்பொலா எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான பிரிவினையை எளிதில் சரி செய்ய முடியாது.
பல வருடங்களாக ஹெஸ்பொலா பற்றிய மாறுபட்டக் கருத்துக்கள் லெபனானில் அரசியல் விவாதங்களின் மையக் கருப்பொருளாக இருந்து வருகின்றன.
பொதுவெளி மற்றும் தனிப்பட்ட முறையில் மக்களின் உரையாடலில் ஹெஸ்பொலாவை மையமாக வைத்துப் பேசுவது அதிகரித்து வருகிறது.
அந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட லெபனான், சிந்தனை மற்றும் பேச்சு சுதந்திரம் மிக அதிகமாக இருக்கும் நாடு.
ஒரு லெபனான் குடிமகனாக, ஹெஸ்பொலாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் அதன் ஆயுதக் குவிப்பு பற்றி இதுவரை எத்தனை விவாதங்கள் நடந்தன என்பதை நான் நேரில் பார்த்தாக நினைவில் இல்லை.
லெபனான் மக்களின் கருத்து என்ன?
லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிக முக்கியமான ஒரு அரசியல் குழுவின் மீதான மக்களின் பார்வையை வரையறுக்கும் காரணங்கள் பலவை உள்ளன.
லெபனானில் இருக்கும் பல மதக் குழுக்கள் மற்றும் மத அடையாளங்கள் அங்குள்ள மக்களின் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஹெஸ்பொலாவின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஷியா முஸ்லிம்கள். மேலும், அதன் விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் சுன்னி முஸ்லிம்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் உட்பட ஷியா அல்லாதவர்கள். ஆனால் இது குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே உண்மை.
ஹெஸ்பொலாவை முற்றிலுமாக எதிர்க்கும் பல்வேறு மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைச் சேர்ந்த பல குழுக்கள் லெபனானில் உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை இரானின் பினாமிகளாகக் கருதப்படுகின்றன. லெபனான் எந்தப் பாதையை தேர்வு செய்ய வேண்டும்? போரா, அமைதியா? என்பதை இரான் தீர்மானிக்கிறது. அது லெபனான் அரசாங்கத்தைப் புறக்கணிக்கிறது.
பல குழுக்கள் ஹெஸ்பொலாவின் சக்தி வாய்ந்த ராணுவத்தை ஒழிக்க வேண்டும் என்று கோருகின்றன. அதே சமயம் சில குழுக்கள் பல விஷயங்களில் ஹெஸ்பொலாவுடன் உடன்படாமல் இருந்தாலும், அதன் ஆயுதக் குவிப்பை ஆதரிக்கின்றன.
கிறிஸ்தவ-இஸ்லாமிய கூட்டணி
சமீப காலம் வரை, ஹெஸ்பொலாவின் முக்கிய அரசியல் கூட்டாளியாக இருக்கும் சுதந்திர தேசபக்தி இயக்கம் (Free Patriotic Movement) ஒரு காலத்தில் மிகப்பெரிய கிறிஸ்தவக் கட்சியாக இருந்தது.
பல ஆண்டுகளாக, இந்தக் குழுக்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துக் கொள்ளும் ஒரு நடைமுறை உடன்பாட்டைக் கொண்டிருந்தன.
இதன் மூலம் சுதந்திர தேசபக்தி இயக்கம் மதிப்புமிக்க ஷியா அமைப்பை அரசியல் கூட்டாளியாகப் பெற்றது. அதே நேரத்தில் ஹெஸ்பொலா ஒரு கிறிஸ்தவக் கூட்டாளியைப் பெற்றது.
இந்த ஒப்பந்தம் தற்போது முறிந்துவிட்டது. ஆனாலும், லெபனானில் உள்ள பல்வேறு மதக் குழுக்கள், வெவ்வேறு மதச் சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும் கூட்டணிகளை உருவாக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.
தேசிய ராணுவத்தின் நிலை
ஒருபுறம் ஹெஸ்பொலா ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று சிலர் கோரும் அதே வேளையில் அதன் பலம் காரணமாக அதனை ஆதரிக்கும் மக்களும் உள்ளனர்.
ஹெஸ்பொலாவின் உள்வட்டத்தில் இல்லாத பலரும் அதன் தேவை இருப்பதாக ஆதரிக்கின்றனர். லெபனானின் தேசிய ராணுவம் ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. அதன் காரணமாக அதிக ராணுவ வலிமை கொண்ட ஹெஸ்பொலா அமைப்பு தொடர்ந்து ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
இஸ்ரேல் 1982-இல் லெபனானை ஆக்கிரமித்தது. அதன் பின்னர், 2000-ஆம் ஆண்டு வரை நாட்டின் தெற்குப் பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்தது. இன்றும் அதன் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது.
லெபனானில் இஸ்ரேலிய ராணுவத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரே படை ஹெஸ்பொலாவின் ராணுவம்தான்.
லெபனான் ராணுவத்திடம் வளங்கள் இல்லை. இது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைச் சார்ந்துள்ளது. அந்த ஆயுதங்களும் மேம்படுத்தப்படாத ஆயுதங்களாக உள்ளன.
இந்தச் சூழ்நிலையில், லெபனானில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஹெஸ்பொலாவை ஆதரிக்கிறார்கள். பொதுவாக அதன் மீது அனுதாபம் இல்லாதவர்கள் கூட அவ்வமைப்பை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் ஹெஸ்பொலா தனது போர் திறனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
லெபனான் மக்கள் ஹெஸ்பொலாவை ஆதரிப்பது ஏன்?
லெபனானில் உள்ள கூட்டணிகள் மற்றும் விரோதங்கள், நெருக்கடி அதிகரிக்கும் போது மாறக்கூடும். ஏனெனில், இஸ்ரேலுடனான எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மக்கள் தங்கள் தனிப்பட்டக் கருத்தை ஒதுக்கி வைத்து நாட்டின் நலனைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.
காஸாவிற்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வரும் ஹெஸ்பொலாவின் முடிவுகளைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, தற்போது அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஹெஸ்பொலா நாட்டை ஆபத்தான நெருக்கடிக்குள் இழுத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டியவர்களும் கூட, அதன் உறுப்பினர்களைக் குறிவைத்துச் சமீபத்தில் நடத்தப்பட்ட பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தி ஆதரவு தெரிவித்தனர்.
வயர்லெஸ் தகவல்தொடர்புகளில் ஏற்பட்ட பெரியளவிலான வெடிப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் மற்றும் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், இதற்கு இஸ்ரேல் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆனால், தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் ஹெஸ்பொலாவுக்கு ஆதரவு அதிகரித்தது. மேலும் தெற்கு பெய்ரூட்டுக்கு வெளியே மக்கள் அதிகம் உள்ள பகுதிகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவு பேராசிரியரான முனைவர் ஜமில் முவாத், “இது இயல்பாக நிகழ்ந்த மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது,” என்கிறார்.
“எனது கருத்து என்னவென்றால், இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு பரவலாக உள்ளது, மேலும் இந்த உணர்வு ஹெஸ்பொலா எதிர்ப்பு குழுக்களிடையே அதிகமாக உள்ளது,” என்கிறார்.
அவர் மேலும் பேசுகையில், “தற்போதைக்கு பரஸ்பர கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். இஸ்ரேல் செய்யும் அட்டூழியங்களைப் பார்க்கும்போது, இது ஒரு கருத்தியல் அல்லது அரசியல் ரீதியாக அணுகினால் போதாது, தார்மீக ரீதியாகவும் அணுக வேண்டும்,” என்கிறார்.
ஆனால் ஹெஸ்பொலா மீதான வேறுபட்ட கருத்து நிலவி வருவது உண்மைதான். மேலும் இஸ்ரேல் அவற்றை அதிகரிக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இஸ்ரேலியப் போர் விமானங்கள் தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு முழுவதும் குண்டுகளை வீசியுள்ளன.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனான் மக்களுக்கு ஒரு உரையில், “இஸ்ரேலின் போர் உங்களை எதிர்த்து இல்லை. அது ஹெஸ்பொலாவுடன் நடக்கிறது,” என்றார்.
லெபனானுக்குள் ஹெஸ்பொலா எவ்வளவு ஆதரவைப் பெற முடியும் என்பது எல்லையில் மோதல் வெடிக்கிறதா அல்லது அமைதி நிலவுகிறதா என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.