0
“வடக்கு, கிழக்கில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்காக அயராது உழைத்த எமது கட்சியின் தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், அபிமானிகள் ஆகியோருக்கும், எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை, நிர்வாகங்களை அமைப்பதில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றைய கட்சியினருக்கும் எமது நன்றிகள்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு, கிழக்கில் கடைசியாக இரண்டு சபைகள் இன்று அமைக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இரண்டிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைத்திருக்கின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 58 சபைகளில் போட்டியிட்டாலும், 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றார்கள். ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம். அப்படிப் போட்டியிட்டுப் பிரதிநிதித்துவத்தையும் பெற்றும் கொண்டோம்.
மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது. ஆகவே, 58 சபைகளில், 46 இல் எமது இலக்கை அடைந்துள்ளோம். மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றோம்.
இது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றி என்பதற்கு அப்பால், மக்கள் எமக்குக் கொடுத்திருக்கும் ஆணையாக நாம் ஏற்றுக்கொண்டு உள்ளூராட்சி சபைகளின் முழு அதிகாரங்களையும் உபயோகித்து மக்களுக்குச் சேவையாற்றுவோம்.
இந்த மாபெரும் வெற்றிக்காக அயராது உழைத்த எமது தலைவர், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், அபிமானிகள் ஆகியோருக்கும், எமது வேட்பாளர்கள் அனைவருக்கும் கட்சி சார்பில் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்தோடு நிர்வாகங்களை அமைப்பதில் ஜனநாயகத் தீர்ப்புக்களை மதித்து தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளில் எம்மோடு ஒத்துழைத்த மற்றைய கட்சியினருக்கும் எமது நன்றிகள்.” – என்றார்.