• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

வவுனியா நகருக்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்த காட்டு யானை (படங்கள் இணைப்பு)

Byadmin

Jul 13, 2025


வவுனியா நகர் பகுதிக்குள் இன்று காட்டு யானை ஒன்று நுழைந்தமையால் உடமைகள் சில சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த யானை அதிகாலை தவசிக்குளம், மேட்டுத்தெரு, தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்துள்ளது.

இதன்போது, தோணிக்கல் பகுதியில் வீடொன்றைச் சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளது.

தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த யானை சந்தை உள்வட்ட வீதி ஊடாகச் சென்று தினச் சந்தைக்கு பின் பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது. இதன்போது சில கட்டடங்களின் மதில் சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.

வவுனியா குளத்தில் இறங்கிய யானை பல மணிநேரமாக வெளியே வர முடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிந்தது.

சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குத் தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற அவர்கள் யானையைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இந்தக் காட்டு யானை வழி தவறி நகரப் பகுதிக்குள் வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

By admin