பட மூலாதாரம், TVK
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுப் புதிய அரசாங்கத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மறுபுறம், அவர் மாநில முதல்வராக எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்து வருகின்றன.
பன்னெடுங்காலமாக, மாநில ஆட்சி, திமுக, அதிமுக என இருபெரும் திராவிடக் கட்சிகளுடைய ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அவற்றின் சித்தாந்த வேர்கள், நலத்திட்ட அரசியல் ஆகியவை தேர்தல் முடிவுகளையும் நிர்வாகக் கட்டமைப்பையும் வடிவமைத்துள்ளன.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, தவெக-வின் வெற்றி என்பது ஓர் அரசியல் அதிர்ச்சியாக மட்டுமின்றி, அதுவொரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதையும் குறிக்கிறது.
இருப்பினும், தேர்தல் வெற்றி என்பது தொடக்கம் மட்டுமே. சினிமா கவர்ச்சியில் இருந்து நகர்ந்து ஆட்சியின் சிக்கலான எதார்த்தங்களை எதிர்கொள்ளும் காலகட்டம், எந்தவொரு புதிய அரசியல் இயக்கத்திற்கும் மிகவும் கடினமான கட்டமாக அமையக்கூடும்.
விஜய் தலைமையில் அமையப்போகும் புதிய அரசு, நிதி மேலாண்மை, நிர்வாகச் செயலாக்கம், தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்தல், கணிசமான எண்ணிக்கையில் சட்டப்பேரவையில் பங்கு வகிக்கப் போகும் எதிர்க்கட்சிகளைச் சமாளித்தல் எனப் பல அடுக்குகளில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்படிக் காத்திருக்கும் சவால்கள் யாவை? இங்கு விரிவாகக் காண்போம்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுதில் எழக்கூடிய நிதிச் சிக்கல்
தமிழ்நாடு, ஒப்பீட்டளவில் வலுவான வருவாய் தளத்தைக் கொண்ட, இந்தியாவின் அதிக தொழில்மயமான மாநிலங்களில் ஒன்று. இருப்பினும், அது கணிசமான கடனையும் கொண்டுள்ளது மற்றும் அதிகரித்து வரும் செலவினக் கடமைகளையும் எதிர்கொள்கிறது.
தவெக, அதற்கேற்ற வருவாய் திரட்டல் இல்லாமல், அதிக செலவுள்ள மக்கள் நலத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முயன்றால், அது நிதிப் பற்றாக்குறையை விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது, கடன் குறித்த கவலைகளைத் தூண்டி, எதிர்காலக் கடன்களைக் கட்டுப்படுத்தி, உள்கட்டமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சிகளில் முதலீடு செய்யும் அரசாங்கத்தின் திறனைக் குறைக்கக்கூடும்.
தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. குறிப்பாக, பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப் புடவை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களின் தாயார்களுக்கு ரூ.15,000 கல்வி உதவி, மகளிர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வட்டியில்லா கடன் போன்ற திட்டங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதிகளை அறிவித்தார்.
அதேபோல, இளைஞர்களைக் கவரும் வகையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் வரையிலான உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடன் போன்ற வாக்குறுதிகளையும், விவசாயிகளைக் குறிவைத்து, நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க்கடன்கள் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.
இப்படியான நலத்திட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு “சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படக்கூடும். அந்த நிதியைத் திரட்டுவதற்கான வழிகளைக் கண்டறிவதே விஜய் முன் இருக்கும் முதன்மையான சவால்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிவபிரியன்.
பட மூலாதாரம், TVK
திட்டங்களை தள்ளிப்போடுவாரா விஜய்?
இந்த வாக்குறுதிகளில், பெண்களுக்கு திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, பிறக்கும் பெண் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குதல் ஆகிய திட்டங்கள் பெரியளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில், அவற்றை நடைமுறையில் அமல்படுத்துவதற்குப் பெருமளவிலான நிதி இருப்பை விஜய் உறுதிசெய்தாக வேண்டியுள்ளது.
இவற்றில், “ஒருமுறை செயல்படுத்தப்படும் திட்டங்களைச் செயல்படுத்த சுமார் ரூ.37,800 கோடி தேவைப்படும். அதேவேளையில், கணிக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், இரண்டு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி ரூபாய் அரசுக்குத் தேவைப்படும்.
அதேபோல, ஒரு குடும்பத்திற்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.12,408 கோடி தேவைப்படும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. 2026-27 நிதியாண்டில் இந்த அளவு சுமார் 11 லட்சம் கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிதிச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதை விஜய் சில காலத்திற்குத் தள்ளிப்போட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்,” என்கிறார் சிவபிரியன்.
மேலும், நலத்திட்டங்கள் பெரும்பாலும் தொடர்ச்சி மற்றும் விரிவாக்கம் குறித்த எதிர்பார்ப்புகளை மக்களிடையே உருவாக்குகின்றன. ஒருமுறை அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றைத் திரும்பப் பெறுவதோ அல்லது மாற்றியமைப்பதோ அரசியல் ரீதியாகக் கடினமாகிவிடும்.
இத்தகைய சூழலில், நம்பத்தன்மையை நிலைநாட்ட விரும்பும் ஒரு புதிய கட்சி, அரசின் நிதி நிலையைச் சீர்குலைக்காமல், திறமையான திட்டங்களாக நலத்திட்ட வாக்குறுதிகளை மறுசீரமைக்க முடியுமா என்பது தவெக-வுக்கு ஒரு சோதனையாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
‘ஆரம்பக் கட்டமே கடினமாக இருக்கும்’
விஜயின் வருகை புதுமையானது
தமிழ்நாட்டில் திரை பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது என்பது புதிய விஷயமல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், விஜயகாந்த், சீமான் எனப் பலரும் தமிழ் சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கிய பல தருணங்களை மக்கள் கண்டுள்ளனர்.
குறிப்பாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வளர்ச்சியும் மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவும் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது. இருப்பினும், இவையனைத்தில் இருந்தும் விஜயின் பிரவேசம் முற்றிலும் மாறுபட்டது, புதுமையானது.
எம்.ஜி.ஆர் 1953 வரை காங்கிரஸில் உறுப்பினராக இருந்து, பின்னர் திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, திமுகவில் இணைந்து, பல ஆண்டுகள் பணியாற்றி 1967இல் முதல்முறையாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். பின்னர், 1972இல் தனிக்கட்சி தொடங்கி, 1977இல் முதல்வரானார். ஜெயலலிதா விஷயத்திலும் அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர், பிரசார செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் போன்ற நிலைகளைக் கடந்தே முதல்வர் பதவிக்கு வந்தார்.
ஆனால், “விஜயின் எழுச்சி இவை அனைத்திற்கும் மாறாக அதிவேகமாக இருக்கிறது. அது பெரும்பாலும் ரசிகர் இயக்கத்தின் ஆற்றலால் முன்னெடுக்கப்பட்டு, அரசியல் கட்சியாக வடிவம் பெற்று, வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது. எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாமல், புதிதாகக் கட்சி தொடங்கிய மிகச் சில ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவரை பிற திரை நட்சத்திரங்களே கூட சாத்தியமாக்கியிராத ஒன்று.
இதனால், அனைத்து வகையிலும் ஆட்சி அதிகாரத்திற்குப் புதிதாக இருக்கும் தவெக மற்றும் அதன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தைக் கையாளுவதில் பல சவால்களைச் சந்திக்கக்கூடும். இதனால், நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு, அமைச்சரவை அமைத்தல், அரசின் கொள்கைகளை வகுத்தல் போன்றவை ஆரம்பத்திலேயே விஜய்க்கு கடினமான பணிகளாக இருக்கலாம்,” என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
பட மூலாதாரம், Getty Images
வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வியின் தரம் அல்லது பொது சேவை வழங்கல் என அனைத்து மட்டங்களிலும் அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய மாற்றத்தை வலியுறுத்துவதைத் தனது தேர்தல் முழக்கமாக தவெக முன்வைத்தது.
இத்தகைய லட்சியங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்த விரிவான திட்டமிடல், துறைகள் முழுவதும் நிறுவன ரீதியான ஒருங்கிணைப்பு போன்றவை அவசியம். இதை நிர்வகிப்பதற்கு தவெக-விடம் நிர்வாகரீதியான ஆழமும் அனுபவமும் இல்லை.
ஆகையால், இந்த விஷயத்தில் ஓர் ஆளும் கட்சியாக அவர்கள் அதிக சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மூத்த பத்திரிகையாளர் சிவபிரியனின் கூற்றுப்படி, அரசு இயந்திரமே விஜய்க்கு வழிகாட்டும் என்பதால் அவர் செய்ய வேண்டியதெல்லாம், சரியான அதிகாரிகளைக் கண்டறிந்து, சரியான இடங்களில் நியமிப்பது மட்டுமே.
இருப்பினும் விஜய் கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு முக்கியமான விஷயம் இருப்பதாகக் கூறுகிறார் சிவபிரியன். “அவருக்கு உண்மையான சவால் தவெக-வுக்கு உள்ளிருந்தே எழும். ஏனெனில், தனது வெற்றிக்காக உழைத்தவர்களின் எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்தாக வேண்டும்.
கட்சிக்குள் அதிகாரத்திற்கான போட்டி நிச்சயமாக இருக்கும். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதே வேளையில் அவர் தனது கட்சிக்காரர்களையும் திறம்படக் கையாள வேண்டியிருக்கும்,” என்று அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தப் போகும் அழுத்தம்
ஆட்சியை இழந்துள்ள திமுக, தனது உட்கட்சிச் செயல்பாடுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அதே வேளையில், வலுவான எதிர்க்கட்சியாக மிகுந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. மேலும், மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு இருந்தாலும்கூட, அதிமுக கூட்டணி ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களை சட்டப்பேரவையில் பெற்றுள்ளது.
கடந்த சுமார் அறுபது ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியில் இருந்த காரணத்தால், இரு கட்சிகளுமே ஆட்சி மற்றும் எதிர்க்கட்சி உத்திகளில் நன்கு தேர்ச்சி பெற்றவையாக இருக்கின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டின் 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில், இரு திராவிட கட்சிகளும் ஆட்சி வாய்ப்பை இழந்த பிறகும்கூட, நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளன. “பேரவையின் பாதி இருக்கைகளை நிரப்பி, எதிர்க்கட்சியாக அமரக்கூடிய சூழல் ஏற்பட்டுளளது. தவெக போன்ற ஒரு முன் அனுபவமில்லாத கட்சிக்கு, பல கட்சிகள் இணைந்த சட்டப்பேரவையை வழிநடத்துவது எளிதாக இருக்காது. இது எந்தவொரு முதல்முறை ஆட்சியாளருக்கும் சவாலான விஷயமாகவே இருக்கும்,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
இதனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, நெருக்கடிகளைக் கையாள்வதிலோ, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலோ ஏற்படும் எந்தவொரு சலசலப்பும் எதிர்க்கட்சிகளால் கூர்ந்து கவனிக்கப்பட்டு, அரசியல் களத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ஒரு புதிய ஆளும் கட்சியாக, இந்தச் சூழலைச் சமாளிக்க மீள்திறனும் வியூகரீதியான தகவல்தொடர்பு அணுகுமுறையும் தேவை. விஜயும் அவரது கட்சியும் திறம்பட ஆட்சி செய்வதுடன் மட்டுமின்றி, பொதுமக்களின் பார்வையை வடிவமைத்து, விமர்சனங்களை எதிர்கொண்டு, அரசியல் உத்வேகத்தையும் தக்கவைக்க வேண்டும்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டின் அரசியலை வடிவமைத்துள்ளன. தற்போது, “விஜயின் அரசியல், இந்த மரபுக்கு அருகில் இருந்தாலும், அதனுடன் முழுமையாக ஒன்றிப்போகவில்லை. இதனால் அவர் ஒருபுறம் திராவிட மரபின் வாரிசாகவும் மறுபுறம் இத்தனை ஆண்டுகளாக நீடித்த சூழலை மாற்றுபவராகவும் நிற்கிறார். அவருக்கு, சமூக நீதி மரபை மதிக்கவும், அதே நேரத்தில் திமுக-அதிமுக ஆட்சிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஆட்சி முறையை உருவாக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என்கிறார் மாலன்.
மேலும், பொது எதிர்ப்புகள் இந்த அழுத்தத்தை மேலும் அதிகரிக்கின்றன. தேர்தலில் விஜய் பெற்றுள்ள ‘வரலாற்று வெற்றி’ “அதிவேக மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் நிதி நிலைமை இறுக்கமாக உள்ளது. நீண்டகால நலத் திட்டங்கள் மற்றும் வருவாய் வரம்புகள் புதிய செலவுகளுக்கு இடமளிக்கும் வகையில் இல்லை” என்கிறார் மாலன்.
இந்த எதார்த்த நிலையுடன் பொருந்தக்கூடிய வடிவில் தனது வாக்குறுதிகளை விஜய் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டால், அதை எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்கான காரணிகளாகக் கையில் எடுத்து தவெக-வுக்கு கடுமையான சவால்களை உருவாக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
பரந்தூர் விமான நிலைய திட்டம்
இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் ஒரு நிலையான வேகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த வேகத்தை விஜய் தக்கவைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகக் கூறுகிறார் சிவபிரியன்.
அவரது கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து சாதனை அளவிலான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. சென்னை மற்றும் ஒசூர் அருகே அமைந்துள்ள ஃபாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் பிரமாண்ட உற்பத்தி ஆலைகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
திமுக அரசு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உண்மையான திட்டங்களாகச் செயல்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தது. இப்போது, தொழில்துறையை வழிநடத்தத் தனது சட்டப்பேரவை உறுப்பினர்களில் இருந்து தகுதியான நபரை விஜய் கண்டறிந்து நியமித்தாக வேண்டும்,” என்று விளக்குகிறார் சிவபிரியன்.
மேலும், வளர்ச்சித் திட்டங்களை மையமாகக் கொண்ட ஆட்சி முறையை விஜய் முன்னெடுத்தாக வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறிய அவர், குறிப்பாக பரந்தூர் விமான நிலைய திட்டத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.
அதுகுறித்து விளக்கியபோது, “சென்னைக்கு ஒரு புதிய விமான நிலையத்தின் தேவை அதிகமாக உள்ளது. அது இல்லாத காரணத்தால், பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களிடம் அது பல விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே, திமுக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முன்மொழிந்தது. அதை விஜய் கடுமையாக எதிர்த்ததால், அவருக்கு ஒரு சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் அவசியத்தை உணர்த்து அதற்கேற்ப முடிவெடுப்பாரா என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது,” என்றார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான உறவு
தமிழ்நாடு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு இந்திய அளவில் அறியப்படுகிறது.
அதோடு, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, மாநிலத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது எனப் பல விஷயங்களில் திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தார்.
“மாநில உரிமைகள், தன்னாட்சி ஆகியவற்றுக்கான முக்கியக் குரலாக தேசிய அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஸ்டாலின், மமதா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோர் இருந்து வந்தனர். அதில் குறிப்பாக, ஸ்டாலின் முன்னிலையில் நின்று பல விதமான முன்னெடுப்புகளை எடுத்தார்.
இதன் பின்னணியில் அவருடைய நீண்ட கால அரசியல் அனுபவம் பெரும் பங்காற்றுகிறது. திமுக-வின் தொடக்கப்புள்ளியே ஹிந்தி எதிர்ப்பு என்பதில்தான் தொடங்கியது. அக்கட்சியின் பல்லாண்டுக் கால செயல்பாடுகளில் ஸ்டாலின் பல முக்கியப் பங்குகளை வகித்துள்ளார். அதன் மூலம் அவருக்குக் கிடைத்த அனுபவம், இத்தகைய வலுவான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு எதிராக எடுத்து, உறுதியாக நிற்க அவருக்குக் கைகொடுத்தது,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் திவ்யா.
ஆனால், தவெக மற்றும் விஜயை பொறுத்தவரை, அரசியல் அனுபவம் என்பதே அவர்களுக்குப் புதியது என்பதால், இந்த விஷயத்தில் எப்படி செயலாற்றப் போகிறார்கள் என்பதை அடுத்தடுத்து நடப்பனவற்றை வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.
குறிப்பாக, இதுவரையிலான காலகட்டத்தில், விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த அளவுக்குக் கடுமையான எதிர்ப்பையோ கருத்துகளையோ மத்திய அரசு தொடர்பான விவகாரங்களில் வெளிப்படுத்தவில்லை.
அதோடு, “இதற்கு முன்பு வரை, எந்தப் பிரச்னைகளைப் பேசலாம், எதைத் தவிர்க்கலாம் என்பது அவரது கையிலேயே இருந்தது. ஆனால் இப்போது ஒரு முதலமைச்சராக அவர் அப்படி இந்த விஷயங்களை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் இதை எப்படிக் கையாளப் போகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார் திவ்யா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு