தமிழ்நாட்டில் இடதுசாரிகள் ஆதரவுடன் ஆளுநரை மூன்றாவது முறையாக விஜய் சந்தித்ததும் புதிய ஆட்சி அமைவதில் நிலவிய சிக்கல் தீரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினகரனும் ஆளுநரை சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.
‘அமமுக சார்பில் வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கே ஆதரவு தெரிவிக்கிறார்’ என்று ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அமமுக பொதுச் செயலாலர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
“தவெக வெளியிட்ட காணொளி ஏஐ ஆக இருக்கலாம்” டிடிவி தினகரன்
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்த பிறகு இன்று (மே 9) காலை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “எம்.எல்.ஏ காமராஜ் கடிதம் வழங்கியதாக வெளியான வீடியோவை எடுத்தது யார்? எங்கே எடுக்கப்பட்டது என அவர்கள் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்கும் சூழல் உருவானால் தேவைப்படும் என்பதற்காக நாங்கள் கடிதத்தை வழங்கினோம். நகல் கடிதத்தை வழங்கிய தவெகவினர் அசல் கடிதத்தை வழங்காதது ஏன்? அசல் கடிதம் எங்கே உள்ளது. என்னுடைய ஒப்புதலுடன் தான் கடிதம் வழங்கினார்கள் என்றால் அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.” என்றார்
தவெகவினர் வெளியிட்ட காணொளி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தினகரன், “அந்தக் காணொளியின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்றார். “காணொளியை வெளியிட்டவர்கள், அசல் கடிதத்தை ஏன் வழங்க மறுக்கிறார்கள். அந்த வீடியோ உண்மை எனக் கூறிவிட முடியாது. ஏஐ ஆகக் கூட இருக்கலாம். அது மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டோம். நான் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினேன் என அந்தக் கடிதத்தில் தவறாக குறிப்பிட்டுள்ளார்கள்.” எனத் தெரிவித்தார்.
குதிரை பேரம் செய்வதற்காக தான் இதைச் செய்துள்ளனர் எனக் குற்றம் சாட்டும் தினகரன் இதன் பின்னணியில் விஜய் தான் இருந்திருப்பார் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞருடன் ஆலோசித்து புகார் அளிப்பது பற்றி முடிவெடுப்போம் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Lok Bhavan, TN
“அதிமுகவை ஆட்சியில் அமர்த்த பின்வாசல் வழியாக நடவடிக்கை” – எம்.ஏ. பேபி குற்றச்சாட்டு
அதிமுக தலைமையிலான அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக திமுக தங்களிடம் பேசியதாக சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்த பாஜக முயற்சித்ததாக மதுரையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் புதிய கட்சிக்கு ஆதரவாக மக்களின் தீர்ப்பு வந்துள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்கள் கிடைத்துள்ளன. விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிக்கப்போகிறார் என ஆளுநர் கேட்கிறார். அது அவரின் பணி அல்ல. ஆளுநருக்கு எதிராக சிபிஎம் போராட்டம் நடத்தியது, அறிக்கை வெளியிட்டது. டெல்லியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் மக்கள் தீர்ப்புக்கு எதிராக செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாஜக உடன் கூட்டணியில் உள்ள அதிமுக தலைமையிலான அரசை பின்வாசல் வழியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனவும் அதற்கு எங்களுடைய எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்றும் ஆளுநருக்கு தெரிவிக்க முடிவு செய்தோம்.” என்றார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி (கோப்புப் படம்)
ஆளுநர் தான் குதிரை பேரத்துக்கான விவாதத்தை தொடங்கியுள்ளார் எனக் குற்றம் சாட்டிய பேபி, “விசிக இன்று 11 மணியளவில் ஆதரவுக் கடிதம் வழங்க வேண்டியிருந்தது. ஆனால் ஏனோ அது இன்னும் நடக்கவில்லை. சிபிஎம் எடுத்துள்ள முடிவு ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை திமுக தலைமையிடமும் தெரிவிக்க உள்ளோம். எந்தச் சூழலில் இந்த ஆதரவுக் கடிதத்தை வழங்கினோம் என்பதை தெரிவிக்க இடதுசாரி கட்சிகளின் மாநில தலைவர்கள் திமுக தலைமைக்கு நேரில் சென்று விளக்க உள்ளனர். நாங்கள் குதிரை பேரத்துக்கு எதிராக உள்ளோம். இந்த விவாதத்தை ஆளுநர் தான் உருவாக்கியுள்ளார். தனிப்பெரும் கட்சியை அவர் அழைத்திருந்தால் இந்த பிரச்னை எழுந்திருக்காது.” என்றும் தெரிவித்தார்.
முதல்முறையாக ஆளுநரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “விஜய் தரப்பு கொடுத்த ஆதரவு கடிதத்தில் காமராஜ் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த கடிதம் இருந்ததாக செய்தி வந்தது. அது போலியான கடிதம். ஒன்று இது மோசடியாக இருக்க வேண்டும் அல்லது குதிரை பேரமாக இருக்க வேண்டும். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளேன். காமராஜை நீண்ட நேரம் தொடர்புகொள்ள முயன்றபோதும் அவரிடம் பேச முடியவில்லை.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காமராஜ் ஆதரவு கடிதம் எழுதியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை பிபிசியால் உறுதி செய்ய முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்பட்ட அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜ் உடன் நள்ளிரவில் ஆளுநரை மீண்டும் சந்தித்தார் டிடிவி தினகரன். அப்போது ஆளுநர் அலுவலகத்திலிருந்து தங்களைத் தொடர்புகொண்டு அந்தக் கடிதம் உண்மைதானா எனக் கேட்டதாக தினகரன் தெரிவித்திருந்தார். அதோடு கடிதம் தொடர்பான செய்தி வந்ததும் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பதறி தன்னைச் சந்திக்க வந்ததாகவும் தினகரன் குறிப்பிட்டார்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, “குதிரை பேரம் சும்மா விட முடியாது” – டிடிவி தினகரன்
“காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்”
“தவெக தரப்பில் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்பட்டதாகக் கூறி எஸ்.காமராஜ் பெயரிலான கடிதத்தின் நகல் என ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மோசடியான செயல். அதன் அசலை ஆளுநர் கேட்டபோது கொண்டு வருகிறோம் எனக் கூறிவிட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். இதுவரை ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பையும் விசாரிக்க வேண்டும். ஆளுநரிடம் மீண்டும் புகார் அளிப்பேன்,” என செய்தியாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காமராஜ், “நான் புதுச்சேரியில் தங்கியிருந்தேன். ஆளுநர் மாளிகையிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள். 6 மணிக்கு ஆளுநர் அலுவலகத்திலிருந்து செயலாளர் பேசினார். தொலைக்காட்சியில் செய்தி வந்ததால் உடனடியாக வழக்கறிஞரை சந்தித்து ஆலோசித்தேன். ஆளுநரை நேரில் சந்தித்து விளக்குமாறு வழக்கறிஞர் கூறினார். புதுச்சேரியில் இருந்து நேரடியாக கிளம்பி சென்னை வந்தேன்.” எனத் தெரிவித்தார்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, “தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை” – அமமுக எம்.எல்.ஏ காமராஜ்
“இதுபோன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை” – திமுக எம்பி வில்சன்
அமமுக எம்.எல்.ஏ எஸ்.காமராஜின் பெயரில் ஆளுநரிடம் தவெக கடிதம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு எழுப்பிய செய்தியை மேற்கோள்காட்டி திமுக மாநிலங்களவை உறுப்பினர் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு பல ஆண்டுகளில் இதுபோன்ற குதிரை பேரத்தைக் கண்டதில்லை.” என விமர்சித்துள்ளார்.
அந்தப் பதிவில், “தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் கொண்டு வரப்போகிறோம் என அவர்கள் கூறியதை இப்போது புரிந்து கொள்கிறேன். பதவியேற்பதற்கு முன்பாகவே இது அனைத்தும் நடக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், P Wilson
படக்குறிப்பு, திமுக எம்பி வில்சன்
பெரும்பான்மையை திரட்ட தவெக முயற்சி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி முதலாவதாக ஆதரவு தெரிவித்திருந்தது.
108 இடங்களைப் தவெக பெற்றுள்ள நிலையில் இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 107 ஆக குறைகிறது. இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் 5 இடங்கள் சேர்த்து 112 இடங்கள் அதன் வசம் இருந்தன.
ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காண்பிக்காமல் பதவியேற்புக்கு அழைக்க முடியாது ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு வழங்குவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசிகள் தெரிவித்துள்ளன.
படக்குறிப்பு, தவெகவிற்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் சிபிஎம் கட்சியின் அலுவலகத்திற்கு விஜய் வந்திருந்தார்.
விசிக முடிவு என்ன?
இந்த நிலையில் தவெகவிற்கு ஆதரவு ஆதரவு அளிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை இணைய வழியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என விசிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் நேற்று இரவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.
இதற்கு மத்தியில் விசிகவின் பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம்-இனி, உயர்வோம் மேலும் மேலும்!” எனத் தெரிவித்திருந்தார்.
படக்குறிப்பு, தவெக துணை பொதுச் செயலாலர் வன்னிஅரசின் எக்ஸ் தளப்பதிவு